அருண் விஐய் அடுத்த படம்

ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள படத்திற்கு சினம் என தலைப்பிடப்பட்டிருக்கிறது.

அருண் விஜய் அஜித்திற்கு வில்லனாக என்னை அறிந்தால் படத்தில் நடித்ததன் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். இப்படத்தில் விக்டர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஈர்த்த அருண் விஜய், அதன் பின்னர் தனது படங்களை தேர்ந்தெடுக்கும் விதத்தில் அதீத கவனம் காட்டத் துவங்கினார்.

என்னை அறிந்தால் படத்திற்குப் பின் குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், தடம் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான ‘மாஃபியா’ படத்தை முடித்துக் கொடுத்த அருண் விஜய், அதனைத் தொடர்ந்து ‘பாக்ஸர்’ படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

இப்படத்தை விவேக் இயக்கி வருகிறார். ரித்விகா சிங் நாயகியாக நடித்து வருகிறார். ‘மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் அக்னிச் சிறகுகள் படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்தும் பணியாற்றி வருகிறார்.

அதனிடையில், ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் அருண் விஜய். இப்படத்தின் டைட்டில் போஸ்டர் கார்த்தி வெளியிட நேற்று(நவ.3) சமூக வலைதளங்களில் வெளியானது.

அருண் விஜய்யின் 30ஆவது படமான இதற்கு சினம் என தலைப்பிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஜி.என்.ஆர் குமரவேலன் நினைத்தாலே இனிக்கும், ஹரிதாஸ், வாகா போன்ற படங்களை இயக்கியவர். அருண் விஜய் இப்படத்தின் காவல் துறை அதிகாரியாக நடிக்கின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கியது. நாயகியாக பல்லக் லால் வாணி ஒப்பந்தம் ஆகியுள்ளார். மூவிங் ஸ்லைட்ஸ் நிறுவனம் சார்பில் விஜயகுமார் தயாரித்து வருகிறார். இசை ஷபீர், ஒளிப்பதிவு கோபிநாத்.