உலக நாடுகள் எல்லாம் அணு குண்டுகளை புதைத்துவிட வேண்டும். அதெல்லாம் தேவையில்லை. மனிதநேயங்கள் ஒன்று சேர வேண்டும். மருத்துவ உலகம் தலையோங்கி நிற்க வேண்டும் என்று கூறி வடிவேலு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
போர், வன்முறை, நோய்த் தொற்று, இனக் கலவரம் என மனிதனுக்கும் மனிதத்துக்கும் எது நேர்ந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுத்தபடியாக அதிகம் கவலை கொள்வது கலைஞர்கள் தான். முதலாம் உலகப் போரினால் தன் குழந்தைப் பருவத்தின் பசுமையை இழந்த சார்லி சாப்ளின் இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது, தன் குரலை தன் சினிமாக்களின் வாயிலாக பதிவு செய்து கொண்டிருந்தார். இன்னும் பல கலைஞர்களை இதே போல நாம் உதாரணம் காட்ட முடியும்.
வடிவேலு தனது வழக்கமான ஸ்டைலில் பேசியுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, “போர் தான் நடந்து கொண்டிருக்கிறது. எவன் பார்த்த வேலையோ என்னவோ இப்படி ஒரு வேலை பார்ப்பாய்ங்களா? உயிர்களெல்லாம் சாக வேண்டும். கார், கட்டடம், வீடு வாசல் எல்லாம் இருக்க வேண்டும். அப்படி ஒரு சட்டம் செய்திருக்கிறார்கள்.
பின்னர், தான் நடித்த வின்னர் படக் காமெடி ஸ்டைலில், “இப்ப இந்த வீட்டத் தாண்டி நீயும் வரக்கூடாது. நானும் வரமாட்டேன் என்கிறார்கள். அது கோடு. இது வீடு. கோடு, வீடு, ரோடு எதையும் தாண்டி வரக்கூடாது என்கிறார்கள். என்னா ஒரு சேட்டை. கேட்க மாட்டேங்குதுங்க இந்த பயபுள்ளைக. பிள்ளைகளுக்கு இப்போது நாம் கொடுக்கும் பாடம் காலங்காலத்துக்கும் அவர்கள் மனதில் நிற்கும். நமக்கு பிள்ளைகளை வளர்ப்பதற்கு இது நல்ல ஒரு சந்தர்ப்பம்.