கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படத்துக்கு ‘ரெட்ரோ’ என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக டீசர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
முழுக்க காதலை மையப்படுத்திய படம் என்று இப்படத்தின் கதை குறித்து கார்த்திக் சுப்புராஜ் அளித்த பேட்டியொன்றில் கூறியிருப்பது நினைவுக் கூரத்தக்கது.
‘கங்குவா’ சர்ச்சைக்குப் பிறகு வெளியாகவுள்ள படம் ‘ரெட்ரோ’. இப்படத்தினை மார்ச் மாதத்தில் வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்திருக்கிறது. 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது. ஒரே கட்டமாக இதன் படப்பிடிப்பை முடித்து, இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், பூஜா ஹெக்டே, கருணாகரன் உள்ளிட்ட பலர் இதில் சூர்யாவுடன் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
இப்படத்தின் பணிகளை முடித்துவிட்டு, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்தின் தலைப்பு ‘ஜானி’ என்று இணையத்தில் உலவி வந்தது. இதற்கு படக்குழு எந்தவொரு பதிலுமே அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.