திரைக்கதை பிடித்தால் மட்டுமே நடிப்பேன் – நானா படேகர்

இந்தியில் அனில் ஷர்மா இயக்கத்தில், நடிகர் நானா படேகர் நடித்துள்ள படம் ‘வான்வாஸ்’. டிசம்பர் 20ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் நானா படேகர் பேசுகையில், ”வான்வாஸ் திரைப்படம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் படமாக இருக்கும். தந்தையே உயர்ந்தவர் என்று போற்றும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது. அனைவரையும் கவரக்கூடிய வகையிலான இப்படத்தை பார்க்கும் ஒவ்வொரு தந்தையும், கண்டிப்பான தனது மகன்களையும் படத்தை பார்க்க சொல்வார்கள். அந்தளவிற்கு இன்றைய காலக்கட்டத்திற்கேற்ற உணர்வுபூர்வமான திரைப்படம் இது.அனில் சர்மா, புத்திசாலியான அற்புதமான இயக்குனர். அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் என்னுடைய சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும். ‘காதர் 2’ படத்திற்கு பிறகு அனில் எனக்கு ஒரு ஆக்க்ஷன் படத்தை கொடுப்பார் என நினைத்தேன். ஆனால், சிறந்த குடும்பப் படத்தை வழங்கியுள்ளார்.

நான் எனக்கென சொந்த விதிமுறைகளை வகுத்து வேலை செய்கிறேன். அதாவது, முதலில் எனக்கு நல்ல திரைக்கதை இருக்க வேண்டும், பிறகு படப்பிடிப்பு தொடங்கும் முன் ரெடி ஸ்கிரிப்ட் வேண்டும். இது தவிர, எனக்கு நல்ல ஊதியம் வேண்டும், நான் எட்டு மணி நேரத்திற்கு மேல் வேலை செய்வதில்லை. எனது எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்பவர்களுடன் நான் வேலை செய்கிறேன். இது தவிர, என்னை ஒப்பந்தம் செய்ய வரும் இயக்குனர்களிடம், என்னை ஏன் இந்த படத்திற்கு தேர்வு செய்தீர்கள் என கேட்பேன்” என்றார்.