திருக்குறளுக்கு மெட்டு அமைத்து, அதற்குநடனம் ஆடியது பரதநாட்டியக் கலையில் இதுவரை யாரும் செய்திராத ஒன்றாகும். முதல் முறையாக நேற்று சென்னையில் நடைபெற்ற பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் இதனை நிகழ்த்தி காட்டினார் லக்ஷிதா இந்த அரங்கேற்ற நிகழ்ச்சி பரதநாட்டியக் கலையின் மிக முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் திரையுலகிலும், பத்திரிகை உலகிலும் விருந்தோம்பல் திலகம் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் குட்லக்கல்யாணம்.அண்ணாசாலையில் இருந்தஆனந்த் திரையரங்கம் தொடங்கி நாக் ஸ்டுடியோஸ் வரை,அவர் பணியாற்றிய இடங்கள் மாற்றம் அடைந்தாலும், அவர் பிறரிடம் காட்டும் அன்பும், அக்கறையும் என்றுமே மாறாதது. அதனால், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், என்று பெரிய மனிதர்களுக்கு, திரைபிரபலங்களுக்கு பிடித்த நபராக வலம் வருகிறார்.கல்யாணம் அன்புப் பிடியில் சிக்காதவர்கள் இருக்க முடியாது, என்று சொல்லும் அளவுக்கு விருந்தினர்கள் கேட்பதை முடியாது என்று தவிர்ப்பது இல்லை. இவர் மேலாளராக பணியாற்றிய நுங்கம்பாக்கத்தில் உள்ள குட்லக் பிரிவியு திரையரங்குமறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு விருப்பமான அரங்கம். புதிய திரைப்படங்களை அங்கு தான் அவர் பார்ப்பார். அப்படி ஒரு முறை படம் பார்க்க வரும்போது கல்யாணம் படத்தின் இடைவேளையில் என்ன வேண்டும் என கேட்க கலைஞர் பசுமட்டில் கறந்தபாலில் காபி வேண்டும் என கேட்டிருக்கிறார். கல்யாணம் சரி என்று கூற கலைஞருக்கு அதிர்ச்சி இடைவேளையில் வெளியில் வந்தகலைஞருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் பசு மாட்டில் ஒருவர் பால் கறந்து கொடுக்க அதனை கலைஞர் முன்னால் காய்ச்சி காபி போட்டுகொடுத்துள்ளார் கல்யாணம். இதனால்திரையுலகம் மற்றும் பத்திரிகை வட்டாரத்தில் இவருக்கென்று தனி இரசிகர் வட்டாரம் உண்டு. இவரது மகள் வழிப் பேத்தி செல்வி.லக்ஷிதா மதனின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி ஜூன் 25 அன்று சென்னை தியாகராயா நகரில் உள்ள வாணி மஹாலில் நடைபெற்றது.இதில், நடிகர் சிவக்குமார், பிரபல பரதநாட்டியக் கலைஞர் நிர்த்ய சூடாமணி டாக்டர்.ஸ்ரீனிதி சிதம்பரம், நீதிபதி வெங்கட்ராமன், நீதிபதி வைத்தியநாதன், நீதிபதி ஆதிகேசவலு, நீதிபதி கோவிந்தராஜ், நீதிபதி பாஸ்கரன், நீதிபதி விமலா, லக்ஷ்மி சிவக்குமார், நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி, ரஞ்சனி கார்த்தி, பிருந்தா சிவக்குமார், ஐ.ஏ.எஸ் பிரபாகர், வருமான வரித்துறையின் தலைமை ஆணையர் ரத்தினசாமி, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் நாசர், சுஹாசினி மணிரத்னம், ரம்யா முருகதாஸ், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, ஓய்வு பெற்ற டி.ஐ.ஜி பாண்டியன் ஐபிஎஸ், டாக்டர், பாலாஜி, டாக்டர்.குமரன்,நாக் ஸ்டுடியோஸ் (KNACK Studios) நிர்வாக இயக்குநர் ஆனந்த் ராமானுஜம்,நாக் ஸ்டுடியோஸ் தலைவர் மற்றும் இயக்குநர் ஹரிஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டார்கள்.நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் பேசுகையில்,”என் நண்பன் கல்யாணத்தின் பேத்தியாக தான் லக்ஷிதா இருந்தாள். ஆனால், இன்று முதல் லக்ஷிதாவின் தாத்தா கல்யாணம் என்று மாறிவிட்டது. உலகம் முழுவதும் லக்ஷிதா பேர் வாங்குவார். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி இனி லக்ஷிதாவின் தாத்தா தான் கல்யாணம் என்று சொல்லும் அளவுக்கு அவள் பின்னிட்டாள்.இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடனம் ஆடுவது என்பது சாதாரண விசயம் அல்ல, லக்ஷிதா நடனம் ஆடவில்லை, மேடையில் பறந்துகொண்டிருந்தாள். பானை மீது ஏறி ஆடியபோது நான் சீட் நுனிக்கே வந்துவிட்டேன். என்ன மாதிரி நடனம். பத்து வருடங்களாகப் பரதநாட்டியம் ஆடி வருவதாகச் சொல்கிறார்கள். லக்ஷிதாவின் இத்தகைய சிறப்பான நடனத்திற்கு அவருடைய ஆசிரியர் ஷீலா உன்னிகிருஷ்ணனை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். பரதநாட்டியம் எல்லோரிடமும் போய்ச் சேரும் கலை இல்லை, அப்படி இருந்தும் இந்தக் கலையை இத்தனை வருடம் காப்பாற்றிய ஷீலா உன்னிகிருஷ்ணனை நான் கைகூப்பி வணங்குகிறேன்.ஏற்கனவே லக்ஷிதாவின் இரண்டு அரங்கேற்ற நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன். ஆனால், இப்போது நடந்தது ஒரு முழுமையான அரங்கேற்றம் என்று நினைக்கிறேன். ஜனனியின் பாட்டுக்கு லக்ஷிதா ஆடுகிறாரா அல்லது இவருடைய நடனத்திற்கு அவர் பாடுகிறாரா என்று தெரியாதவாறு இரண்டுமே ஒரே நேர்கோட்டில் பயணித்து அசத்திவிட்டது. வாத்தியக்குழுவுக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நடனக் கலைஞர்களுக்கு கண் மிகவும் முக்கியம், நான் ஒரு ஓவியன் என்பதால் கண்களைப் பற்றி நன்றாகத் தெரியும். அந்த வகையில் லக்ஷிதாவின் கண்கள் மீனை விட அழகாக இருக்கின்றன. அந்தக் கண்கள் மூலம் அபிநயங்களையும், பாவங்களையும் லக்ஷிதா வெளிப்படுத்திய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. பாடல்களில் வருவதை விட லக்ஷிதா நடனத்தில் காட்டிய நளினம் மிக அழகாக இருந்தது.இறுதியாக நான் ஒரு விசயத்தைப் பாராட்டியாக வேண்டும். நான் நிறைய பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சிகளுக்குச் சென்றிருக்கிறேன். பெரும்பாலும், அறிமுகப்படுத்தும் போது ஆங்கிலத்தில் தான் சொல்வார்கள். ஆனால், இங்கு அனைத்துப் பாடல்களையும் தமிழில் சொல்லி, தமிழில் விளக்கம் கொடுத்தது பிரமாதமாக இருந்தது. இப்படித் தான் செய்ய வேண்டும். நிறையப் பேருக்கு ஆங்கிலம் புரியாது, எனக்குக் கூடத் தான், அதனால் இதுபோல் தமிழில் பாடல்களையும், அதன் விளக்கங்களையும் சொல்லும் போது என்னைப் போன்றவர்களாலும் இரசிக்க முடியும். மிகச் சிறப்பான முயற்சி இது, நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.சமீபத்தில் நான் பார்த்த பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் மிகவும் சிறப்பான நிகழ்ச்சியாக லக்ஷிதாவின் அரங்கேற்றம் அமைந்திருக்கிறது. இதை அரங்கேற்றம் என்று சொல்வதை விட ஒரு முழுமையான பரதநாட்டிய நிகழ்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். மிகச் சிறப்பாக இருந்தது. லக்ஷிதாவின் ஆசிரியர் ஷீலா உன்னிகிருஷ்ணன் உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகளைக் கூறி விடைபெறுகிறேன்.” என்றார்.தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசுகையில்,“உச்சியில் இருந்து கழுத்து வரை ஆடுவதை கதக்களி என்பார்கள். கழுத்தில் இருந்து இடுப்பு வரை ஆடுவதை மணிப்புரி என்பார்கள். இடுப்பில் இருந்து பாதம் வரை ஆடுவதை கதக் என்பார்கள். இது முகலாயர்கள் காலத்தில் இருந்து வந்தது. ஆனால், உச்சியில் இருந்து பாதம் வரை ஆடுவது தான் பரதநாட்டியம். இந்த பரதநாட்டியம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. இதை முதலில் கூத்தர் என்றும், விரலியர் என்றும் கூறுவார்கள். பரத முனிவர் தான் பரதநாட்டியத்தைக் கண்டுபிடித்ததாக வட நாட்டவர் சொல்வார்கள். ஆனால் அது செவி வழி வந்த செய்தி, அதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை.ஆனால், முதல் முதலில் இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என முத்தமிழ் உருவாகும் போது இந்த நடனத்தை கூத்தர் என்றும், விரலியர் என்றும் கூறுவார்கள். இறைவன் ஆடக்கூடிய நடனத்தை 108 கர்ணத்தை சிதம்பரத்தில் இருக்க கூடிய தில்லை நடராஜர் கோயிலில் இடது பாதத்தைத் தூக்கி வைத்தது போல் இருக்கும். ஆனால், மதுரையில் அதே இறைவன் வலது பாதத்தைத் தூக்கி ஆடுவது போல் இருக்கும். 108 கர்ணங்களுக்கு மேல் நடனத்தில் இல்லை, இந்த 108 கர்ணங்களும் தில்லை நடராஜர் கோயிலில் இருக்கிறது. ஆனால், தஞ்சை மன்னர் இராஜராஜ சோழன் 96 கர்ணங்களை வடித்தார், மீதமுள்ள கர்ணங்களை அவரால் வடிக்க முடியவில்லை, அதற்குப் பல காரணங்கள் சொல்வதுண்டு. ஆனால், இப்போது லக்ஷிதா மேடையில் ஆடிய நடனத்தைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போனேன். அதைப் பாராட்ட வார்த்தையே இல்லை.இப்படி ஒரு அபாரமான நடன திறன் கொண்ட லக்ஷிதாவின் ஆசிரியருக்கு என் வாழ்த்துகள். சங்ககால இலக்கியத்தில் ஒருதலைக் காதலை கைக்கிளை என்று சொல்வார்கள். அந்த கைக்கிளையில் அவர் பிடித்த அபிநயம் அற்புதம். ஒரு மடல் எழுதுகிறார், புறாவை அழைக்கிறார், புறா காலில் மடலை கட்டிப் பறக்க விடுகிறார், இப்படி ஒரு காட்சியை தனது நடனத்தில் மிக அழகாக உணர்த்தினார்கள். உண்மையிலேயே உலகத் தமிழர்கள் பாராட்டக்கூடிய விதத்தில் நடனமும், பாடல்களும் அமைந்திருந்தது.என் உடன்பிறவா சகோதரர் கல்யாணம் அவர்களுக்கு இப்படி ஒரு பேத்தி இருப்பது தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் என்றே சொல்ல வேண்டும். நாட்டியப் பேரொளியைக் கண்டு நாம் மகிழ்ந்திருக்கிறோம், வைஜெயந்தி மாலாவைக் கண்டு மகிழ்ந்திருக்கிறோம்.ஆனால், குழந்தை லக்ஷிதா தனது நடனத்திறமையால் உலக அளவில் பேரும், புகழும் பெறுவார், என்று கூறி வாழ்த்துகிறேன்.” என்றார்.