இறுதி முயற்சி திரைப்பட விமர்சனம்

ஜவுளி தொழிலில் ஏற்பட்ட நஷ்டம், மகனின் ஆபரேசனுக்காக 80 லட்சம் கடன் வாங்குகிறார் தொழிலதிபரான ரஞ்சித். அவருக்கு கடன் கொடுத்த விட்டல் ராவ் தரப்பு கடனை திருப்பி செலுத்தாதவர்களை,வட்டி கட்டாதவர்களைகொடுமை செய்வதை வாடிக்கையாக வைத்து இருக்கிறது. விட்டல் ராவ் தம்பி புதுப்பேட்டை சுரேஷ் கடன் வாங்கியவர்களின் வீட்டு பெண்களை மானபங்கப்படுத்துகிறார். இவர்களிடம் சிக்கும் ரஞ்சித் என்ன வகையான நெருக்கடிகளை சந்திக்கிறார் என்பதே “இறுதி முயற்சி” திரைக்கதை.
 வெங்கட் ஜனா இயக்கியிருக்கிறார்.
வட்டிக்கு பணம் வாங்கிவிட்டு அதை சரியாக கட்ட முடியாமல் தவிக்கும் கேரக்டரில்சிறப்பாக நடித்து இருக்கிறார் ரஞ்சித். நண்பர்களிடன் பணம் கேட்கப்போய் அவமானப்படுவது, தனது கஷ்டத்தை மனைவி, குழந்தைகளுக்கு தெரியாமல் சமாளிப்பது, வீட்டு வாசலில் காவலுக்கு இருக்கும் கடன்கார அடியாட்களால் அவஸ்தை அனுபவிப்பது, தற்கொலைக்கு முயற்சிப்பது என  உருக்கமாக நடித்து இருக்கிறார.அவர் மனைவியாக வரும் மேகாலி மீனாட்சி அழகாக இருக்கிறார். சில இடங்களில் அழுத்தமான நடிப்பை தருகிறார். இவர்கள் குழந்தைகளாக வரும் மவுனிகா, நீலேஷ் சின்ன, சின்ன டயலாக்கால் மனதில் நிற்கிறார்கள்.

வில்லனாக வரும் விட்டல் ராவ், அவர் தம்பியாக வரும் புதுப்பேட்டை சுரேஷ், அவரின் அடியாட்களை பல சினிமாவில் பார்த்து இருப்போம். அனைத்து வில்லன்களை போல அவர்களும் சவுண்டுவிட்டு, பில்டப் கொடுத்து நடித்து இருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் கதிரவன் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்.

கடன் வாங்கினால் என்ன பிரச்னை வரும். அதிலும் மனசாட்சி இல்லாதவர்கள், பெண் மோகம் கொண்டவர்களிடம் கடன் வாங்கினால் என்ன நடக்கும், எப்படிப்பட்ட  அவமானங்களை சந்திக்க வேண்டும் என்ற ஒருவரியை மட்டுமே படம் முழுக்க வேறு விஷயங்களை பேசாமல், திருப்பங்கள் இல்லாமல் சொல்லியிருப்பது அலுப்பை ஏற்படுத்துகிறது. படத்தில் இருக்கும் ஒரு ஆறுதல் விஜய்சேதுபதி வாய்ஸ் ஓவர்தான். போலீஸ், மற்றவர்களால் சைக்கோ கொலைகாரனாக கருதப்படும் அவர் நல்லவர், வல்லவர் என்று திரைக்கதையில் டுவிட்ஸ்ட் வைத்து இருக்கிறார் டைரக்டர். ஹீரோ ரஞ்சித் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயற்சிக்கும்போது அவர் அனைவரையும் காப்பாற்றுகிறார். அப்போது அவர் குரல் மட்டும் கேட்கிறது. பாசிட்டிவ் ஆக பேசுகிறார். ஆனால் அவர் முகத்தை கடைசிவரை இயக்குனர் காண்பிக்கவில்லை. அந்த கேரக்டருக்கு சொல்லப்படும் பின் கதை நம்பும்படியாக இல்லை. சுனில் லாசர் இசை, பாடலில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. சூர்யா காந்தி ஒளிப்பதிவு ஓகே ரகம்.

நிறைய முயற்சி செய்தும், இறுதிவரை” இறுதி முயற்சி” தடுமாற்றமே.

 

Comments (0)
Add Comment