குபேரா – திரைப்பட விமர்சனம்

பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும் தனுஷ் கோடீசுவரர் ஆகிறார்.பணத்துடன் உயிருக்கு ஆபத்தும் வருகிறது.அவர் எப்படி கோடீசுவரர் ஆனார்? அவருக்கு வந்த ஆபத்திலிருந்து தப்பினாரா? என்ன நடந்தது? என்பதை விவரிக்கும் படம் குபேரா.

ஐம்பதாயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க பிச்சைக்காரர்களைப்  பயன்படுத்துகிறார்கள்.

பணம் வெள்ளையானதும் அவர்களைக் கொலை செய்துவிடுகிறார்கள்.தனுஷும் அந்த ஆபத்தில் சிக்குகிறார். அதில் இருந்துதனுஷ் எப்படி  தப்பிக்கிறார்.என்பதுதான் குபேரன் திரைக்கதை.

தனுஷா இது? என்று வியக்கவைக்கும் வண்ணம் அறிமுகமாகிறார். பிச்சைக்காரர் வேடத்துக்கு தோற்றத்தில் மட்டுமின்றி உடல்மொழியிலும் நியாயம் செய்திருக்கிறார். கோடீசுவரர் ஆன பின்பு அவருடைய நடை உடை பாவனைகளில் மாற்றத்தைக் காட்டி ரசிக்க வைக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ராஷ்மிகாவுக்கு அழகை வெளிப்படுத்துவதுடன் நடிப்பையும் வெளிப்படுத்தக் கூடிய நல்ல வேடம்.

நேர்மையான அதிகாரி வேடத்தில் நாகர்ஜுனா நடித்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் ஜிம் சர்ப், வட இந்திய பிரபலங்களை நினைவுபடுத்துகிறார்.

நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவில் இந்திய நகரங்கள் வெளிநாட்டு நகரங்கள் போல் தெரிகின்றன.தனுஷின் பிச்சைக்காரர் வேடம் அவ்வளவு பொருத்தமாகத் தெரிய அவரும் பெரும்பங்கு வகித்திருக்கிறார்.

தேவிஸ்ரீபிரசாத் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன.மூன்று மணி நேரப்படத்துக்கும் சலிப்பின்றி பின்னணிஇசையமைத்திருக்கிறார்.

படத்தொகுப்பு செய்திருக்கும் கார்த்திகா சீனிவாஸ், இன்னும் கூடுதலாக உழைத்து படத்தின் நீளத்தைக் குறைத்திருக்க வேண்டும்.

எழுதி இயக்கியிருக்கிறார் சேகர் கம்முலா. இந்திய ஒன்றிய அரசின் மிக உயர்மட்ட ரகசியங்களை அம்பலப்படுத்தும் கதைக்கரு திரைக்கதை ஆகியனவற்றை எடுத்துக் கொண்டிருக்கிறார்.இப்படியெல்லாம் நடக்கிறதா? என்று அசந்துபோய்ப் பார்க்கும் வகையிலான செய்திகளைச் சொல்லிச் செல்கிறார்.

அரிதிலும் அரிதான நிகழ்வுகள் என்றாலும் மிக மிக அச்சத்தையும் ஆச்சரியத்தையும் கொடுக்கும் நிகழ்வுகள் அதற்கு முழு உருவம் கொடுக்கக்கூடிய நடிகர்கள் ஆகியோரை வைத்துக் கொண்டு இருக்கும் படத்தில் குறைகளை மறந்து படம் சொல்லும் கருத்தை மனதில் நிறுத்துகிறார்

Comments (0)
Add Comment