அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிப்பில்ராதிகா நடிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ படம் பார்வையாளர்களிடம்நல்ல வரவேற்பு பெற்று 50 கோடி ரூபாய் வரை வசூலாகியுள்ள நிலையில் அவ்வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தின் வெற்றி விழா நிகழ்வு சென்னையில்நேற்று காலை (11.03.2026) நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ராதிகா பேசியவை,
“சினிமாவின் நெளிவு சுளிவுகளைப் பார்த்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். ஆனால், எந்த விஷயத்தையும் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டேன்.
இந்தப் படத்தின் டிக்கெட் 150 ரூபாய்க்கு விற்று ரூ. 50 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறது. ஆனால், சில பெரிய ஹீரோக்களின் படங்கள் ரூ. 1500- ரூ. 2000க்கு டிக்கெட் விற்று கிடைக்கும் வசூலைவிட ‘தாய் கிழவி’ வசூல் பெரியது என்பேன்.
தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் அப்டேட்டடாக இருக்கிறார். படம் பார்த்துவிட்டு கமல்ஹாசன் அவர்கள் என்னிடம் சொன்னார், “ராதிகா இந்தப் படம் நிச்சயம் ஜெயிக்க வேண்டும். ஏனெனில், ராதிகா நல்ல நடிகை, சினிமாவில் ஜெயித்துவிட்டார்.
அதுபோல இயக்குநர் சிவகுமார், தொழில்நுட்பக்குழுவினர், புதுமுக நடிகர்கள் என அனைவரும் ஜெயிக்க வேண்டும். அதற்காக இந்தப் படம் ஜெயிக்க வேண்டும்” என்றார். அது நடந்துவிட்டது.
ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு இயக்குநர் சினிமாவை மாற்றுவார். அதுபோல, இப்போது சிவகுமாரின் காலம். இயக்குநர் பாரதிராஜா சினிமாவில் புரட்சி செய்ததை போல, சிவகுமாரும் செய்வார்.
ஒவ்வொரு கேரக்டரையும் அழகாகக் கொண்டு போய் சேர்த்துள்ளார். ஒவ்வொரு கதாநாயகிக்கும் அடுத்த படம் என்ன என்ற ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும்.
வயதையும் அழகையும் அடுத்தவர்களுக்கு நாம் நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டுமா? தேவையில்லை. நம்மை நமக்கு தெரிந்தால் போதும்.
பெண்களுக்கான வெற்றியாக ‘தாய் கிழவி’ படத்தைப் பார்க்கிறேன். கதைதான் இங்கு கிங். பெண்களின் குரலைக் கேட்கும் ஆண்கள் இருக்கும்வரை இந்த சமுதாயம் என்றும் கெடாது.
தமிழ் சினிமாவில் முதன்முறையாக ஹீரோயினுக்கு லாபத்தில் பங்கு உண்டு என்று தயாரிப்பாளர்கள் சிவாவும் சுதனும் சொன்னார்கள். அந்த பெருமை எனக்கு உண்டு. சினிமாவில் இது நல்ல முன்னுதாரணம்.
நடிகைகள் சார்பாக நன்றி சொல்கிறேன். இந்த மகிழ்ச்சி பணத்திற்காக இல்லை, நம்பிக்கைக்காகதான். படத்தில் மட்டும் கருத்து சொல்லாமல் அதை நிஜத்திலும் செய்திருக்கிறார்கள்.
முதல்வர் ஸ்டாலின் அவர்களும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் இந்தப் படத்திற்கு வரிச்சலுகை தரவேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறேன். இதனால், இன்னும் நிறைய பெண்கள் இந்தப் படம் பார்ப்பார்கள்” என்றார்.
நடிகர் சிவகார்த்திகேயன், “இந்தப் படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தின் கதை சிவகுமார் முருகேசன் சொல்லும்போது சிரித்து மகிழ்ந்தேன்.
தாய் கிழவி ஞாயிற்றுக்கிழமை ஆனால் மதுரைக்கு போய்வருவார். அதைப்பற்றி எல்லோரும் கேள்வி கேட்பார்கள். எனக்கும் அதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது.
அதற்கான பதில் தெரிந்ததும் படம் நிச்சயம் வெற்றிபெறும் என்பதால் இந்தப் படத்தை தயாரித்தே ஆகவேண்டும் என முடிவெடுத்தேன்.
நான் ரசித்த எமோஷனலான விஷயங்களை ரசிகர்களும் கைத்தட்டி வரவேற்றது மகிழ்ச்சியாக இருந்தது. எனக்குள் இருந்த ரசிகன் சரியாக இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டேன்.
இந்தப் படத்தை என் குழந்தை போலதான் பார்த்துக் கொண்டேன். சினிமாத் துறையில் தனக்கு இருந்த அனுபவம், வலி இவை எல்லாவற்றையும் சேர்த்துதான் இந்த கதாபாத்திரத்திற்கு ராதிகா மேம் உயிர் கொடுத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் ஹீரோ இல்லை என்ற உணர்வே எனக்கு வரவில்லை. என் வாழ்க்கையில் நிறைய பேரை நியாபகப்படுத்துவதற்காக செய்யப்பட்ட படம்தான் இது.
முதலில் என் அம்மா. அப்பா இறந்தபிறகு வீட்டில் காசு சேர்த்துவைத்து என்னையும் அக்காவையும் படிக்க வைத்து கல்யாணம் செய்து வைத்து ஆளாக்கினார்.
பிறகு என் அக்கா. ‘படைக்க, காக்க, அழிக்க என ஆண்களை கடவுளாக காட்டியவன், படிப்புக்கும் பணத்துக்கும் பொம்பளையைதான் காட்டி கும்பிட சொன்னான்’ என படத்தில் ஒரு வசனம் வரும். அதை நான் முன்பே உணர்ந்துவிட்டேன் என நினைக்கிறேன்.
இதுநாள் வரை என் வரவு, செலவு அனைத்தையும் ஆர்த்தி தான் பார்த்துக் கொள்கிறார். அவர் இல்லை என்றால் புரொடக்ஷன் எல்லாம் நான் செய்திருக்க முடியாது.
இவர்கள் எல்லாரும்தான் என் பவுனுத்தாயி. இதுபோல, உங்கள் வீட்டில் உள்ள அனைத்து பவுனுத்தாயிகளுக்கும்தான் இந்தப் படம்.
இந்தப் படத்தை மொத்தம் 12 முறை பார்த்திருக்கிறேன். என் படத்தைக் கூட அத்தனை முறை பார்த்ததில்லை. நிறைய விஷயங்கள் இந்தப் படத்தில் கற்றுக் கொண்டேன்.
இந்தப் படத்தின் ப்ரீமியர் முடிந்ததும் இயக்குநர் சிவகுமாரின் அப்பா வந்து எங்கள் இரண்டு பேரையும் கட்டிப்பிடித்துக் கொண்டார். அந்த நொடியில் என் அப்பா இன்னும் இறக்கவில்லை என்பதை உணர்ந்தேன். இதெல்லாம்தான் எனக்கு நிறைவை கொடுக்கிறது.
வெற்றி என்பது விளையாட்டில் கூட விளையாட்டாக வராது என்பதை இந்த படக்குழு மீண்டும் உணர்த்தியிருக்கிறது.
அடுத்து ‘சேயோன்’ படமும் சிவாவுடன் தான். ‘தாய் கிழவி’ படத்தின் லாபம் நிச்சயம் தேவைப்படுபவர்களுக்கு உதவும். எஸ்.கே. புரொடக்ஷன்ஸின் பத்தாவது படத்தை புதுமுக இயக்குநர்தான் இயக்குகிறார். அவர் பெயர் அம்மாமுத்து சூர்யா.” என்றார்.
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் கலையரசு பேசியதாவது, “படத்தின் ரஷ்ஷஸ் பார்த்தபோதே வெற்றி விழா கொண்டாட்டத்தை எங்கு நடத்த வேண்டும் என்று யோசித்தேன்.
படத்தில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த அனைத்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. குறிப்பாக படத்தை தயாரித்த சிவாவுக்கும் படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஏற்ற ராதிகா மேமுக்கும் நன்றி!
படத்தின் ரிலீஸ்க்கு முன்பு 250 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டோம். ஆனால் படத்திற்கு வந்த வரவேற்பை அடுத்து 340 திரையரங்குகளாக அதிகரித்தது.
ரிலீஸ் ஆனதும் முதல் நாள் கிடைத்த வரவேற்பை அடுத்து இப்போது 480 திரைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
புக் மை ஷோவில் மட்டும் 825K புக்கிங் ஆகியிக்கிறது. ஒரு மில்லியன் நிச்சயம் தாண்டும் என ஏஜிஎஸ் தெரிவித்துள்ளது. படம் ரூ. 50 கோடி வசூலித்துள்ளது”என்றார்.
நடிகர் முனீஷ்காந்த் பேசுகையில்
“ராதிகா மேமின் ‘கிழக்கு சீமையிலே’ படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தவன் இன்று அவரது படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி. நடிகர் என்பதையும் தாண்டி தயாரிப்பாளராகவும் சிவா வெற்றியடைந்திருக்கிறார்.
இந்தப் படத்தில் புதுமுகங்கள் என பலரது வாழ்க்கை அடங்கி இருக்கிறது. அனைவரையும் ஒருங்கிணைத்து படத்தை வெற்றிகரமாகக் கொண்டு வந்த இயக்குநர் சிவாவுக்கும் நன்றி. என் கரியரில் முக்கியமான படம் இது”.
நடிகை ரேச்சல், “தியேட்டரில் நிறைய பெண்கள் இந்தப் படத்தைப் பார்த்து அழுது, கொண்டாடி இருக்கிறார்கள். இது அடிக்கடி நடக்காது. அப்படியான படத்தில் நானும் ஒரு பங்கு என்பதை நினைத்து மகிழ்கிறேன்.
‘தாய் கிழவி’ படத்தில் என் சுருளி கதாபாத்திரம் எனக்கு மிகப்பெரிய தைரியமும் தன்னம்பிக்கையும் கொடுத்திருக்கிறது. எல்லா கதாபாத்திரங்களிலும் இது கிடைக்குமா என தெரியாது”.
நடிகர் சிங்கம்புலி பேசுகையில்
“ ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘மகாராஜா’ படங்களுக்குப் பிறகு ‘தாய் கிழவி’ படத்தில் இந்த வேடத்திற்கு தான் எனக்கு அதிக ஃபோன்கால் வந்தது.
படம் வெளியாவதற்கு முன்பு கமல் சாரை பார்க்க வேண்டும் என்ற ஆசையை மேடையில் வெளிப்படுத்தியிருந்தேன். இரண்டு நாட்களில் கமல் சார் அலுவலகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவ்வளவு பிஸி ஷெட்யூலிலும் எனக்கு நேரம் ஒதுக்கி கமல் சார் என்னிடம் பேசினார். நன்றி”.
நடிகர் அருள்தாஸ் பேசும் போது
“இளைஞர்கள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வீட்டில் இருக்கும் தங்கள் பாட்டியையும் கூட்டி வந்தார்கள். அப்படியான டிரெண்ட் செட்டர் படம் இந்த ‘தாய் கிழவி’.
எளிய மக்களின் குரலாக எனக்கு இந்தப் படத்தில் அமைந்த கதாபாத்திரம் பலருக்கும் பிடித்திருந்தது. இந்தியில் ஒரு வயதுக்கு பிறகு அமிதாப் எப்படி வேறு ஒரு கோணத்தில் பயணித்தாரோ அதுபோலதான் ராதிகா மேம் நீங்களும். உங்களை லேடி அமிதாப் எனலாம்”. என்றார்.
நடிகர் பால சரவணன் பேசுகையில்
“ரொம்ப வருடங்கள் கழித்து இந்த படத்தை பார்த்த பாட்டி ஒருவர் அந்த வயதிற்கு மேல் தைரியமாகவும் வாழ்க்கையை கொண்டாடப் போவதாகவும் சொன்னார். அது நெகிழ்ச்சியாக இருந்தது.
செல்வம் கதாபாத்திரம் மூலம் என்னையும் உணர்வுப்பூர்வமாக நடிக்க வைத்த இயக்குநர் சிவாவுக்கு நன்றி. எனக்கு சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி”.