M/s. JDS ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் நடிகர்கள் ஜி.வி. பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’பிளாக்மெயில்’.இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா 19.07.2025 காலை சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் படத்தின்
இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பேசியதாவது
“’இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை அடுத்து மாறனுடன் பணிபுரியும் இரண்டாவது படம் இது. நான்கு பாடல்களில் மூன்று பாடல்கள் மற்றும் பின்னணி இசை நான் செய்திருக்கிறேன். ஜிவி பிரகாஷ் நடித்திருக்கும் படங்களில் அவரது நடிப்பு இதில் உச்சமாக இருக்கும். படத்திற்கு வில்லன் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். வில்லனை விட துரோகிகள் பயங்கரம். நம் கூட இருப்பவர்கள் துரோகி ஆகும்போது என்னவாகும் என்பதுதான் கதை. இந்த மாதிரியான கதைகள் அதிகம் செய்ய வேண்டும் என்பது என் ஆசை. வசனம் இல்லாமல் இசை மூலமாக கதை சொல்ல வேண்டும் என்ற இந்த படம் எனக்கு திருப்தியாக அமைந்தது என்றார்.”
இயக்குநர் வசந்தபாலன் பேசியதாவது
“பிளாக்மெயில் என்ற வார்த்தை என்னை ரொம்பவே இம்ப்ரஸ் செய்தது. இந்த வார்த்தை எப்படி வந்திருக்கும் எனத் தேடினேன். மெயில் என்றால் வாடகை, கட்டணம் என்ற அர்த்தத்தில் வரும். 16 ஆம் நூற்றாண்டின் வார்த்தை இது. இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்துக்கு இடையில் இல்லீகல் இமிக்ரண்ட்ஸ் இருந்த இடத்தில் தலைவர்கள், கொள்ளையர்கள் சென்று சூறையாடி இருக்கிறார்கள். அப்படி எங்களை கொள்ளையடிக்காதே, சூறையாடாதே என்பதற்காக கொடுக்கப்பட்ட கட்டணம்தான் மெயில். பிளாக்காக அதை கொடுத்ததால் பிளாக்மெயில் என்று பெயர் வந்தது. படத்தின் டிரெய்லர் பார்க்கும்போதே விறுவிறுப்பாக இருந்தது. இயக்குநர் மாறனுக்கு வாழ்த்துக்கள். சாம் சிஎஸ் ‘விக்ரம் வேதா’வுக்கு அருமையாக இசையமைத்திருந்தார். அந்தப் படத்தை திரையரங்கிற்கு வந்து ரசிகர்களை பார்க்க வைத்த பெருமை சாமுக்கும் உண்டு. 17 வயது பையனாக என் கண் முன்னே வந்து வளர்ந்தவர் ஜிவி பிரகாஷ். மகிழ்ச்சியாக உள்ளது. யாரையும் காயப்படுத்தாத குணம் கொண்டவர். அவரது குடும்ப விஷயத்தில் எந்தளவுக்கு பக்குவமாக நடந்தார் என்பது வியப்பாக இருந்தது. எனக்காக இரண்டு படங்கள் விட்டுக்கொடுத்தார். அவர் இல்லை என்றால் படம் வெளியாகி இருக்காது. படம் பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்”.