மனிதர்கள் – திரைப்பட விமர்சனம்

ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் மனிதர்கள் திரைப்படம். தமிழ்சினிமாவின் வழக்கமான கதை சொல்லும் பாணியில் இருந்து மாறுபட்ட வகையில் படமாக்கப்பட்டிருக்கும் மனிதர்கள் புதுவகையான காட்சி அனுபவத்தை வழங்குகிறதா படம் எப்படி இருக்கிறது?

நண்பர்களான கபில் வேலவன், தக்ஷா, குணவந்தன் தனபால், சாம்பசிவம், அர்ஜுன் தேவ், பிரேம் ஆகிய 6 பேரும் ஒரு நள்ளிரவில்

மது அருந்துகிறார்கள். அப்போது திடீரென மோதல் உருவாகி ஒருவரையொருவர் தாக்கி கொள்கிறார்கள். இதில் மதுபாட்டில் குத்தப்பட்டு பிரேம் இறந்து போகிறார். கொலையை யார் செய்தது? என்று தெரியாமல் மீண்டும் நண்பர்களுக்குள் சண்டை வருகிறது.

ஒருகட்டத்தில் சண்டையை முடிவுக்கு கொண்டுவரும் கபில் வேலவன், பிரேமின் உடலை காரின் ‘டிக்கி’யில் மறைக்கிறார். அதன்பின்னர் நண்பர்கள் அங்கிருந்து புறப்படுகிறார்கள். பிரேமின் உடலை என்ன செய்தார்கள்? நள்ளிரவில் செல்லும் வழியில் அவர்கள் சந்தித்த சவால்கள் என்னென்ன? முடிவில் என்ன ஆனது? என்பதே  மீதி கதை.

நெருக்கடியானசூழலிலும் பக்குவான முடிவுகளை எடுக்கும் கபில் வேலவன், பதற்றத்திலேயே நடமாடும் குணவந்தன் தனபால், அழுகை பேச்சுடன் அலையும் தக்ஷா, குற்ற உணர்வுடன் நடமாடும் சாம்பசிவம், பரபரப்பு முகமாய் அர்ஜூன் தேவ், ‘துருதுரு’ பேச்சுடன் பிரேம் என 6 பேருமே கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.

இரவில் நடக்கும் கதைக்களத்துக்கு அஜய் ஆபிரகாம் ஜார்ஜின் ஒளிப்பதிவு வலு சேர்த்துள்ளது. கார் ஹெட்லைட்டை மட்டும் பயன்படுத்தி எடுக்கப்பட்ட சில காட்சிகள் முத்திரை. அனிலேஷ் மாத்யூவின் இசை படத்துடன் ஒன்ற செய்கிறது.

6 பேரின் எதார்த்த நடிப்பு பலம். இரண்டாம் பாதியில் வேகம் குறைவு. யாருமே யூகிக்க முடியாத கதையை சொல்லி, பரபரப்பு குறையாமல் படத்தை நகர்த்தி கவனம் ஈர்த்துள்ளார், அறிமுக இயக்குனர் ராம் இந்திரா.

 

Comments (0)
Add Comment