மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ் வாழக்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘மெட்ராஸ் மேட்னி’*
வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்…
பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது..
இந்தப்படம் எடுத்து முடித்த பிறகு தான் என்னைப் பாடல் எழுதக் கூப்பிட்டார்கள், காளி வெங்கட் நாயகன் என்றார்கள் அவர் எந்தப்படத்திலிருந்தாலும் அதில் ஒரு ஈர்ப்பு இருக்கும். அவர் மிகச்சிறந்த நடிகர். இந்தப்படம் பார்க்கப் போகும் போது வியாபாரத்திற்கு ஏதாவது இருக்க வேண்டுமே என நினைத்தேன் ஆனால் அதையெல்லாம் படம் மறக்கடித்துவிட்டது. அதன் பிறகு தான் இந்தப்பாடல் எழுதினேன். வடிவேலு பாடிய அந்தப்பாடலை நீங்கள் கண்டிப்பாக ரசிப்பீர்கள். இயக்குநர் கார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் பாலசாரங்கன் இருவருக்கும் நன்றிகள். இந்தப்படத்தில் நானும் இருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. காளி வெங்கட் பசிக்கும் இன்னும் நிறையத் தீனி வேண்டும். இந்தப்படம் அதில் ஒன்றாக இருக்கும் என்றார்.
நடிகர் சாம்ஸ் பேசியதாவது…
சின்னப்படம் பெரியபடம் என்பதெல்லாம் மக்கள் தீர்மானிப்பது தான். 20 கோடியில் எடுத்து வசூலில் மிரட்டும் டூரிஸ்ட் ஃபேமிலி படம் தான் பெரிய படம். ஒரு சில படங்களில் தான் நாம் நடிக்கும் பாத்திரம் நமக்குத் திருப்தி தரும். அந்த வகையில் இந்தப்படம் மிகுந்த திருப்தி தந்த படம். ஊறுகாய் விற்கும் என் கதாபாத்திரத்திற்கு அவ்வளவு மெனக்கெட்டார்கள், அது எனக்கு மிகவும் பிடித்தது. இப்படத்தில் சத்யராஜ், வடிவேலு என எல்லோரும் வந்தது மிகப்பெரிய விசயம். சத்யராஜ் படம் பார்த்து உள்ளே வந்துள்ளார். வடிவேலு சார் வரக்காரணம் மோனிகா மேடம் தான். நாம் ஆசைப்பட்டால் கேட்டுவிட வேண்டும். கேட்டால் ஆமாம் இல்லை ஆனால் கேட்காதவர்களுக்கு இல்லை மட்டும் தான். கார்த்திகேயன் இதில் ஆசைப்பட்டதெல்லாம் நடந்துள்ளது. படத்தை நம்பி ட்ரீம் வாரியர்ஸ் வந்தது பட வெற்றிக்குப் பிறகு வார்னர் பிரதர்ஸ் வரட்டும். காளி வெங்கட் நான் பொறாமைப்படும் நடிகர், அவருடன் நடிக்கும் போது, அவர் நடிப்பதே தெரியாது, அவர் தொட வேண்டிய உயரம் இன்னும் அதிகம் உள்ளது என்றார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசியதாவது…
இன்றைக்கு மொத்த இந்திய சினிமாவும் ஒரு முக்கியமான ஒரு காலகட்டத்தில இருக்குன்னு நினைக்கிறேன். சினிமாவின் மார்க்கெட் முழுக்க மாறியிருக்கு, கடைசி ஒரு வருடத்தில் என்ன படம் செய்வது என்பதில் எல்லோரிடமும் குழப்பம் இருக்கிறது, ஆனால் மக்கள் இன்னும் தியேட்டருக்கு நிறைய வந்து படம் பார்க்கறாங்க. நல்ல படங்களை சப்போர்ட் பண்றாங்க. எல்லாரும் ஒரு படம் ஆரம்பிக்கிறப்போ, இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறணும். நமக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கணும். நம்முடைய கனவு நிறைவேறணும். நிறைய பணம் சம்பாதிக்கணும். பேர சம்பாதிக்கணும் இந்த மாதிரி நிறைய ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான விஷயத்தோட ரொம்ப பாசிட்டிவாதான் ஆரம்பிக்கிறோம். ஆனால் ஆரம்பிக்கிற எல்லா படங்களும் அதே மாதிரியான அவுட்புட்டோட வந்து முழுமை பெறறது இல்ல. அது ரொம்ப சிக்கலான ஒரு விஷயம். நிறைய வெவ்வேறு விதமான கலைஞர்களுடைய பணிகள் ஒரு படத்துக்கு தேவைப்படுது அது அழகா அமைஞ்ச் படமா மெட்ராஸ் மேட்னி படத்தைப் பார்க்கிறேன். சின்ன படம் பெரிய படம் அப்படின்னு எப்பவுமே நம்மளே வகைப்படுத்திட்டே இருக்கோம். சின்ன படம் பெரிய படம் அப்படின்னு, எப்பவுமே நம்மளே வகைப்படுத்திட்டே இருக்கோம். அப்படி இல்லாம பெரும்பான்மையாக இருக்கக்கூடிய ஒரு மிடில் கிளாஸ் லைஃபை, ரொம்ப எதார்த்தமா அதே நேரத்துல ரசிக்கும்படியா இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு கேரக்டர்ஸும் நம்ம வாழ்க்கையில நம்ம பார்த்த கேரக்டர்ஸ திரும்பி பார்க்கிற மாதிரி இருந்தது. ஒரு மிடில் கிளாஸ் லைஃப் மேட்னி ஷோவா பாக்குற மாதிரியான ஒரு அனுபவம்தான் இந்தப்படம். நிறைய விஷயங்கள் ரொம்ப நாஸ்டாலஜிக்கா இருந்தது. கார்த்திகேயன்மணி மிகச்சிறப்பாக படத்தை தந்துள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் சினிமாவில் முக்கியமான ஆளாக வருவார், எல்லா நடிகர்களும் சிறப்பான நடிப்பைத் தந்துள்ளார்கள். இசையமைப்பாளர் பாலசாரங்கன் இசை மிகச்சிறப்பாக இருந்தது. காளி வெங்கட்டை வைத்து ஒரு ஆக்சன் படமே எடுக்கலாம் அவர் நடிப்பு அவ்வளவு சிறப்பாக இருந்தது. இப்படத்தை ஒரு மாஸ் கமர்ஷியல் சினிமாவாகத்தான் நான் பார்க்கிறேன் என்றார்.
இயக்குநர் கார்த்திகேயன் மணி பேசியதாவது…
என் அம்மா நிறைய இலக்கிய வட்டம் போவார்கள். தமிழ் மொழியின் சிறப்பை பற்றி நிறைய சொல்லுவார்கள், உண்மையிலேயே தமிழ் எவ்வளவு பழமை வாய்ந்தது என்ற கேள்வி எனக்குள் வந்தது, அதன் பிறகு நிறையப் புத்தகங்கள் படித்தேன். நம்மளோட வரலாறு இப்ப இருக்கங்களுக்கு யாருக்குமே தெரியலைன்றது எனக்கு மிகப்பெரிய வருத்தமா இருந்தது, ஒரு சில கவிதைகள வச்சே நாலு படம் எடுக்கலாம் கிட்டத்தட்ட புறநானூறே 400 கவிதை இருக்கிறது. 300ன்னு ஒரு படம் வந்திருக்கும். நீங்க எல்லாம் பார்த்திருப்பீர்கள் ரொம்ப பிரபலமான படம். எனக்கு தெரிஞ்சு அந்த படம் தமிழ் படமாகத்தான் எடுத்திருக்கவேண்டும். ஏன்னா அந்த மாதிரி கதை இங்க எவ்வளவோ இருக்கிறது. அந்த மாதிரி கதைகள் நமக்கே தெரியவில்லை. அது வந்து உண்மையிலேயே வருத்தத்துக்கு ஒரு விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன், ஏன் மத்தவங்க எடுக்கலன்றத கேக்குறத விட்டுட்டு, நான் ஏதாச்சும் பண்ணனும்னு தான் இந்தப்படம் எடுக்க முயற்சி செய்தேன். நான் ஐடில இருந்தாலும் எனக்கு வந்து சினிமா மேல பயங்கரமான பேஷன் உண்டு. அதன் தொடக்கமாகத் தான் இந்தக்கதை எழுதினேன், நான் வாழ்க்கையில் சந்தித்த, பார்த்த அனுபவங்கள் தான் இந்தப்படம், ஒரு அப்பா பசங்களுக்காக நாய் மாதிரி ஓடுறாரு. திடீரென்று பார்த்தா பசங்களுக்கும் அவருக்கும் ஒரு கேப் இருக்கு. அந்த அப்பாவிற்கு எவ்வளவு வலிக்கும். இந்தக் கதையை நான் எழுதி முடித்த பிறகு, ஒரு நல்ல அப்பா கிடைக்கவேண்டுமென்று நான் வலைவீசி தேடிட்டு இருந்தேன். சரியான அப்பா கிடைக்கலைனா இந்தப்படம் எடுக்க வேண்டாமென்று முடிவு செய்திருந்தேன் அப்போதுதான் காளி சார் இந்த கதைக்கு ஓகே சொன்னார், காளி வெங்கட் நடிப்பைப் பற்றி சொல்லத் தேவையில்லை, காளி வெங்கட் சாரோட நடிப்பு எல்லாமே ரொம்ப உண்மையா இருந்தது, ஷெல்லி, விஷ்வா, ரோஷினி எல்லோரும் உங்க வாழ்க்கையைப் பார்ப்பது போலவே நடிப்பைத் தந்துள்ளார்கள். சத்யராஜ் சார் கேரக்டர் இந்த டிரெய்லர்ல மிடில் கிளாஸ் லைஃப்ல என்ன இருக்கும் நோ ஆக்ஷன், நோ அட்வென்சர், நோ ரொமான்ஸ், சோ சேட், அப்படின்னு சொல்லுவார். ஆனால் இதில் எல்லாமே இருக்கும். அது உங்க லைஃப்லயும் இருக்கு. இந்த படம் மூலமா உங்களுக்கும் உங்கள் வாழ்க்கை ஞாபகம் வரும். எடிட்டர் சதீஷ், ஹரிகிருஷ்ணன் இல்லையென்றால் இந்தப் படம் நடந்திருக்காது இருவருக்கும் நன்றி. எங்களை நம்பி இந்தப்படத்தை எடுத்துக்கொண்ட ட்ரீம் வாரியர்ஸ் எஸ் ஆர் பிரபு சாருக்கு நன்றி. இப்படம் ஜூன் 6 ஆம் தேதி வருகிறது, எல்லோரும் ஆதரவு தாருங்கள், நன்றி
காளி வெங்கட் பேசியதாவது…
முதலில் எஸ் ஆர் பிரபு சாருக்கு நன்றி, ஒரு படம் எப்படிப்பட்ட படம் என்பது நீங்கள் வாங்கும்போது தெரிந்துவிடும், அதற்காக அவருக்கு நன்றி, சத்யராஜ் சாருக்கு ரொம்ப ரொம்ப நன்றி. படம் முடியற ஸ்டேஜ்லதான் இயக்குநர் அவரை அணுகினார் ஆனால், எந்த தயக்கமும் இல்லாமல் படம் செய்து தந்தற்கு நன்றி. வடிவேல் சாருக்கு மிக்க நன்றி. அபிஷேக் மூலம் தான் இயக்குநரைச் சந்தித்தேன், வீட்டுக்கு கூப்பிட்டு கதை சொன்னார், அதுவே எனக்குப் புதிதாக இருந்தது, இந்தக்கதை சொன்னவுடனே எனக்குப் புரிந்துவிட்டது. எனக்கு என் அப்பாவின் ஞாபகம் வந்தது. எல்லோர் வாழ்க்கையிலும் இதை உணர்ந்திருப்பீர்கள், ஒரு கட்டத்தில் எல்லா அப்பாவும் தன் பிள்ளைகள் தன்னிடம் இருந்து பிரிந்து செல்வதை உணர்வார்கள், நான் அதிகம் சொல்லவில்லை படம் பார்க்கும் போது நீங்களே உணர்வீர்கள். ஆனந்த் கேமரா ஒர்க் மிகச்சிறப்பாக இருந்தது.ஷெல்லி உடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது, மிகச் சிறப்பாக நடித்துள்ளார். விஷ்வா, ரோஷினி எல்லோருக்கும் நன்றி. படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. இப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி திரைக்கு வருகிறது, அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.