வந்தியதேவன் படத்தில் எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடிக்கும் ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ என்ற அனிமேஷன் திரைப்படத்தின் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்டநாள் கனவாக இருந்தது.

போஸ்டர் வரை வந்து அந்தப் படம் கைவிடப்பட்டது. எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் அன்று அவரது கனவை நனவாக்கும் விதையை சனீஷ்வர் அனிமேஷன்ஸ் நிறுவனம் விதைத்துள்ளது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரின் தோற்றத்தையும் அனிமேஷனில் உருவாக்கி இந்தத் திரைப்படத்தின் ஹீரோ-ஹீரோயினுக்காக பயன்படுத்தியிருக்கின்றனர்.

‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ என்ற பெயரில் அனிமேஷன் திரைப்படமாக கல்கியின் புகழ்பெற்ற நாவலை தயாரித்துள்ளது. நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற பணி நிறைவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் பாடல் ஒன்றை இக்குழு வெளியிட்டுள்ளது.

‘பெரியார் குத்து’ பாடல் மூலம் அனைவரின் கவனத்தைக் கவர்ந்த ரமேஷ் தமிழ்மணி இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்.


பாகுபலி, எந்திரன் போன்ற வெற்றிப்படங்களில் வசனம், பாடல்கள் எழுதிய மதன் கார்க்கி இந்தப் படத்திற்கு வசனம் மற்றும் பாடல்களை எழுதியுள்ளார். தவச்செல்வனின் இயக்கத்தில் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இந்த ஆண்டு பல்வேறு இந்திய மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்கள் காலத்தை வென்றவை என்பதை நாம் அறிவோம். இத்திரைப்படத்தில், சந்தோஷ் ஜெயகரனின் குரலில், வந்தியத்தேவனின் அறிமுகப் பாடல் ‘உலகம் என் உலகம் நான் உத்தரவிட்டால் விடியும்’ என்று தொடங்கி ‘ஒவ்வொரு நொடியும் வைரம் என்றால் காலம் புதையல்தானே; ஒவ்வொரு உள்ளமும் அரியணை என்றால் நிரந்தர அரசன் நானே!’ என்று நிறைவடைகின்றன எம்.ஜி.ஆர்-க்காக எழுதப்பட்ட வரிகள். “அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்த எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்தநாள் அன்று இந்தப்பாடலை வெளியிட்டு அவருக்கு மரியாதை செய்து இந்தப் பாடலும் புரட்சித்தலைவரின் தத்துவப் பாடல்களைப் போல் அனைவர் மனதிலும் இடம்பிடிக்கும்” என்று நம்புவதாக ‘வந்தியத்தேவன்’ படக்குழுவினர் கூறியிருக்கின்றனர்.

#jeeva#ponniyin-selvanJeyalalitham.g.rvanthiyadevan
Comments (0)
Add Comment