ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லவ மன்னர்களில் ஒருவரான நந்திவர்மன், செஞ்சி பகுதியில் கட்டிய மாபெரும் சிவன்கோவில் ஒன்று மண்ணுக்குள் புதைந்திருப்பதும், அந்த கோவிலில் புதையல் இருப்பதும் தொல்லியல் துறைக்கு தெரிய வருகிறது. அதன்படி, தொல்லியல் துறை பேராசிரியர் நிழல்கள் ரவி, தொல்லியல் துறை அதிகாரி போஸ் வெங்கட் தலைமையில் மாணவர் குழு ஒன்றை ஆய்வு மேற்கொள்ள அங்கு அனுப்புகிறார். ஆனால், அந்த கிராமத்தில் மாலை 6 மணிக்கு மேல் சில அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதால் மக்கள் அந்த இடத்திற்கு செல்வதை தவிர்ப்பதோடு, அந்த இடத்தில் ஆய்வு நடத்தவும் தடையாக நிற்கிறார்கள்.பிறகு மக்களை சமாதானப்படுத்தி அந்த இடத்தில் போஸ் வெங்கட் குழு ஆய்வு மேற்கொள்ளும் போது, அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொல்லப்படுவதோடு, ஆய்வு குழுவில் இருந்த மாணவர் ஒருவரும் கொல்லப்படுகிறார். இந்த கொலைகள் பற்றிய விசாரணையை கையில் எடுக்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாயகன் சுரேஷ் ரவி, அந்த ஊரில் நடக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அவருக்கு ஆய்வு குழுவைச் சேர்ந்த நாயகி ஆஷா வெங்கடேஷ் உதவி செய்ய, அந்த மர்மத்தின் பின்னணி என்ன?, உண்மையிலேயே அந்த ஊரில் நந்திவர்மன் கட்டிய கோவிலும், புதையலும் புதைந்திருக்கிறதா? என்பதை சொல்வது தான் ‘நந்திவர்மன்’ படத்தின் மீதிக்கதை.
மீசை ராஜேந்தர், ஆடுகளம் முருகதாஸ், அம்பானி சங்கர், கோதண்டம், என படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்கள் சிறிய வேடங்களில் நடித்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சேயோன் முத்து எளிமையான லொக்கேஷன்களை கூட பயங்கரமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். பழங்காலத்து கோவில்களையும், மலைப்பகுதிகளையும் காட்சிப்படுத்திய விதம் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது.
ஜெரால்டு ஃபிலிக்ஸ் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.கலை இயக்குநர் முனிகிருஷ்ணன் பழங்காலத்து கோவிலை வடிவமைத்த விதம் பாராட்டும்படி இருப்பதோடு, தொல்லியல்துறையினர் ஆய்வு நடத்தும் இடம் மற்றும் சிலைகள் போன்ற அனைத்தும் செயற்கைத்தனம் அற்றதாக இருக்கிறது.ஸ்டண்ட் மாஸ்டர் சுகேஷின் சண்டைக்காட்சிகள் படத்திற்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.
மொத்தத்தில், ‘நந்திவர்மன்’ நிச்சயம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும்.