மாஸ்டர் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரான லலித் குமார் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியிருப்பதாக வெளியான செய்தி விஜய் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளராகவும், அப்படத்தின் வியாபாரத்தை முடித்துக்கொடுக்கும் பொறுப்பு ஆகியவற்றை ஏற்றிருப்பவர் லலித்குமார்.
மாஸ்டர் படத்தின் தொலைக்காட்சி, டிஜிட்டல், ஆடியோ உரிமைகள் 57 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. தமிழக உரிமை 70 கோடி ரூபாய், வெளிநாட்டு உரிமை 30 கோடி ரூபாய், கர்நாடகா உரிமை 8.65 கோடி ரூபாய், தெலுங்கு 9 கோடி ரூபாய், கேரளா உரிமை 6.25 கோடி ரூபாய், வட இந்திய உரிமை 23 கோடி ரூபாய் என மாஸ்டர் படத்தின் உரிமைகள் மட்டும் சுமார் 203.9 கோடி ரூபாய் அளவிற்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிவதற்கு முன்பாகவே அத்தனை ஏரியா உரிமையையும் விற்று, குறைந்த செலவில் எடுக்கப்பட்டு அதிக பணத்துக்கு விற்கப்பட்ட பெருமையை மாஸ்டர் பெற்றிருக்கிறது.
மாஸ்டர் படத்தின் வியாபாரம் முடிவடைந்து எல்லா ஏரியா உரிமைகளும் அவுட்ரேட் முறையில் விற்கப்பட்டிருக்கின்றன. அவுட்ரேட் மூலம் விற்பனை என்பதால் இனி அந்தப் படத்தின் வசூலுக்கும், தயாரிப்பு தரப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களே அதன் லாபத்துக்கும், நஷ்டத்துக்கும் பொறுப்பானவர்கள். எனவே, மாஸ்டர் படத்தின் தயாரிப்பு தரப்பு விற்பனையான பணத்தைப் பெற்றுக்கொண்டு புரமோஷன் வேலைகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.
மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவினர். எனவே விஜய்தான் மாஸ்டர் படத்தின் நிழல் தயாரிப்பாளர். தயாரிப்பு நிர்வாகத்தில் கை தேர்ந்தவர் லலித் குமார். எனவேதான் விஜய்யின் பணத்தை சேவியர் பிரிட்டோவை தயாரிப்பாளராக காட்டி, நிதி நிர்வாகத்தில் பெயர் பெற்ற லலித் குமாரிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள்.
இந்த பின்னணியில்தான், விசாரணை நடத்துவதற்காக லலித்குமார் வீட்டுக்கு வருமான வரித் துறையினர் சென்றுள்ளனர். ஆக விஜய் மீதான குறி இன்னும் விலகவில்லை என்பதையே இந்த விசாரணை காட்டுகிறது” என்கிறார்கள்.
மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீடு மார்ச் 15ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இன்னும் 4 நாட்களே மீதமிருக்கும் நிலையில், திடீரென வருமான வரித் துறையினரின் இந்த காய் நகர்த்தல் படக்குழுவை சிறிது அசைத்துப்பார்த்துவிட்டது.