அஞ்சாமை – திரைவிமர்சனம்

சினிமா பொழுதுபோக்குகானது மட்டுமல்ல, சமூக பிரச்சினைகளை, அரசியல் மாற்றங்களுக்கானதும் என்பதை தமிழ் சினிமா உறுதிப்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் அரசியல் கட்சிகள் மட்டுமே பேசி வந்த நீட் தேர்வு, அதனால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை பதிவு செய்திருக்கும் திரைப்படம் அஞ்சாமை.
உலகிலேயே தலை சிறந்த மருத்துவர்களைக் கொண்ட இந்திய நாட்டில் மருத்துவப் படிப்புக்குத் தகுதித்தேர்வு அவசியம் என்கிற சட்டத்தையும் அதை நடைமுறைப்படுத்தும் அலங்கோலமான நடைமுறைகளையும் சமரசமின்றி நெற்றிப்பொட்டில் அடிக்கிற மாதிரி காட்சிப்படுத்தியிருக்கிறார் அஞ்சாமை இயக்குநர்.

தன் மகனின் மருத்துவர் கனவை நனவாக்கப் போராடும் தந்தையாக நடித்திருக்கிறார் நாயகன் விதார்த்.இயக்குநர் அந்தக் கதாபாத்திரத்தை என்ன நினைத்து எழுதினாரோ? அதை அப்படியே திரையில் கொண்டுவந்திருக்கிறார். ரயில் பயணக் காட்சிகளிலும் தேர்வு மையக் காட்சிகளிலும் மட்டுமின்றி வீட்டில் இயல்பாக நடக்கும் காட்சிகளில் கூட அவருடைய நடிப்பு உச்சத்தை தொடுகிறது.

இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடிக்க ஒப்புக் கொண்டதற்கே வாணிபோஜனுக்கு ஒரு தனி வணக்கம் வைக்கலாம்.அந்த வேடத்துக்கு உயிர் கொடுத்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.மாணவனாக நடித்திருக்கும் கிருத்திக் நல்ல தேர்வு.வேடத்தின் கனத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

மக்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வழக்கறிஞரான ரகுமான், நீதியை எதிர்பார்த்து ஏங்குவோர் விரும்பும் நீதிபதியாக நடித்திருக்கும் பாலச்சந்திரன் ஆகியோர் படம் தடங்கல் இன்றி போரடிக்காமல் நகர பெரிதும் பயன்பட்டிருக்கிறார்கள்.

ராகவ்பிரசாத் இசையில் பாடல்கள் கேட்கலாம்.அறிவுமதி எழுதிய நீயே நீயே பாடல் கூடுதல் இதம்.கலா சரண், பின்னணி இசையில் பல காட்சிகளுக்கு நெருப்பு மூட்டியிருக்கிறார்.ஒளிப்பதிவாளர் கார்த்திக்குக்குக் கடுமையான வேலைப்பளு உள்ள படம். ரயில் பயண காட்சிகள் அதற்குச் சான்று.

படத்தொகுப்பாளர் ராம் சுதர்சன்,விரும்பி வேலை செய்திருக்கிறார்.சில காட்சிகளைரசித்து அப்படியே விட்டுவிட்டார்.

இயக்குநர்எஸ்.பி.சுப்புராமன்,

நெஞ்சில் கனன்ற நெருப்புக்குக் காட்சி வடிவம் கொடுத்து பார்ப்போரையும் எரிய வைத்திருக்கிறார்.சுருக்கெனத் தைக்கும் வசனங்கள் கைதட்டல் பெறுகின்றன. வெகுமக்கள் எண்ணங்களை அரசாங்கம் அரக்கக் கரங்களால் அழிப்பதை, மிகப்பெரும் போக்குவரத்து சாதனமான ரயிலின் அவலநிலையை,குப்பைத் தொட்டிக்கு ஈடான தேர்வு மையங்களைக் காட்டி கனல் மூட்டுகிறார்.
நீட் தேர்வு தேவையில்லாத ஒன்று என்பதை விரல்நீட்டும் வசனங்கள் இல்லாமல் காண்போரை உணரவைக்கிறார்.

நீட் தேர்வு வேண்டாம் என்கிற இந்தப்படத்தை மனநல மருத்துவர் திருநாவுக்கரசு தயாரித்திருக்கிறார் என்பது நீட்டை கொண்டு வந்தோருக்கும் நீட்டுக்கு முட்டுக் கொடுப்போருக்கும் சொல்லப்பட்டிருக்கும் அழுத்தமான செய்தி.

நீட் தேர்வு முறை எங்களுக்கு தேவையில்லை என தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலித்து வரும் ஆளும் திமுக அரசின் நீட் தேர்வுக்கு எதிரான வலிமையான போராட்டத்துக்கு மேலும் வலிமை சேர்க்கிறது அஞ்சாமை திரைப்படம்