அப்பாவின் சினிமா போராட்டத்தை ஸ்டார் படமாக இயக்கிய இயக்குநர்

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில்  இளன் இயக்கத்தில் தயாராகி இருக்கும்  ‘ஸ்டார்’ திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இதை முன்னிட்டு சென்னையில்  பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது நிகழ்வில்
இயக்குநர் இளன் பேசுகையில்,
 நம் எல்லோரிடத்திலும் கனவு ஒன்று இருக்கும். ஒரு வீடு வாங்க வேண்டும்… ஒரு கார் வாங்க வேண்டும்… கடை ஒன்றை திறந்து வியாபாரம் செய்ய வேண்டும்.. என ஏதாவது ஒரு கனவு இருக்கும் தானே.. அந்த கனவை நோக்கி பயணிக்கிற அனைவருமே ஸ்டார் தான். இதைத்தான் இந்த படம் சொல்கிறது. அந்தப் பயணத்தில் நாம் யாரையும் காயப்படுத்தி விடக் கூடாது. அன்புடன்.. அந்த கனவை விட்டுக் கொடுக்காமல்… பிடிவாதமான மனதுடன்.. அந்தப் பயணம் இருந்து கொண்டே இருக்கும் அல்லவா..! அதைத்தான் இந்த படம் பேசுகிறது.1980 களில் ஒரு பையன்.. அவனுக்கு 20 வயது இருக்கும். பெரிய நடிகராக வேண்டும் என்ற கனவுடன் மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறார். 1980, 1990 ஆகிறது. 2000 ஆம் ஆகிறது.கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேல் இந்த பயணம்  தொடர்கிறது. இப்போது அவருக்கு 55 வயதாகிறது. இந்த வயதில் அவருக்கு ‘ராஜா ராணி’ எனும் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. பல வருஷமாக தேக்கி வைத்திருந்த அவருடைய கனவு நனவாகிறது. திரையரங்கில் அவருடைய நடிப்பிற்கு ரசிகர்கள் கைதட்டுகிறார்கள். அவர்தான் என்னுடைய அப்பா ‘ராஜா ராணி’ பாண்டியன்.இந்தப் படத்தை அவருக்காக அர்ப்பணிப்பதைத் தான் நான் விரும்புகிறேன். இந்தப் படத்திற்கு இன்ஸ்பிரேஷன்.. என்னுடைய அப்பா தான். அவருடைய இந்த பயணத்தில் ஏராளமான அனுபவங்களை சந்தித்திருப்பார். அவமானங்களை எதிர்கொண்டிருப்பார்.‌
ஒரு முறை என் அப்பா என்னிடம், ‘இந்த முகத்தை வைத்துக்கொண்டு எப்படி நடிக்க வந்தாய்?’ என ஒருவர் கேட்டுவிட்டதாக வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார். அந்த நபர் கேட்ட அந்த கேள்விதான் என் அப்பாவிற்கு மிகப்பெரிய மோட்டிவேஷனாக இருந்திருக்கிறது. ஒருத்தர் முகத்துக்கு நேராக இப்படி கேட்டுவிட்டாரே..! என்ற ஒரே காரணத்திற்காக, எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற உறுதி அவர் மனதில் ஏற்பட்டு விட்டது.  அந்த மன உறுதியை விவரிப்பதுதான் இந்த ஸ்டார் திரைப்படம்.ஒரு கனவை நாம் எப்போதும் தனியாக வென்று விட முடியாது. அதற்கு ஆதரவளிக்க நிறைய பேர் தேவை. உதவி செய்வதற்கும் ஆட்கள் தேவை. அதைவிட மற்றவர்களின் ஆசியும் முக்கியம்.‌ இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் கவின், ‘காசு இல்ல சார்..!’ என டயலாக் பேசுவார். அது எங்க அப்பா வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவம். அதன் போது எங்க அம்மா தான் அவருக்கு ஆதரவாக இருந்து அவரையும் பார்த்துக் கொண்டார். எங்களையும் பார்த்துக் கொண்டார். எங்களை பொறுத்தவரை அவரும் ஒரு ஸ்டார் தான்.அடிப்படையில் நம்மை சுற்றி ஏராளமான ஸ்டார்கள் இருக்கிறார்கள். இவர்களை நினைவுபடுத்தும் வகையில் தான் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது.தயாரிப்பாளர் சாகரிடம் இந்த கதையை சொல்லிவிட்டு இரண்டு நாட்களில் பதிலை சொல்லி விடுங்கள் என நிபந்தனை விதித்தேன். அவர் ஒரே நாளில் இந்த படத்தை தயாரிக்கிறேன் என பதிலளித்தார்.
இந்தத் திரைப்படத்தை நான் ஒரு அழகான காதல் கதையாக தான் பார்க்கிறேன். லவ் என்றதும் ஒரு அப்பாவின் அன்பு… ஒரு அம்மாவின் அன்பு… ஒரு நண்பனின் அன்பு… ஒரு மனைவியின் அன்பு… ஒரு காதலியின் அன்பு… என ஏகப்பட்ட அன்பு இப்படத்தில் இருக்கிறது என்றார்.