உயிர் தமிழுக்கு இன்றைய சினிமாவுக்கு தேவையா?

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப்படத்தை வெளியிடுகிறார். 

கதையின் நாயகனாக அமீர், கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன், இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைக்க

பாடல்களை பா.விஜய் எழுதியுள்ளார் அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். இந்த

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் பிரிவியு திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இயக்குநர் அமீர், மௌனம் பேசியதே படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்த 20 வருடங்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து அவரை கவுரவிக்கும் விதமாக படக்குழுவினரால் அவருக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. 

இந்த நிகழ்வில் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆதம்பாவா பேசும்போது, 

“வெளி கம்பெனி படமொன்றில் அமீர் நடிப்பது இதுவே முதல் தடவை. பெரும்பாலும் அவரை கதையின் நாயகன் என்று சொல்கிறார்கள். அவர் கதையின் நாயகன் அல்ல.. கதாநாயகன் தான்.. இந்த படத்தை தயாரித்து இந்த நிலைக்கு கொண்டுவர நிறைய காலதாமதம் ஆனது உண்மைதான்.. அதேசமயம் இந்த படம் உருவாகும் வரை என்னை அவர் நம்பினார்.. அவரை நான் நம்பினேன்.. இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிடுவதன் மூலம் இன்னும் பெரிய அளவிற்கு இந்தப் படம் பேசப்படும்.. இந்தப்படத்தில் ஆக்ஷன், காமெடி என அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கின்றன.. இந்த படத்தில் நடிகர் ஆனந்தராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் கூட ஹீரோ என்றால் அது ஆனந்தராஜ் தான். அந்த அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார். இந்த படத்திலும் அவரது கதாபாத்திரம் பேசப்படும்” என்று கூறினார்.

இயக்குநர் சுப்பிரமணிய சிவா பேசும்போது, 

“இந்த படத்தில் நானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அமீர் கதாநாயகன் மட்டுமல்ல.. இந்த படத்தில் காதல் நாயகனாகவும் நடித்துள்ளார். இதுவரை அவரை கோபக்காரராக, அநீதிக்காக குரல் கொடுப்பவராக பார்த்திருப்போம். இதில் காதல் மற்றும் அரசியல் இரண்டிலும் பின்னிப்பிணைந்து நடித்து உள்ளதையும் பார்க்கலாம்” என்று கூறினார்.

நடிகர் இமான் அண்ணாச்சி பேசும்போது, 

“ஒரு செட் பிராப்பர்ட்டி மாதிரி படப்பிடிப்பின்போது இயக்குனர் அமீருடன் கூடவே பயணிக்கும் விதமாக எனது கதாபாத்திரம் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த படத்தில் ஒரு சண்டைக்காட்சியை மூன்று நாட்கள் படமாக்கியபோது அமீர் ஒரு பேருந்துக்குள் வசமாக சிக்கிக் கொண்டு பட்ட அவஸ்தைகள், அந்த சமயத்தில் அவருடன் நடைபெற்ற நகைச்சுவை நிகழ்வுகள் எல்லாமே இனிமையானவை. யோகி படத்திற்கு பிறகு இந்த உயிர் தமிழுக்கு திரைப்படம் அமீருக்கு உலக அளவில் மிகப்பெரிய இடத்தை பெற்றுத் தரும் என்று கூறினார். 

நடிகரும் இயக்குநருமான ராஜ்கபூர் பேசும்போது, 

“அநேகமாக ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் முதல் சினிமா மேடை இதுவாகத்தான் இருக்கும். அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஒரு எதார்த்தமான அரசியல்வாதியாக அமீர் நடித்துள்ளார். இந்த படத்தில் காதலுக்காக அரசியலில் ஜெயிக்க போராடும் ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். அரசியலில் அவர் அழகாக காய் நகர்த்தும் காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கும். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு இந்த படம் இன்னொரு மாநாடு போல  வெற்றிப்படமாக அமையும்” என்று கூறினார்.

நடிகர் ஆனந்தராஜ் பேசும்போது,

 “அமீர் எனது மிக நெருங்கிய நண்பர்.. அவருடன் இணைந்து நடித்தது நல்ல அனுபவம்.. அவருக்கென என ஒரு தனி இடம் இருக்கிறது.. எனக்கு இன்னும் நடிப்பு பசி இருந்துகொண்டே இருக்கிறது. அதற்கான கதாபாத்திரங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் அரசியல் நையாண்டி மட்டுமே இல்லாமல் ஒரு நல்ல கதையும் இருக்கிறது” என்று கூறினார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, 

“இந்த படத்தின் தலைப்புஎனது மனதுக்கு நெருக்கமான, அதேசமயம் இப்போது இருக்கும் சூழலில் தேவையான ஒரு தலைப்பும் கூட. என் படங்களை கூட நான் வெளி நிறுவனங்களிடம் கொடுத்துதான் வெளியிட்டு வருகிறேன். ஆனால் அமீர் மீது கொண்ட மதிப்பால் இந்த படத்தை நான் வெளியிடுவது என முடிவு செய்தேன். அவருடன் தொடர்ந்து பயணிக்க விரும்புகிறேன். இது ஒரு தொடக்கம்தான் அரசியலையும் அமீரையும் தவிர்க்கவே முடியாது.. சத்யராஜ், கவுண்டமணி போல இந்த படத்திற்கு பிறகு அமீர், இமான் அண்ணாச்சி என ஒரு காமெடி கூட்டணி உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்று கூறினார்.

நடிகர் ராஜசிம்மன் பேசும்போது,

 “இந்த படம் நிறைய நாட்கள் தயாரிப்பில் இருந்தது. வேறு யாரவது என்றால் இதை கிடப்பில் போட்டுவிட்டு சென்று இருப்பார்கள். ஆனால் இயக்குநர் ஆதம்பாவாவும்,அமீரும் விடாமல் முயற்சித்து ரிலீஸ் வரை கொண்டு வந்து உள்ளனர். இந்த படத்தில் நடிப்பதற்காக திடீரென ஒரு நாள் படப்பிடிப்பிற்கு கிளம்ப வேண்டியிருந்ததால், கோவையிலிருந்து இருசக்கர வாகனத்திலேயே சென்னை வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அந்த அளவுக்கு இந்த படம் எனக்கு நெருக்கமான ஒன்று என்று கூறினார்.