எம்புரான் – 2 திரைப்பட விமர்சனம்

இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே தனது ஆதர்ச மோகன்லாலை அதுவரை எந்த இயக்குநரும் காட்டாத மாஸ் அவதாரத்தில் லூசிபர் படத்தில் காட்டியிருந்தார்  பிருத்திவிராஜ் அதன் தொடர்ச்சியாக

மாபெரும் எதிர்பார்ப்புடன் அதன் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ளது ‘எல்2: எம்புரான்’

முதல் பாகத்தில் மாநில முதல்வரின் இறப்புக்குப் பிறகு புதிய முதல்வராக பதவியேற்ற அவரது மகன் ஜதின் ராமதாஸ் (டொவினோ தாமஸ்) தன் மீதான அவப்பெயரை களையும் நோக்கில் ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி சேர விரும்புகிறார். இதற்காக அக்கட்சியின் தலைவரான பால்ராஜ் படேல் (அபிமன்யுசிங்) உடன் கூட்டு சேர்கிறார்.

இதற்கு முதல்வரின் சகோதரி ப்ரியதர்ஷினி (மஞ்சு வாரியர்) கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் தன்னால் எதுவும் செய்யமுடியாத கையறு நிலையில் இருக்கிறார்.

முதல்வரின் இந்த நடவடிக்கையால் கேரளாவில் மத வெறுப்பும், கலவரமும் எந்நேரமும் வெடிக்க காத்திருக்கிறது. இப்படியான சூழலில் கேரளாவின் ஒரே நம்பிக்கையாக கருதப்படும் குரேஷ் ஆப்ராம் என்கிற ஸ்டீபன் நெடும்பள்ளி (மோகன்லால்), பத்திரிகையாளர் கோவர்தனின் (இந்திரஜித்) முயற்சியால் மீண்டும் என்ட்ரி கொடுக்கிறார்.

 தனது மாநிலத்தில் மீண்டும் அமைதியை கொண்டு வர முடிந்ததா? முதல்வரால் பால்ராஜ் உடனான அவருக்கு என்ன பகை? பால்ராஜுக்கும் சையது மசூதுக்குமான (பிருத்விராஜ்) தொடர்பு என்ன?
இப்படி பல கிளை கதைகளுக்கு பதில் சொல்கிறது ‘எல்2: எம்புரான்’.

குஜராத் கலவர பின்னணியில் இருந்து படம் தொடங்குகிறது கலவரத்தில் ஆதவற்று நிற்கும் சையது மசூத் என தொடங்கி

கேரள மாநில அரசியல் தொடர்பான காட்சிகள் என சென்று அதன் பிறகு மேற்கு ஆப்பிரிக்கா நோக்கி நகர்ந்து அங்க ஒரு பாலைவனத்தில் ஹீரோ மாஸ் என்ட்ரி கொடுக்கும்போது சுமார் ஒரு மணி நேரம் கடந்து விடுகிறது.
படத்தின் ஒவ்வொரு காட்சியும்,  பிரம்மாண்டமாய் திரையில் தெரிய வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து உழைத்திருக்கிறது இயக்குநர் பிருத்விராஜ் உள்ளிட்ட படத்தின் டீம். சுஜித் வாசுதேவனின் கேமரா, தீபக் தேவின் பின்னணி இசை, அகிலேஷ் தேவின் படத்தொகுப்பு என அனைத்தும் கதைக்கு தேவையானதை மிகச் சிறப்பாக தந்திருக்கின்றன.
 இவற்றை தாங்கிப் பிடிக்கும் அச்சாணியான திரைக்கதையில் இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரான முரளி கோபியும் கோட்டை விட்டிருக்கின்றனர்.
மூன்றுமணி நேரம் திரையில் விரியும் படத்தில் நினைவில் வைத்துக் கொள்ளத்தக்க காட்சிகளை விரல் விட்டு எண்ணிவிடமுடியும். நெடும்பள்ளியில் மஞ்சு வாரியர் உரையாற்றுவது, அதைத் தொடர்ந்து வரும் காட்சிகள் உள்ளிட்டவை உதாரணம்.
படத்திற்கு மிகப் பெரிய பலம் அதன் உலக தரத்திலான சண்டைக் காட்சிகள். குறிப்பாக  ஸ்டன்ட் சில்வா தெறிக்க விட்டிருக்கிறார்.

மோகன்லாலுக்கு முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகத்தில்நடிப்புக்கு வேலை இல்லையென்றாலும் படம் முழுக்க தனது ஆளுமையை ஒவ்வொரு காட்சியிலும் நிறுவுகிறார். பிருத்விராஜ் சுகுமாறன், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்ட அனைவருமே தங்கள் வேலையை திறம்ப்ட செய்துள்ளனர்.

 இயக்குநராக பிருத்விராஜ்பல இடங்களில் தனித்து தெரிகிறார். உதாரணமாக, குஜராத் தொடர்பான காட்சிகளை பதிவு செய்தவிதம் சிறப்பு.
முதல் பாகத்தில் மாஸ் மசாலாவை தாண்டி இருந்த நேட்டிவிட்டியை ஓரங்கட்டிவிட்டு முழுக்க முழுக்க  இந்திய பார்வையாளர்களை கவர  மேற்கொள்ளப்பட்ட இந்தப் பரிசோதனை முயற்சி படம் பார்ப்பவர்களை  அதிகமாகவே சோதிக்கிறது.