ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் பர்ஹானா

“மக்களின் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் கதைகளைத் தேர்வு செய்து தயாரிப்பதில் முதன்மையாக இருக்கும் நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’, ‘கைதி’ உள்ளிட்ட பல படங்கள் இதற்கு உதாரணம். தற்போது இந்த வெற்றிப் படங்களின் வரிசையில் அடுத்த படத்தினை உருவாக்கியுள்ளது ட்ரீம் வாரியர் நிறுவனம்.‘ஃபர்ஹானா’ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ என வித்தியாசமான கதைக் களங்களை மக்கள் ரசிக்கும் வகையில் இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘மான்ஸ்டர்’, ‘ராட்சசி’ உள்ளிட்ட படங்களின் மூலம் ஒளிப்பதிவில் முத்திரை பதித்த கோகுல் பினாய் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். மெலடி பாடல்கள் மூலம் இளைஞர்கள் மனதினைக் கொள்ளை கொண்டு வரும் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளராக பணி புரிந்துள்ளார். தேசிய விருது வென்ற சாபு ஜோசப் படத் தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்குநராக சிவசங்கர் பணியாற்றியுள்ளார். பிரபல கவிஞரும், எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன் வசனம் எழுதியுள்ளார். படத்தின் திரைக்கதையை இயக்குநர் நெல்சனுடன் இணைந்து கதாசிரியர்கள் சங்கர் தாஸ் மற்றும் ரஞ்சித் ரவீந்திரன் எழுதியுள்ளனர்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வரும் அக்டோபர் 7-ம் தேதி இந்த ‘ஃபர்ஹானா’ படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது. இந்தப் பாடல் கண்டிப்பாக அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் படக் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.