கோப்ரா நான் எதிர்பாராத வாய்ப்பு-இயக்குநர் அஜய் ஞானமுத்து

லலித்குமார் தயாரிப்பில் விக்ரம் பல்வேறு வேடங்களில் நடித்திருக்கும் படம் கோப்ரா இம்மாத இறுதியில் உலகம் முழுவதும் வெளியிடப்பட இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது விழாவில் இயக்குநர் அஜய் ஞானமுத்து பேசுகையில், ” இமைக்கா நொடிகள் படம் வெளியாவதற்கு முன் தயாரிப்பாளர் லலித் குமார் என்னை அழைத்து, சீயான் விக்ரம் அவர்களின் கால்ஷீட் இருக்கிறது. அவர்களை வைத்து படமொன்றை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறோம். பணியாற்ற இயலுமா? என கேட்டார். எப்படி என் மீது அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கான உயரத்தை.. நான் கடக்க வேண்டிய உயரத்தை.. அவர் நிர்ணயித்தார். படத்தின் இசைக்காக ரஹ்மானை கேட்கலாமா? என கேட்டார். அவர் என்னை ஏதோ ‘பிராங்க் பண்ணுகிறார்’ என்று எண்ணி, நானும் சரியென்றேன். சில தினங்கள் கழித்து ரகுமானை அவர்களது வீட்டில் சந்தித்து கதையை சொல்லுங்கள் என சொன்னார். எனக்கோ அவரை சந்தித்து அவருடன் ஒரே ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தது. கதையை விவரிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அவரை அவரது வீட்டில் சந்தித்த உடன், கதையை சொல்ல தயாரா? என கேட்டார். நான் உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். எடுத்துக் கொள்ளலாமா? எனக் கேட்டேன். பிறகு கதையை விவரிக்க தொடங்கினேன். அவருக்கு கதை பிடித்திருந்தது. இசையமைக்க ஒப்புக்கொண்டார். அதன் பிறகு ஐந்து பாடல்கள் ‘கோப்ரா’விற்காக வழங்கி இருக்கிறார். ஒவ்வொன்றும் அற்புதமானது. அவருடன் இணைந்து பணியாற்றிய ஒவ்வொரு தருணங்களும் மறக்க இயலாதவை. இர்ஃபான் பதான், அவர்களைசந்தித்து கதையை சொன்னபோது, என்னால் நடிக்க முடியுமா? எனக் கேட்டார். உங்களால் முடியும் என்று நம்பிக்கை அளித்தேன் அத்துடன் அவருக்காக தமிழ் மொழி பயிற்சியாளர் ஒருவரை நியமித்து, தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்பித்தோம். உடன் நடிப்பு பயிற்சியையும் அளித்தோம். சில தினங்களிலேயே தமிழ் மொழி உச்சரிப்பை தெளிவாக உச்சரித்து நடித்து அசத்தினார்.‘கே. ஜி. எஃப்’ படத்தின் முதல் பாகம் வெளியாகி இருந்த நிலையில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியை சந்தித்தோம். அந்தப் படத்திற்கும், ‘கோப்ரா’ படத்திற்கும் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரம். அவரின் வேறு காணொளிகளை கண்டு, அவரின் திறமைக்காகவே இதில் நடிக்க ஒப்பந்தம் செய்தோம்.யாரை போல் ஆக வேண்டும்? எனக் கேட்டால், இயக்குநர் கே. எஸ். ரவிக்குமாரை போல் தொடர்ந்து வெற்றியை அளித்த இயக்குநர் போல் ஆக வேண்டும் என சொல்வேன். இதன் காரணமாகவே இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அவரிடம் நடிக்க கேட்டேன். அவரும் ஒப்புக்கொண்டு நடித்திருக்கிறார்.
படத்தில் ரோபோ சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ஆனந்தராஜ்.. என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். அவர்கள் ஓரிரு காட்சியில் நடித்திருந்தாலும். முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.‘இமைக்கா நொடிகள்’ படத்தில் இயக்குநர் அனுராக் காஷ்யப் அவர்களை வில்லனாக நடிக்க வைத்திருந்தேன். இந்த படத்தில் மலையாள நடிகர் ரோஷன் மேத்யூ அவர்களை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறேன். இவரும் வித்தியாசமாகவேயிருப்பார்.  அனுராக் காஷ்யப் கதாப்பாத்திரத்தை விட பல மடங்கு வலிமையானது. என்னுடைய படங்களில் எப்போதும் வில்லனுக்கு தனி முக்கியத்துவம் அளித்து திரைக்கதையை எழுதுவேன்.நான் ‘ஏழாம் அறிவு’ படத்தில் கடைநிலை உதவியாளராக பணியாற்றியபோது, அதன் தயாரிப்பாளரான உதயநிதி அவர்களிடமிருந்து தான், முதன் முதலில் ஊதியம் பெற்றேன். தற்போது ‘கோப்ரா’ படத்தை அவர் பிரமாண்டமாக வெளியிடுகிறார். இதற்காக அவருக்கு  நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
படத்தின் நாயகனான சீயான் விக்ரம் அவர்களை சந்தித்து கதையை விவரித்த போது, மௌனமாக கேட்டார். படப்பிடிப்பு தளத்தில் நான் எந்த காட்சியை விவரித்தாலும், என் எதிர்பார்ப்பை கடந்து, அந்த காட்சியை வியக்கும் அளவிற்கு நடிப்பார். அவரின் நடிப்பு திறமையை கண்டு எனக்குள் சிறிய பொறாமையே ஏற்படும். நான் 50 சதவீத அளவிற்கு நேர்த்தியை எதிர்பார்த்தால்… அவர் 100% அளித்து அசத்துவார். படப்பிடிப்பு தளத்தில் எனக்கும், அவருக்கும் இடையே சிறிய போட்டியே நடைபெறும். அதில் அவரே வெற்றி பெறுவார். அப்படியொரு ஒரு பர்ஃபெக்ஸனிஸ்ட்.
படப்பிடிப்பின் போது எனக்கு உதவியாக பணியாற்றிய உதவி இயக்குநர்களுக்கு நன்றி. ஏனெனில் படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றபோது அங்கு சீதோஷ்ண நிலை மைனஸ் முப்பது டிகிரி. கடந்த 30 ஆண்டுகளில் மோசமான பருவநிலை என்று அவர்கள் தெரிவித்தார்கள் இந்த சூழலில் நாங்கள் அங்கு படப்பிடிப்பு நடத்தினோம். அதிக குளிர் காரணமாக பத்து நிமிடத்திற்கு மேல் பணியாற்ற இயலாது. அதற்கு மேல் பணியாற்றினால் மூக்கிலிருந்து ரத்தம் வழியும். இத்தகைய கடினமான உழைப்பை வழங்கி, இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். இதற்காக உதவியாளர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.