வணிக ரீதியிலான சரக்குகள் மற்றும் தளவாடங்களைக் கையாளும் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான
வி ஆர் எல் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி தயாராகியிருக்கும் ‘விஜயானந்த்’எனும் திரைப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில், டிசம்பர் ஒன்பதாம் தேதி அன்று வெளியாகிறது.
‘ட்ரங்க்’ எனும் படத்தை இயக்கிய ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘விஜயானந்த்’ திரைப்படத்தில் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஸ்ரீலதா பிரகலாத், பரத் போப்பண்ணா, அனந்த் நாக், வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை
வி ஆர் எல் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆனந்த் சங்கேஸ்வர்
தயாரித்திருக்கிறார்.இந்நிலையில் பட வெளியீட்டுக்கு முன் படக்குழுவினர், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று மாலை பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர் அப்போது
நாயகன் நிஹால் பேசுகையில்,

” இந்த விஜயானந்த் திரைப்படம் நான் கதாநாயகனாக நடித்த இரண்டாவது திரைப்படம். நான் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்ற தொடங்கினேன். நான் ஒரு மேடை நாடக நடிகரும் கூட. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், தொலைக்காட்சி தொடரிலும், சில திரைப்படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறேன். இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கிய ‘ட்ரங்க்’ படத்தில் நான் நாயகனாக அறிமுகமானேன். இருவரும் 2019 ஆம் ஆண்டில் அடுத்த படமாக வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்படத்தை உருவாக்கத் திட்டமிட்டோம். சுயசரிதை திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு எப்படி ஏற்பட்டது என்றால், அதற்கு மூல காரணம் என்னுடைய குருவாக நினைத்துக் கொண்டிருக்கும் இயக்குநர் மணிரத்னம் தான். அவர் இயக்கத்தில் வெளியான குரு திரைப்படத்தை பார்த்த பிறகு தான் எங்களுக்கும் இது போன்றதொரு படைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் பார்த்த முதல் சினிமா குரு. அது என்னை மிகவும் கவர்ந்தது. அதனால் டாக்டர் பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்றதும் உடனடியாக ஒப்புக்கொண்டேன். விஜய் சங்கேஸ்வர் சாதித்த சாதனைகள், எதிர்கொண்ட சவால்கள் அனைத்தும் எனக்கு வியப்பை அளித்தது. இதற்காக ஆறு மாதங்கள் ஆய்வு செய்து திரைக்கதை உருவாக்கினோம். அப்போது எங்களிடத்தில் தயாரிப்பாளர்கள் இல்லை. அதன் பிறகு விஜய் சங்கேஸ்வரை சந்தித்தோம். அவரை சந்தித்தவுடன், ‘உங்களுடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க விரும்புகிறோம்’ என சொன்னோம். ஒரு நிமிடம் அமைதி காத்தார். ‘நான் ஒரு பிரபலமான விளையாட்டு வீரனும் அல்ல. பிரபலமான திரைப்பட நடிகரும் அல்ல. பிறகு ஏன் என்னுடைய சுயசரிதையை திரைப்படமாக உருவாக்க விரும்புகிறீர்கள்?’ எனக் கேட்டார். அப்போது நாங்கள், ‘எங்களைப் போன்ற திரைப்பட நடிகர்கள் எல்லாம் திரையில் தான் நாயகர்கள். ஆனால் உங்களைப் போன்றவர்கள் தான் நிஜ கதாநாயகர்கள். உங்களின் வாழ்க்கை லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் முன்னுதாரண நட்சத்திரமாக இருக்கிறீர்கள்.’ என பதிலளித்தோம். அதன் பிறகு தொடர்ச்சியாக ஒன்பது மணி நேரம் வரை பேச்சுவார்த்தை நீண்டது. அதன் பிறகே அவர் சம்மதித்தார்.. படத்தை தயாரிக்கவும் ஒப்புக்கொண்டார்.
நான் ஒரு நட்சத்திர நடிகரல்ல என்றாலும், கதை மீதான நம்பிக்கையின் காரணமாக.. என்னை கதையின் நாயகனாக தயாரிப்பாளர் ஆனந்த் சங்கேஸ்வர் ஏற்றுக்கொண்டார். எங்கள் படக்குழு வளர்ந்து வரும் நட்சத்திரங்களையும், தொழில் நுட்ப கலைஞர்களையும் உள்ளடக்கியது. எங்கள் மீது முழு நம்பிக்கை வைத்து படத்தை உருவாக்கவும் வாய்ப்பளித்தார். ஏனெனில் சினிமா என்பது ஒரு கலை. வியாபாரம் அல்ல. இதனை உணர்ந்து கலை வடிவத்திற்குரிய மரியாதையும் அவர் வழங்கினார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.