‘குளு குளு’, ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படங்களுக்குப் பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பியிருக்கிறார் சந்தானம். அவரின் முந்தைய பாடி ஷேமிங், அடல்ட் வகையறா நகைச்சுவைகளை தவிர்த்துவிட்டு காட்சிகளுக்கு ஏற்றார் போன்ற டைமிங் காமெடிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் ப்ரேம் ஆனந்த். எதிர்பாராத தருணங்களில் ஆச்சரியப்படுத்தும் காட்சிகளுக்கு வலுசேர்க்கும் அவரது எழுத்து கதையோட்டத்துக்கு பெரும் பலம். நிறைய கதாபாத்திரங்களை கதைக்குள் கொண்டு வந்த போதிலும் அவற்றை வீண்டிக்காமலும், திணிக்காமலும் கொண்டு சென்றது நேர்த்தி. சின்ன சின்ன கொள்ளை கும்பல் அவர்களுக்கிடையே நடக்கும் சம்பவங்கள், கைமாறிக்கொண்டேயிருக்கும் பணம், சேஸிங், அதற்கு தகுந்தாற்போல நுழைக்கப்பட்ட காமெடிகள் என இடைவேளைக்கு முன்பு வரை கதைக்கருவான ஹாரருக்குள் நுழையாத திரைக்கதை பார்வையாளர்களுக்கு சோர்வை கொடுக்காமல் நகர்கிறது.
படம் மையக்கதைக்குள் நுழையும்போது ஒரு கேம், அதற்கான வெவ்வேறு லெவல்கள் என்ற கான்செப்ட் நமக்கு பழக்கப்பட்டிருந்தாலும், அதையொட்டி எழுதப்பட்டுள்ள
எளிதில் யூகிக்க முடிந்த கதையில் சில காமெடிக்காட்சிகளையும் சேர்த்தே கணிக்க முடிவது பலவீனம். பாண்டிச்சேரியில் நடக்கும் கதையில் சந்தானத்தின் சென்னை ஸ்லாங்க் திணிப்பு. முழுமையான படம் பார்த்த உணர்வுக்கு பதிலாக பல்வேறு நகைச்சுவைகளை கோர்த்து பார்த்த அனுபவம் இறுதியில் மிஞ்சுகிறது. வழக்கமான ஹாரர் பின்னணி இசை தான் என்றாலும் சில இடங்களில் கவனிக்க வைக்கிறார் இசையமைப்பாளர் ஆஃப்ரோ. பேய் பங்களாவுக்குள் நடக்கும் காட்சிகளை ரசிக்கும்படியாக பதிவு செய்திருக்கிறது தீபக் குமாரின் லென்ஸ். தேவையில்லாமல் எதையும் சேர்க்காமல், 3-4 குழுக்களை பிரித்து காட்சிய விதம், விறுவிறுப்பை சேர்த்தது, கேம் ஷோவை கச்சிதமாக காட்சிப்படுத்தி படத்தை அயற்சியில்லாமல் 2மணி நேரத்துக்குள் முடித்து கொடுத்துள்ளார் படத்தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த். கலையாக்கத்தில் ஏ.ஆர்.மோகனின் உழைப்பு பளிச்சிடுகிறது.மொத்தமாக கதையையோ, ஹாரரையோ எதிர்பார்க்காமல் அடல்ட் காமெடி, உருவகேலி வசனங்களில்லாமல் ஜாலியாக பார்த்து சிரிக்க படத்தின் பெரும்பாலான காட்சிகள் கைகொடுக்கின்றன.