திறந்திடு சீசே’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சிக்லெட்ஸ்’. இதில் நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம், நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். ராஜு கலை இயக்க பணிகளை மேற்கொள்ள, விஜய் வேலுக்குட்டி படத் தொகுப்பை கவனித்திருக்கிறார். 2k கிட்ஸிற்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இடையேயான தலைமுறை இடைவெளியை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் எஸ் பி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில்
ஏ. சீனிவாசன் குரு தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு 20.01.2024 காலை சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர்
ஏ. சீனிவாசன் குரு பேசுகையில்,
” இந்தத் திரைப்படத்தின் கதை விவாதம் கோவிட் காலகட்டத்திற்கு முன்னர் நடைபெற்றது. அந்தத் தருணத்தில் மற்றொரு திரைப்படத்தை உருவாக்குவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தோம். அப்போது இப்படத்தின் இயக்குநரான முத்து அடிக்கடி என்னை சந்திப்பதுண்டு. அப்போது சிக்லெட்ஸ் படத்தின் கதையை சொல்லி, இப்படத்தை உருவாக்கலாம் என சொல்வார். நான் இதன் திரைக்கதையை வாங்கி என்னுடைய மகள் ஸ்வர்ணா ஸ்ரீயிடம் கொடுத்து படிக்குமாறு சொன்னேன். அவர் இந்த கதையைப் படித்துவிட்டு 2k கிட்ஸ்க்கான கதையாக இருக்கிறது. இதனை முதலில் தயாரிக்கலாம் என சொன்னார். அதன் பிறகு மீண்டும் இயக்குநர் முத்துவை அழைத்து, இப்படத்தின் கதையை சொல்லச் சொன்னேன். அவரும் கதையை விவரித்து பட்ஜெட்டையும் சொன்னார். ஆனால் திட்டமிட்டதை விட கூடுதல் செலவு செய்து தரமான படமாக உருவாக்கி இருக்கிறோம் என்றார்.
இயக்குநர் எம். முத்து பேசுகையில்,
‘சிக்லெட்ஸ்’ படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே தருணத்தில் இயக்கி இருக்கிறேன். இந்தப் படத்தின் கதையை கிரியேட்டிவ் புரொடியூசர் ஸ்வர்ணா ஸ்ரீ படித்ததும் ஓகே சொல்லிவிட்டார்கள். அவர்களுக்கு இந்த கதை பிடித்ததால், படமாக தயாராகி பிப்ரவரி இரண்டாம் தேதியன்று வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தை தமிழில் தமிழ் சினி கார்ப்பரேஷன் சார்பில் தயாரிப்பாளர் S.நந்தகோபால் வெளியிடுகிறார். தெலுங்கில் எம் ஜி மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் எம். அச்சு பாபு வெளியிடுகிறார். இவர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திரைப்படத்தின் பணிகளை கோவிட் காலகட்டத்தின் போது தொடங்கினோம். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நாயகனான இசையமைப்பாளர் பாலமுரளி பாலு, தொடர்பு விமானம் கிடைக்காததால் சரியான நேரத்தில் இங்கு வருகை தர இயலவில்லை. படத்தின் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கிறது. பெற்றோர்களுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் இருக்கும் அன்பு.. ஒரு காதலனுக்கும் காதலிக்கும் இருக்கும் அன்பு.. இந்த அன்பு ஒருவரிடம் சேரும்போது வாழ்க்கையில் தோல்வி இருக்காது. வெற்றி பெறுவோம். ஆனால் அந்த அன்பு தோற்று விட்டால்.. வாழ்க்கையில் தோற்று விடுவோம் . பெற்றோர்களைப் பற்றி பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டும். பிள்ளைகளை பற்றி பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். டூகே கிட்ஸ் என்றால்… நான் இந்த தலைமுறையை தவறு சொல்லவில்லை. தற்போது கலாச்சாரம் மாறி இருக்கிறது. அதற்கேற்பதான் அவர்கள் தங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கலாச்சாரம் மாற மாற அதனால் பாதிப்பை சந்திப்பவர்கள் இளைய தலைமுறையினர் தான். வேறு யாரும் அல்ல. பெற்றோர்களாகிய நாம் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஏனெனில் நாம் வாழ்ந்த வாழ்க்கை முறை என்பது வேறு. தற்போதுள்ள இளைய தலைமுறையினர் வாழும் வாழ்க்கை வேறு. இதைப் பற்றி ஓப்பனாக பேசப் போனால்.. எங்களுக்கு கிடைத்திருக்கும் சர்டிபிகேட் ‘ஏ’. இதை ஓப்பனாக யார் பேசுவது? சமுதாயம் பேசாது. ஏனெனில் அதற்கு ஒரு பயம் இருக்கிறது. பிறகு யார் தான் பேசுவது? பெற்றோர்கள் தான் இது குறித்து அவர்களுடைய பிள்ளைகளிடம் பேச வேண்டும். இது செய்.. இது செய்யாதே.. இது சரி.. இது தவறு.. இதை சொல்லக்கூடிய ஒரே உரிமை பெற்றோர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. எல்லோருக்குள்ளும் ஒரு ரகசியம் இருக்கிறது. அதை வெளியில் சொன்னால் தப்பாகி விடும் என்பதற்காக தமக்குள்ளே வைத்துக் கொண்டவர்கள் தான் 80’ஸ் 90’ஸ் காலகட்டத்தினர். ஆனால் மனதில் நினைத்ததை வெளிப்படையாக பேசுபவர்கள் தான் இன்றைய இளம் தலைமுறையினர். தவறு என்று தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் பேசுவார்கள். தவறு என்றால் திருத்திக் கொள்ளலாம். ஆனால் மனதில் பட்டதை பேசாமல் அவர்களால் இருக்க முடியாது.
அவர்களுடைய பேச்சு எப்படி இருக்கும்? அணுகுமுறை எப்படி இருக்கும்? காதல் எப்படி இருக்கும்? காமம் எப்படி இருக்கும்? அவருடைய மனநிலை எப்படி இருக்கும். இவை எல்லாவற்றையும் இப்படத்தில் பேசியிருக்கிறோம். அதே சமயத்தில் பெற்றோர்களின் வலியையும் பேசியிருக்கிறோம்.
பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். ஆனால் வாழ்க்கையில் தோற்கக் கூடாது என்று தான் நினைப்பார்கள். அனைத்து பெற்றோர்களின் மனதிலும் இவைதான் இருக்கும். ஆனால் அதை ஒருபோதும் பிள்ளைகளிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ‘எப்படி வேண்டுமானாலும் வாழு. ஆனால் வாழ்க்கையில் நீ சிறந்தவனாக வெற்றி பெற வேண்டும்’ என்று சொல்லிப் பாருங்கள். பிள்ளைகளின் மனதிற்குள் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நம்மால் ஒரு விசயத்தை சாதிக்க முடியும் என்று நினைப்பவர்களுக்கு… இந்த சமுதாயத்தை எதிர்த்து வாழ முடியும் என்று நினைப்பவர்களுக்கு.. யாருடைய ஆதரவும் தேவையில்லை. ஒருத்தருடைய ஆதரவில் தான் மற்றவர்களால் வாழ முடியும் என்றால்.., நிச்சயமாக அவர்கள் ஆயுள் முழுவதும் அடுத்தவர்களை சார்ந்து தான் வாழ்வார்கள். இதைத்தான் நான் இப்படத்தில் தெளிவாக சொல்லி இருக்கிறேன்.” என்றார்.