தலைமை செயலகம் – வலை தொடர் விமர்சனம்

தமிழ்நாட்டு அரசியலில் திமுக குடும்ப அரசியல், அதிமுக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அரசியல், இரண்டையும் கலந்து செய்த கலவையாக தலைமை செயலகம் வலைத்தள தொடரை சமகால மத்திய பாஜக அரசின் தமிழ்நாடு தாக்குதலை இணைத்து இயக்கியிருக்கிறார் வெயில் பட இயக்குநர் வசந்தபாலன். வியாபாரம் என்று வருகிற போது அரசியல், கட்சி, கொள்கை, சித்தாந்தத்தை தூக்கி பரணில் போடு என்பதை பிசிறடிக்காமல் தொடரை தயாரித்திருக்கிறார் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடும் ராதிகா சரத்குமார்.

தலைமை செயலகம் தொடர் எப்படி?

 தமிழ்நாடு அரசியலில் நடந்த நிகழ்வுகளை நினைவுபடுத்தி

வட இந்தியாவிலிருந்து ஒரு பெண்மணியை தமிழ்நாட்டு அரசியலுக்குள் கொண்டு வரும் ஓர் அரசியல் இணையத் தொடராக வந்திருக்கிறது தலைமைச் செயலகம்.

கிஷோர்,ஸ்ரேயா ரெட்டி,பரத்,ரம்யா நம்பீசன்,ஆதித்யா மேனன்,கனி குஸ்ருதி,நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா,ஷாரா ப்ளாக்,சித்தார்த் விபின்,ஒய்.ஜி.மகேந்திரன், சந்தான பாரதி,கவிதா பாரதி உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் இத்தொடரில் இருக்கிறார்கள். அவர்களுடைய வேடமும் அதில் அவர்களுடைய நடிப்பும் ஒவ்வொரு பகுதியையும் சுவாரசியமாக நகர்த்த உதவியிருக்கிறது.

முதலமைச்சராக நடித்திருக்கிறார் கிஷோர்.அவரும் அவருடைய குடும்பமும் தமிழ்நாட்டில் தற்போது ஆட்சியில் இருக்கும் கட்சியின்அரசியல் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் போல் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களை வட இந்தியர்கள் குழு அழிக்கத் துடிப்பதும் அதனால் நடக்கும் நிகழ்வுகளும் நாம் அன்றாடம் சமீபகாலமாகசெய்தித்தாள்களில் படித்த பல செய்திகளை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.

கொற்றவை என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரேயா ரெட்டிக்கு, வாழ்நாள் முழுதும் பெருமை கொள்ளத்தக்க வேடம்.அதற்குத் தன்னை முழுமையாக ஒப்படைத்து அவரும் நற்பெயர் பெற்று தொடருக்கும் பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பரத் துடிப்புடன் செயல்பட்டிருக்கிறார்.

வைட் ஆங்கிள் ரவிசங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.கதைக்களம் அரசியல் என்பதால் காட்சிகளிலும் சூடு தெரிகிறது.கிஷோர் உள்ளிட்ட நடிகர்கள் முற்றிலும் மாறுபட்டுத் தெரிய அவர்களுடைய ஒப்பனை மட்டுமின்றி இவருடைய ஒளியமைப்பும் பெரும்பங்கு வகித்திருக்கிறது.

ஜிப்ரான் இசையும் சைமன்கேகிங்கின் கூடுதல் பின்னணி இசையும் கதாபாத்திரங்களின் மார்புத்துடிப்பைக் கூட பார்வையாளர்களுக்குக் கடத்தும் வண்ணம் சிறப்பாக அமைந்திருக்கிறது.

தமிழ்நாட்டைக் குறி வைத்து வேட்டையாடத் துடித்துக் கொண்டிருக்கும் வட இந்திய அரசியல் சூழ்ச்சியாளர்களையும் அவர்களுடைய எண்ணங்களையும் வசனங்கள் மூலம் வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார் இயக்குநர் வசந்தபாலன்.

அரசியல் தெரிந்தவர்கள் ரசித்துப் பார்க்கவும் தெரியாதவர்கள் கற்றுக் கொள்ளவும் நிறைய விசயங்கள் தொடரில் இருக்கின்றன.திரைக்கதையோட்டத்தில் இருக்கும் சில தொய்வுகளைத் தாண்டி அவை மேலோங்கி நிற்கின்றன.

முழுமையான அரசியல் மயப்படுத்தப்பட்ட வட இந்திய அரசியல் சூழ்ச்சியாளர்களுக்கு எதிரான இந்தத் தொடரை நடிகர் சரத்குமாரும் ராதிகாவும் தயாரித்திருக்கிறார்கள் என்பது ஓர் அழகிய முரண்.