நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா தயாரிப்பாளர்கள் சங்கம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க கடந்த ஏப்ரல் 30 அன்று தேர்தல் நடைபெற்றது.

முரளி ராமசாமி தலைமையில் நிர்வாகிகள் பதவிக்கு  தேர்தலில் போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றனர். புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்த பின் நேற்றையதினம்(18.06.2023) காலை சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  கால்ஷீட் சொதப்பல், ஒத்துழைப்பு கொடுக்காத நடிகர்கள் சம்பந்தமாக தென்னிந்திய நடிகர் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேசிய தலைவர் முரளி ராமசாமிபெயர் குறிப்பிடாமல் ஐந்து நடிகர்கள் என பொத்தாம்பொதுவாக குறிப்பிட்டது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக நடிகர் வடிவேலு நடிக்கும்படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்புக்கு வந்த பின் வடிவேலு மீதான தடையை நீக்கியது. நடிகர்கள் விஷால், சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, யோகிபாபு ஆகிய ஐந்து நடிகர்கள் மீது தொடர்ச்சியாக புகார்கள் கூறப்பட்டு வருவதால் அவர்கள் தான் அந்த ஐந்து நடிகர்கள் என்கின்றனர் தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் இது சம்பந்தமாக தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மட்டத்தில் கேட்ட போது தகவல் சரியானது. ஆனால் அதனை நாங்கள் நேரிடையாக குறிப்பிட்டு சொல்லமுடியாது என்றனர். மேற்குறிப்பிட்ட ஐந்து நடிகர்களில் தொடர்ச்சியாக, அதிக தயாரிப்பாளர்களால் குற்றசாட்டுக்கு உள்ளாகி இருப்பவர் காமடி நடிகர் யோகிபாபு. காமடி நடிகர்களின் கால்ஷீட் நெருக்கடி ஏற்பட்டபோது குறுகிய நாட்களில் விஜய், ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்களுடன் நடித்துகாமடி நடிகராக அசுரவளர்ச்சியை எட்டியவர் யோகிபாபு. அதன் பின்னர் ஒரே நாளில் மூன்று படங்களில் நடிக்கும் வழக்கத்தை கடைபிடிக்க தொடங்கினார். இதனால் இவரது கால்ஷீட்டை நம்பி படப்பிடிப்பை நடத்த முடியாமல் நெருக்கடிக்கு உள்ளானார்கள் தயாரிப்பாளர்கள். அதேபோன்று நடிகர் அதர்வா கதாநாயகனாக நடித்து வெளியான பெரும்பான்மையான படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தியவையே. இருந்தபோதிலும் புதிதாக படத்தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அதர்வா கால்ஷீட் கிடைத்தால்கூட போதும் என்ற நிலை வந்த போது அவரது சம்பளத்தை கோடிக்கணக்கில் கேட்க தொடங்கினார். அப்படி ஒப்பந்தம் செய்த தயாரிப்பு நிறுவனங்களின் படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவது, கால்ஷீட் தேதிகளை சொதப்புவது என அவரது நடவடிக்கை இருந்தது.இதனால் அதர்வா நடித்த தயாரிப்பாளர்கள் பெரும்பண விரயத்தை எதிர்கொண்டனர்.மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தார் அதன் பின் தமிழ் சினிமாவில் வில்லன் வேடமா எஸ.ஜே.சூர்யாவை அழைக்க தொடங்கினார்கள். இதனால் சம்பளத்தை அவர் அதிகரித்தார். ஒரு கட்டத்தில் அதிக சம்பளம் கொடுத்த தயாரிப்பாளருக்கு ஏற்கனவே பிறருக்கு கொடுத்த கால்ஷீட்டை வழங்கினார். இது சம்பந்தமாக எஸ்.ஜே.சூர்யாவிடம் தயாரிப்பாளர்கள் கேட்க தொடங்கியபோது சம்பளத்தை அதிகமாக கொடுங்கள் அல்லது கொடுத்தசம்பளத்தை திருப்பி தருகிறேன் என கூற தொடங்கினார். இவர்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட காரணங்களாக இருக்கிறது விஷால், சிலம்பரசன் சம்பந்தமான புகார்கள். விஷால் குறிப்பிட்ட நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வருவதில்லை என்பதுடன், தொடர்பு எல்லைக்குள் அவரது தொலைபேசி இருப்பதில்லை. தாமதமாக வருவது என்பதை கடந்து தொடர்ந்து படப்பிடிப்பிற்கு வராமல் தகவல் கூறாமலும் இருப்பார் இதனால் அவர் நடித்த படங்களின் தயாரிப்பாளர்களுக்கு ஏராளமான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகவும் விஷால் பதவியில் இருந்ததால் அவர் மீது புகார் கூறவோ, நடவடிக்கை எடுக்கவோ இயலாத நிலையில் தயாரிப்பாளர்கள் இருந்தனர். தற்போது தயாரிப்பாளர்கள் சங்க தலைமை மாறியிருந்தாலும் நடிகர் சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளராக விஷால் இருக்கிறார். இதனால் தயாரிப்பாளர்கள் சங்கம் புகாருக்கு உரியவரிடம் எப்படி பேச்சுவார்த்தை நடத்த இயலும் என்கின்றனர் தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில்.நடிகர் சிலம்பரசன் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ஒப்புக் கொண்ட அடிப்படையில் கால்ஷீட் வழங்காமல் கமலஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்க தேதி கொடுத்திருக்கிறார். அதனால் சிலம்பரசன் மீது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் புகார் கொடுத்திருக்கிறார். இதன் அடிப்படையிலேயே நேற்றையதினம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் முடிந்த பின் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஐந்து நடிகர்கள் என முரளி ராமசாமி கூறியிருக்கிறார் எனக் குறிப்பிடும் தயாரிப்பாளர்கள் அவரால் அறிவிக்க மட்டும் தான் முடியும்நடவடிக்கை எடுக்க முடியாது என்கின்றனர். சிலம்பரசன் நடிக்கும் படத்தை தயாரிப்பது கமலஹாசன், அதனை வெளியிடும் பொறுப்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சம்பந்தபட்ட ரெட் ஜெயண்ட் மூவீஸ் அதே போன்று அவரது நண்பரும் நடிகர் சங்க செயலாளர் பதவியில் இருப்பவர் விஷால்.உதயநிதியின் கண் அசைவில் இயங்கும் முரளி ராமசாமியினால் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும். ஓவ்வொரு பொதுக்குழு முடிவிலும் இது போன்ற அறிவிப்புகள் வெளியிடுவதும் காலப்போக்கில் அது கானல்நீராகி விடுவதும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடப்பதுதான் அது போன்ற ஓர் அறிவிப்புதான் இது என்பதே பெரும்பான்மையான தயாரிப்பாளர்களின் கருத்தாக உள்ளது.