நடிகர் சங்கத்துக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் எச்சரிக்கை

தமிழ் சினிமாவில் நடிக்கும்நடிகர்களின் சம்பளம் மற்றும் படப்பிடிப்புக்கான தேதி ஒதுக்கீட்டில்( கால்ஷீட் ) நடைபெறும் குளறுபடி காரணமாகதயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதே போன்றுமுன்பணம் வாங்கிய அடிப்படையில் படங்களில் நடிக்காமல்,தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தி வருவதாகவும், இதனால் ஆகஸ்ட்16 ஆம் தேதி முதல் புதிய படங்கள் தொடங்க கூடாது. 2024 நவம்பர் 1 ஆம் தேதியில் இருந்து திரைப்பட தயாரிப்பு வேலைகள் எதுவும் நடத்தக்கூடாது என்றுபுதிதாக அமைக்கப்பட்டுள்ள திரைப்பட சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சூலை 29 ஆம் தேதி அறிக்கை ஒன்றின் மூலம்அறிவித்தது. இதற்கு அன்று இரவே தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவித்து மறுப்பு அறிக்கையொன்றை வெளியிட்டு சங்கத்தின் பெருளாளர் நடிகர் கார்த்தி செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். இந்த நிலையில் நேற்று கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில்
29.07.2024 அன்று தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், நடிகர் தனுஷ் அவர்கள் மீது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் எந்த வித புகாரும் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்கள். அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.ஏனெனில்,  ஓராண்டுக்கு முன்பு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவில் தயாரிப்பாளர்களுக்கு பிரச்சனை மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுத்தும் முக்கிய 5-நடிகர்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த தகவல் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் தெரியப்படுத்திய தகவல் அப்பொழுது அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.
மேலும், கடந்த ஓராண்டு காலமாக தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது அவர்களுக்கு மேற்படி விஷயம் தொடர்ந்து சுட்டிக்காட்டப்பட்டு வந்தது. ஆனால், தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த பிரச்சனை சம்பந்தமாக தயாரிப்பாளர்களுக்கு எந்தவிதமான தீர்வும் ஏற்படுத்தி தரவில்லை. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களின் நலனை காக்கவே இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், தயாரிப்பாளர்களுக்கு உள்ள பிரச்சனைகளை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விவாதித்து தீர்வு காண்பது சங்கத்தின் கடமையாகும்.

அதே போல் 01.11.2024 முதல் படப்பிடிப்புகள் முழுமையாக நிறுத்தி திருத்தி அமைக்கப்பட்ட விதிமுறைகளுடன் (New Guideline) படப்பிடிப்பு பணிகளை தொடர தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அடங்கிய கூட்டமைப்பு (Joint Action Committee) எடுத்துள்ள முடிவிற்கு தாங்கள் கண்டனம் தெரிவித்துள்ளீர்கள்.
இன்றைய சூழ்நிலையில் பணத்தை முதலீடு செய்யும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள், தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரை பெரும் பொருளாதார இழப்பிலிருந்து பாதுகாத்து திரைத்துறையையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு உள்ளது. ஆகையால்தான் கூட்டமைப்பு கூட்டத்தினை கூட்டி இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்றுக்கொண்டு, அந்த வரிசைப்படித்தான் நடித்துக் கொடுத்து வருவது என்பது காலங்காலமாக இருந்து வரும் மரபு. அவ்வாறு இல்லாமல் புதிதாக திரைப்படம் எடுக்க வருபவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, ஏற்கனவே பணம் கொடுத்தவர்களுக்கு நடித்து கொடுக்காமல் மற்றவர்களுக்கு நடித்து கொடுப்பது எந்தவிதத்தில் நியாயமாகும்? இப்படி இக்கட்டான சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் கூட்டமைப்பின் மூலம் அறிவிக்கப்பட்ட அறிக்கை தவறானது கண்டனத்திற்குரியது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் கூறியிருப்பதை வாபஸ் பெற வேண்டும்.தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இனி ஒப்பந்தம் செய்துகொண்டுதான் படம் நடிக்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளீர்கள். எங்களது தயாரிப்பாளர்கள் தரப்பிலும் கால்ஷீட் நாட்களை குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்து கொடுங்கள் என்று கேட்கின்றோம்.ஆனால் நடிகர்கள் அதனை பொருட்படுத்தவில்லை என்பதை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களை எப்படி நீங்கள் பாதுக்காக்கிறார்களோஅதே போல்  எங்களது சங்க உறுப்பினர்களை பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கும் உள்ளது.
நடிகர்கள் சம்பளம் மற்றும் படப்பிடிப்பு செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்ற  காரணத்தினால் மேலும் மேலும் நஷ்டத்தினை எதிர்கொள்ள தயாரிப்பாளர்களால் இயலவில்லை.மேலும், கடந்த 6-மாத காலத்தில் தயாரிப்பாளர்கள், தங்களது திரைப்படங்களை வியாபாரம் செய்ய இயலாமல் தொலைக்காட்சி, ஓடிடிஎன அனைத்து வியாபார தளங்களிலும் பொருளாதார ரீதியாக மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவதை கருத்தில் கொண்டு அவர்களை காப்பாற்றிடவும். எதிர்கால தயாரிப்பாளர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் மேற்கண்ட தீர்மானங்கள்கனத்த இதயத்துடன் எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏற்கனவே கூட்டமைப்பின் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தீர்மானத்தை அமல்படுத்துவதில் மூன்று சங்கங்களும் உறுதியாக உள்ளது. இதனை புரிந்து கொண்டு தென்னிந்திய நடிகர் சங்கமும் தகுந்த ஒத்துழைப்பு வழங்கும் என்று உறுதியாக நம்புகிறோம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தயாரிப்பாளர்கள் சிலரிடம் பேசிய போது…. தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் நலனுக்காக கூட்டு நடவடிக்கை குழு உறுதியாக எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்க கூடியதே. சாமான்ய தயாரிப்பாளர்கள் நடிகர்களால் பாதிக்கப்படும் போது அதற்கு தீர்வு காண சங்கம் எந்த முயற்சியும் எடுத்தது இல்லை. தற்போது சங்கத்தின் உறுப்பினாராக உள்ள நடிகர் தனுஷ் அவர்களை குறிப்பிட்டு முடிவு எடுப்பதும், அறிக்கை வெளியிடுவதும் நிர்வாகிகள் சிலரின் தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள தனுஷ் அவர்களுக்குஅழுத்தம் கொடுப்பதாகவே கருத வேண்டியுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி ராமசாமி தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடித்த படம் முடிவடையாமல் முடங்கியுள்ளது. சங்கத்தின்கெளரவ செயலாளர் ஒருவர் தனுஷ் கால்ஷீட் கேட்டு கொடுக்கவில்லை அதனால் எழுந்த கோபம் அனைத்தும் சேர்ந்து தனுஷ் முன்னிலைப்படுத்தபடுகிறார் என்றனர்.