வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் படைப்பு ரீதியாக பாராட்டுக்களை குவித்த படம் வெங்காயம்.
அந்த படம் எடுத்த கதையை பிரசுரித்த பத்திரிகை ஒன்று இந்த அனுபவங்களையே ஒரு படம் எடுக்கலாம் என்று எழுதியது. அத்துடன் இன்னொரு பத்திரிகையில் வெங்காயம் படம் ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றத்தைப் பிரசுரித்தது.
இந்த இரண்டு விஷயங்களையும் மனத்தில் இருத்திக்கொண்டு இவற்றை வைத்தே 13 வருடம் கடந்த பின்னர் பயாஸ்கோப்படத்தை எடுத்து வெளியிட்டு இருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார்.
அதேபோல் தொழில்முறை நடிகர்கள் அல்லாது அந்த இரண்டு சம்பவங்களிலும் சம்பந்தப்பட்ட மனிதர்களே இந்தப் படத்தின் பாத்திரங்களாகவும் நடித்திருப்பதும் சாதனைதான்.
கிராமத்திலிருந்து கிளம்பி சென்னை வந்து தான் கற்ற சினிமாக்கலையை மீண்டும் கிராமத்துக்கு எடுத்துப் போய் அங்கிருக்கும் சிறுவர், சிறுமியர், மூத்த குடிமக்களை நடிக்கவைத்து வெங்காயம் படத்தை எடுத்த கதையை முதல் பாதியிலும், அந்தப் படம் வெற்றி பெறாவிட்டாலும் அது ஒரு பெண்ணின் வாழ்க்கையை எப்படி மாற்றிக் காட்டி படம் எடுத்த நோக்கத்தை நிறைவேற்றியது என்கிற உண்மைச் சம்பவத்தை இரண்டாவது பாதியிலும் கதையாகச் சொல்லி இருப்பவர், வெங்காயம் படத்தைப் போன்றே இதிலும் சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் மூடநம்பிக்கையைச் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
முதல் பாதிப் படத்தைப் பொறுத்தவரை அவர்தான் கதாநாயகன். அவருடன் போட்டி போட்டு நடித்து பிரமிக்க வைத்திருக்கிறார்கள் அவர் சொந்தங்களும், பந்தங்களும், சுற்றங்களும். அதிலும் அந்த ஆக்க்ஷன் சொல்லும் டைரடக்கர் பாட்டி அசத்தியிருக்கிறார்.
இரண்டாவது பாதியில் வந்திருக்கும் நிஜ நாயக நாயகியரும் அவர்களது உறவினர்களும் கூட அத்தனை இயல்பாக நடித்திருக்கிறார்கள். அப்படி ஒரு நடிப்பை வாங்கி இருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார்
தொழில்நுட்ப ரீதியாக பெரிய அளவு பாராட்ட முடியாவிட்டாலும் இந்தப் படத்துக்கு என்ன தேவையோ அதை சரியாக கொடுத்திருக்கிறது பட்ஜெட்டும், ராஜ்குமாரின் படைப்பு திறனும்.
முன் பாதியில் இவர்கள் படம் எடுக்கிறோம் என்கிற பெயரில் அடிக்கும் கொட்டத்தை இன்னொரு கேமரா நம் பார்வையில் படம் பிடித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்தே போகிறோம்.
அதேபோல் இந்தப் படத்துக்கு என்ன இசை தேவையோ அதை மட்டும் தந்திருக்கிறார் தாஜ்நூர்.
படத்தில் பாரதிராஜா, சேரன், சத்யராஜ், மிஷ்கின் உள்ளிட்ட முதல் நிலை இயக்குனர்களை அவர்களாகவே உள்ளே கொண்டு வந்திருப்பது இயல்பாக இருக்கிறது.
இவ்வளவு சிறப்புகளைக் கொண்டிருந்தும் இத்தனை கருத்துக்கள் கொண்டு நாம் பார்க்கும் பார்வையில் சராசரி ரசிகனால் இந்தப் படத்தைப் பார்த்து ரசிக்க முடியுமா என்பது வெங்காயத்தைப் போலவே இதிலும் ஒரு கேள்விக்குறிதான்.
ஆனாலும், உலக முயற்சியாக அமைந்திருக்கும் இந்தப் படத்தை மாற்று சினிமாவை நேசிக்கும் எல்லோரும்கொண்டாடியே ஆக வேண்டும்.