பார்த்திபன் நிகழ்த்திய உலக சாதனை

இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கத்தில் குழந்தைகள் நடித்திருக்கும்  திரில்லர் திரைப்படமான ‘டீன்ஸ்’ படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடுசென்னை வடபழநியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது.விழாவில் படத்தின் முன்னோட்டத்தைஇயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார்.  ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் இசை  கமலா திரையரங்கில் நான்கு காட்சிகளாக தொடர்ந்து வெளியிடப்பட்டு புதிய  சாதனையை படைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து, ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழ் ‘டீன்ஸ்’ திரைப்படத்திற்கு உலக சாதனைகள் சங்கத்தால் வழங்கப்பட்டது.

பதின்மூன்று குழந்தைகளை மையமாகக் கொண்ட கதை என்பதால் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 13 இளம் வயதினருக்கு இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் ‘டீன்ஸ்’ படக் குழு நேரில் பாராட்டு தெரிவித்தது.

கால்டுவெல் வேள்நம்பி,

டாக்டர் பாலசுவாமிநாதன்,
டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன்,
ரஞ்சித் தண்டபாணி மற்றும் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். பயாஸ்கோப் டிரீம்ஸ் எல் எல் பி மற்றும் அகிரா ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் ‘டீன்ஸ்’ தயாராகியுள்ளது. இத்திரைப்படத்திற்காக இசை அமைப்பாளர் D. இமான் மற்றும் ஒளிப்பதிவாளர் காவ்மிக் ஆரி ஆகியோருடன் முதல் முறையாக இராதாகிருஷ்ணன் பார்த்திபன் இணைந்துள்ளார்.

இந்த ‘டீன்ஸ்’ இசை வெளியீட்டு விழாவில் பாராட்டு பெற்ற 13 இளம் சாதனையாளர்களின் சார்பாக இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம் பேசும்போது,

 “எங்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து கௌரவித்த பார்த்திபன் அவர்களுக்கு மிக்க நன்றி. ‘டீன்ஸ்’ திரைப்படம் பற்றி கூற வேண்டும் என்றால் இது பார்த்திபனின் கனவு. அவரும், இசையமைப்பாளர் டி.இமான் அவர்களும் முதல் முறையாக இணைந்துள்ளார்கள் பாடல்களை கேட்டேன், மிகவும் அருமையாக உள்ளன. உங்கள் அனைவரைப் போன்று நானும் இத்திரைப்படத்தை திரையரங்குகளில் காண ஆவலாக உள்ளேன்.” என்றார்.

 ‘டீன்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன் பேசும்போது,
“நான் ஒரு குழந்தைகள் நல மருத்துவர். குழந்தைகளை மையப்படுத்திய இந்த ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் கதையை பார்த்திபன் எங்களிடம் சொல்லும்போதே நான்கு தயாரிப்பாளர்களுக்கும் மிகவும் பிடித்திருந்தது.

சொல்லப் போனால் பார்த்திபனே ஒரு டீன் ஏஜர்தான். இத்திரைப்படத்தில் 13 டீன் ஏஜர்கள் உடன் பணியாற்றியதால் அவர் இன்னும் இளமையாக, அவர்கள் அனைவரின் உற்சாகத்தையும் தன்னகத்தே கொண்டு திகழ்கிறார்.

இசையமைப்பாளர் இமான் மிக அருமையான பாடல்களை இத்திரைப்படத்திற்கு தந்துள்ளார். சிறுவர்கள் மட்டுமில்லாது அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்கக் கூடிய இத்திரைப்படம் அனைவரின் ஆதரவையும் பெற்று வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.” என்றார்.

படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடும்சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும்போது,
 “பார்த்திபன் சார் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் மற்றும் இயக்குநர். நான் ஒரு டீனேஜராக இருந்தபோது அவரது ‘புதிய பாதை’ திரைப்படத்தை பார்த்து ரசித்தேன். இப்போது அவரது ‘டீன்ஸ்’ திரைப்படத்தை நான் வெளியிடுகிறேன்.

இந்தப் படத்தில் நடித்த டீனேஜர்களுக்கு 40 வயதாகும்போது அன்றைய டீனேஜர்கள் குறித்தும் பார்த்திபன் ஒரு படம் இயக்குவார் என்பது நிச்சயம். அந்த அளவுக்கு தன்னை அவர் இளமையாகவே வைத்துக் கொண்டுள்ளார்.ஒரு திரைப்படத்தின் விநியோக உரிமையை வாங்கும்போது அதை எவ்வாறு புரொமோஷன் செய்ய வேண்டும் என்று நான் யோசித்து திட்டமிடுவது வாடிக்கை. ஆனால் பார்த்திபன் சார் திரைப்படத்திற்கு அவ்வாறு எதுவும் செய்ய தேவை இல்லை. எங்களைவிட சிறப்பாக அவரே அனைத்துவிதமான புரொமோஷன்களையும் செய்து கொண்டிருக்கிறார்” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது, “இத்திரைப்படத்தில் அனைத்துமே நிறைவாக அமைந்துள்ளன.  ‘டீன்ஸ்’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள். பார்த்திபன் சாரின் ‘புதிய பாதை’யே இன்னும் பழைய பாதையாகவில்லை, 33 வருடங்களுக்கு பின்னாலும் இன்னும் புதுமையாகவே உள்ளது. ஆனால், அவர் மேலும் பல புதிய பாதைகளை போட்டுக்கொண்டே செல்கிறார்.” என்றார்.

இயக்குநர் சரண் பேசும்போது,

 “பார்த்திபன் சார் எப்போதும் உணர்ச்சி வசப்பட மாட்டார். உணர்ச்சிதான் அவர் வசப்படும். ‘டீன்ஸ்’ படத்தின் மூலம் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தையே தமிழுக்கு அவர் வழங்கியுள்ளார் என்றார்.
நடிகர் யோகிபாபு பேசும்போது,
 “பார்த்திபன் சார் உடன் பணியாற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக அவரிடம் கேட்டு வந்தேன். இறுதியாக இந்த ‘டீன்ஸ்’  படத்தில் அந்த ஆசை நிறைவேறி உள்ளது. அவருடன் இன்னும் நிறைய திரைப்படங்களில் பணியாற்ற ஆவலாக உள்ளேன். ” என்றார்.

இயக்குநர் பாக்யராஜ்பேசும்போது,

 “நாளைய சூப்பர் ஸ்டார்களாக வளரப் போகும் இந்த ‘டீன்ஸ்’ படத்தில் நடித்துள்ள 13 இளம் கலைஞர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள்.

என்னுடன் உதவி இயக்குநராக பணிபுரிந்த பார்த்திபன் இவ்வளவு பெரிய உயரத்தை தொட்டு இருப்பது மிகவும் பெருமை. எப்போதுமே வித்தியாசமாகவும் புதுமையாகவும் சிந்திப்பவர் பார்த்திபன். அவரது இந்த ‘டீன்ஸ்’  திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன், நன்றி.” என்றார்.

நடிகர் தம்பி ராமையா பேசும்போது, “இந்த ‘டீன்ஸ்’ திரைப்படத்தை காண்பதற்கு நான் மிகவும் ஆவலாக காத்திருக்கிறேன். நடிகர், இயக்குநர் என்பதையும் தாண்டி பார்த்திபன் சார் ஒரு மிகச் சிறந்த கவிஞர். இந்தப் படத்தில் ஏழு பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். எதை செய்தாலும் புதுமையாக செய்யும் பார்த்திபன் சார் பதிமூன்று முத்துக்களை இப்படத்திற்காக தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளார். அவர்கள் அனைவரும் நாளைய திரை வானில் சிறகடித்து பறக்க போவது உறுதி. இமானின் பாடல்கள் மிகவும் அருமையாக உள்ளன, கடின உழைப்புக்கு சொந்தக்காரர் அவர.” என்றார்.

இசையமைப்பாளர் D. இமான் பேசும்போது,

“இப்படி ஒரு இசை வெளியீட்டு விழாவை இதுவரை நான் பார்த்ததில்லை. அதற்காக பார்த்திபன் சாருக்கு நன்றி. இப்படத்தில் புதுமையான விஷயங்களை நிறைய முயற்சித்துள்ளோம். முதலில் ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் போதும் என்று இருந்த நிலையில் தற்போது அது ஏழு பாடல்களாக வளர்ந்துள்ளது. பார்த்திபன் சாரும் நானும் எப்போதோ இணைந்து பணியாற்றி இருக்க வேண்டியது, அது இப்போதுதான் கை கூடி உள்ளது. அவருடன் பணியாற்றியது மிகச் சிறந்த அனுபவம், ” என்றார்.