மாமன்னன் எங்களை பற்றிய படமல்ல – எடப்பாடி பழனிச்சாமி

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சூன் 29 அன்று ‘மாமன்னன்’ படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் பொதுவெளியிலும், அரசியல் வட்டாரத்திலும் விவாதங்களை ஏற்படுத்தி கவனத்தை பெற்று வருகிறது.ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் 35 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும்  வரவேற்பை பெற்று வருகிறது. ‘மாமன்னன்’ படத்தின் வெற்றியை ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டானர். இயக்குநர் மாரிசெல்வராஜ்க்கு தயாரிப்பு நிறுவனம் கார் ஒன்றை பரிசாக வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது.இந்நிலையில், அ.தி.மு.க. பொதுசெயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களை சந்தித்த போதுஅவரிடம் ‘மாமன்னன்’ திரைப்படம் குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த எடப்பாடி, “நான் மாமன்னன் படம் பார்க்கவில்லை. பார்க்காததை குறித்து நான் எப்படி பேச முடியும். எங்களுடைய இயக்கம் வேறு, அவர்களுடைய இயக்கம் வேறு. எங்கள் இயக்கத்தில் யாராவது நடித்திருந்தால், அதில் ஏதாவது திரைக்கு வந்திருந்தால் அதில் இருந்த கருத்துகளை கேட்டால் படம் நான் பார்த்திருந்தால் அதற்கான பதிலை நான் சொல்ல தயாராக இருக்கிறேன்” என்று கூறினார். மாமன்னன் படத்தில் வடிவேல் கதாபாத்திரம் முன்னாள் சபாநாயகர் தனபாலை நினைவூட்டுவதாக படம் பற்றிய விமர்சனங்களில் குறிப்பிடப்பட்டு வருவதுடன் கதை நிகழும் களம் எடப்பாடி பழனிச்சாமியின் செந்தமாவட்டமான சேலம் என்பது குறிப்பிடத்தக்கது.