மாமன் – திரைப்பட விமர்சனம்

தமிழ் சமூகத்தில் அழிந்து போகாத

” தாய்மாமன்” மகத்துவத்தை பாசமும், எமோசனுலும் கலந்த கலவை மாமன் திரைப்படம்.

சுவாசிகாவும் சூரியும் அக்கா தம்பி. அக்காவுக்குக் கல்யாணமாகிப் பலவருடங்களாகியும் குழந்தை இல்லை.அதன்பின் ஓர் ஆண்குழந்தை பிறக்கிறது.
அந்தக் குழந்தையைஆசையாய் வளர்க்கிறார் சூரி.அவன் வளர்ந்து சிறுவனாகிறார். அந்தச் சிறுவனாலேயே சூரியுடைய மணவாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுகிறது. அது என்ன? அதன் முடிவென்ன? என்பதுதான் மொத்த திரைக்கதை .

நாயகனாக நடித்திருக்கும் சூரி,அன்புக்கும் பாசத்துக்கும் கட்டுப்பட்ட இளைஞர் வேடமேற்று அதற்குத் தக்க நடித்திருக்கிறார்.

நாயகி ஐஸ்வர்யா லட்சுமி சரியான தேர்வு. தன்னுடைய அழகு நடிப்பு ஆகியனவற்றால் பெரும் கூட்டத்தில் தனித்துத் தெரிகிறார்.

சூரியின் அக்காவாக நடித்திருக்கும் சுவாசிகாதான் படத்தின்

உண்மையான நாயகி எனலாம்.
குழந்தையில்லாத தவிப்பு, குழந்தையின் நலனுக்கான பரிதவிப்பு, கோபம் ஆகியனவற்றை வெளிப்படுத்திய விதத்தில் வரவேற்புப் பெறுகிறார்.

சிறுவனாக நடித்திருக்கும் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜின் மகன் நிலன், தன் சேட்டைகளால் கவர்கிறார்.சிரிக்க வைக்கிறார்.

ராஜ்கிரண் விஜிசந்திரசேகர் இணையர்,ஒவ்வொரு குடும்பத்தின் மூத்தோரையும் அவர்களுடைய அத்தியாவசியத் தேவையையும் உணர்த்தும் விதமாகப் படைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

சுவாசிகாவின் கணவராக நடித்திருக்கும் பாபா பாஸ்கருக்கு முக்கிய வேடம்.அதை உணர்ந்து நடித்திருக்கிறார்.பால சரவணன், ஜெயப்பிரகாஷ், கீதா கைலாசம், சாயா தேவி,நிகிலா சங்கர் ஆகியோரும் அளவாக நடித்திருக்கிறார்கள்.

தினேஷ் புருசோத்தமனின் ஒளிப்பதிவில்திரைக்கதையில் இருக்கும் அன்பு,பாசம் ஆகிய உணர்வுகளை பாத்திரங்களின் வாயிலாக திரையிலும் காட்டியுள்ளார்.

ஹேஷாம் அப்துல் வஹாப் இசையில் பாடல்கள் பெரிதாக கேட்கலாம் ரகம்.
கணேஷ்சிவாவின் படத்தொகுப்பு சிறப்பு

நாயகன் சூரியே தனக்கான கதை இதுதான் என எண்ணி எழுதியிருக்கிறார்.அதற்கு திரைக்கதை அமைத்து வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ்.அடிதடி வன்முறை ஆகியனவற்றை முற்றாகத் தவிர்த்து முற்று முழுதான குடும்பப்படமாகக் கொடுத்திருக்கிறார்.

சண்டைக்காட்சிகளில் இருக்கும் ஆக்ரோசத்தைவிட குடும்பஉறவுகளுக்குள் பிணக்கு ஏற்பட்டால் தெறிப்பு அதிகம் என்பதை உணர்த்தும் வகையான படத்தைக் கொடுத்திருக்கிறார்.