மேஜர் முகுந்த் வரதராஜனின் அடையாளம் மறைக்கப்படவில்லை அமரன்’ இயக்குநர் விளக்கம்

அமரன்’ திரைப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் கதாபாத்திரத்தின் உண்மையான அடையாளம் மறைக்கப்பட்டதாக எழுந்த விவாதத்துக்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார்.

‘அமரன்’ திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் நவம்பர்4 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசியதாவது:

 “தமிழ்நாட்டில் வாழும் தமிழ் ரசிகர்களாக இருந்தாலும் சரி, வெளிநாடுகளில் வாழும் உலகத் தமிழர்களாக இருந்தாலும் சரி, ஒரு கதையை நேர்மையாகவும், ஈடுபாட்டோடும் கொடுத்தால் அதை மிகப்பெரிய வெற்றியடையச் செய்வார்கள் என்ற நம்பிக்கை இந்த படத்தில் எனக்கு கிடைத்திருக்குறது. அடுத்தடுத்து இது போன்ற வித்தியாசமான முயற்சிகளை செய்யவேண்டும் என்று தோன்றுகிறது.

இந்த படத்தில் எது நிஜம், எது சித்தரிப்பு, எது உங்கள் கற்பனை என்றெல்லாம் நிறைய பேர் கேட்கின்றனர். பயோகிராபி என்பது ஒரு ஜானர். ‘டைட்டானிக்’, ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ இதெல்லாம் அந்த வகைப் படங்கள்தான். அவற்றுக்கென்று சில நியாய தர்மங்கள் இருக்கிறது. அவற்றை கடைபிடித்து எழுதப்பட்ட ஒரு திரைக்கதை இது. அது இன்று மிகப்பெரிய வெற்றியை அடைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒரு தமிழர் அடையாளம் இந்த படத்துக்கு இருக்க வேண்டும் என்பது இந்து ரெபக்கா வர்கீஸ் வைத்த கோரிக்கை. அதே போல முகுந்த் ‘நைனா’ நைனா’ என்று அழைக்கும் அந்த தந்தை வரதராஜனும், ‘ஸ்வீட்டி’ என்று அழைக்கும் தாய் கீதாவும் வைத்த கோரிக்கை, முகுந்த் எப்போதும் தன்னை இந்தியன் என்று சொல்லிக் கொள்ளவே ஆசைப்படுவார். தன்னுடைய சான்றிதழில் கூட எந்த குறியீடும் இருக்கக் கூடாது என்று நினைப்பார். எனவே ஒரு இந்தியன், தமிழன் என்ற அடையாளத்தை மட்டும் ஒரு ராணுவ வீரனாக இந்த படத்தில் அவருக்கு கொடுங்கள் என்று அந்த குடும்பத்தார் எங்கள் முதல் சந்திப்பிலேயே கேட்டுக் கொண்டனர்.

அதே நேரம் ஒரு இயக்குநராக, இந்த பயணத்தில் அவர் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது ஒரு முக்கியமான விஷயமாக எங்கள் பார்வைக்குப் படவில்லை. அவர்கள் வீட்டுக்கு நாங்கள் சென்றபோது கூட நாங்களும் அதை கேட்கவில்லை. அவர்களும் அதை சொல்லவில்லை” இவ்வாறு ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்தார்.