கள்ள நோட்டு’ திரைப்படத்தின் டீசரை சேலம் மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன் ஏ.ஆர். அறக்கட்டளை எஸ்.சுரேஷ்மோகன் இணைந்து வெளியிட்டனர்.
‘பணம் ஆறாம் அறிவு போன்றது, அது இல்லாமல் மற்ற ஐந்து அறிவுகளையும் நீங்கள் பயன்படுத்த முடியாது’ என்றார் பெர்னாட்ஷா.
‘பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம், ஆனால் வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றைப் பணத்தால் திருப்பித் தர முடியாது ‘என்றார் சார்லி சாப்ளின்.
இப்படிப் பணத்தைப் பற்றிய ஏராளமான பொன்மொழிகள், பழமொழிகள் உண்டு. ஆனால் பணம் பற்றிப் பேசும் அனைவர் மனதிலும் ரூபாய் நோட்டைப் போலவே கள்ள நோட்டைப் பற்றிய ஒரு கறுப்பு நிழலும் வந்து போகும்.
அப்படிக் கள்ள நோட்டு பற்றிய ஒரு கதையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள படம்தான்
‘கள்ள நோட்டு ‘
இப் படத்தினை எம்.ஜி. ராயன் எழுதி இயக்கியுள்ளார். சம்பத்குமார் .ஆ ஒளிப்பதிவு செய்துள்ளார். முத்து கொடப்பா படத்தொகுப்பு செய்துள்ளார் .பாடல்களை செல்வராஜா எழுதியுள்ளார்.
‘கள்ள நோட்டு ‘படத்தின்
நாயகனாக எம்.ஜி .ராயன், நாயகியாக மது, வில்லன்களாக குமார், மிப்புசாமி, வில்லியாக சுமதி, நாயகனின் நண்பனாக நா. ரஞ்சித்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் என்.ராஜேந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
கள்ள நோட்டு படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
விழாவில் திரைப்படத்தினை இயக்கி உள்ள எம் ஜி. ராயன் பேசும்போது,
“கள்ள நோட்டு பற்றி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் நன்றாக வந்திருக்கிறது. இது நிச்சயமாக வித்தியாசமான கதைக்களம் என்று நம்புகிறேன்.
இதில் கள்ள நோட்டு என்பதை விட நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு என்கிற கருத்தும் சொல்லப்பட்டுள்ளது. அது என்ன என்பதைப் படம் பாருங்கள் புரியும்.இதில் நாங்கள் அரசியல் எதுவும் பேசவில்லை, ஆனால் நாட்டு நடப்பைக் காட்டி இருக்கிறோம். சர்ச்சைகள் எதுவும் எழுப்பவில்லை, ஆனால் உண்மையைக் கூறியிருக்கிறோம் “என்றார்.