ரவிமோகன் அரசியல்வாதியாக நடிக்கும்” கராத்தே பாபு”

காதலிக்க நேரமில்லை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ரவி மோகன் நடிக்கும்34-வது திரைப்படத்தை டாடா பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்குகிறார்.

இப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் இருந்து ஹாரிஸ் ஜெயராஜ் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளதையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்தில் நடிகர் ரவி மோகன் அரசியல்வாதியாக நடிக்கிறார். இப்படத்தின் டைட்டில் டீசரை
படக்குழு வெளியிட்டிருக்கிறது.

சட்டசபையில் ரவி மோகன் பேசும் காட்சிகளுடன் வெளியான இந்த டீசரின் இறுதியில் இப்படத்தின் பெயர் ‘கராத்தே பாபு’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இப்படத்தில் டவ்டே ஜிவால் நாயகியாக நடிக்கிறார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், நாசர், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
தற்போது வெளியாகியிருக்கும் இப்படத்தின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சட்டமன்றத்தில் நடக்கும் ஒரு காட்சி டீசரில் இடம்பெற்றிருக்கும் நிலையில் அதில் எதிர்கட்சி தலைவராக வரும் கே.எஸ்.ரவிக்குமார் முதலமைச்சரைப் பார்த்து, “அவர் எதற்கு என் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரின் பழைய பெயரைத் தெரிந்து கொள்ள இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார், பெயரில் என்ன இருக்கிறது” எனக் கேள்வி எழுப்ப

அதற்கு முதலமைச்சராக வரும்
நாசர், “பெயர்கள் என்பது வெறும் வார்த்தைகள் அல்ல. மனிதத் தொடர்புகளின் அடிப்படை” என்று பெயருக்குப் பெரிய விளக்கம் கொடுக்கிறார்.

பின்பு சட்டமன்ற உறுப்பினராக வரும் ரவி மோகன், “முதலமைச்சர் என்னுடைய பழைய பெயரை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில் மகிழ்ச்சி எனச் சொல்லி, “உங்கள் அனைவருக்கும் என்னை சண்முக பாபுவாகத் தான் தெரியும் ஆனால் எனக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. 17வருடங்களுக்கு முன் ஆர்.கே.நகர் மக்களால் கொடுக்கப்பட்ட பெயர் அது” எனக் கூறி முடிக்க படத்தின் தலைப்பு ‘கராத்தே பாபு’ எனக் காட்டப்படுகிறது.