ராஜகுமாரி படம் இயக்கிய ரகசியத்தை சொன்ன இயக்குநர் பாக்யராஜ்

ஓம் ஜெயம் தியேட்டர் சார்பில் ஆர்.தீபக் குமார் தயாரித்து ஒளிப்பதிவு செய்திருக்கும் படம் ‘பியூட்டி’. அறிமுக இயக்குநர் கோ.ஆனந்த் சிவா இயக்கியிருக்கும் இப்படத்தில் நாயகனாக ரிஷி நடிக்க, நாயகியாக அறிமுக நடிகை கரீனா ஷா நடித்திருக்கிறார்.

 இவர்களுடன் காயா கபூர், சிங்கமுத்து, ஆதேஷ் பாலா, மனநல மருத்துவர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.தயாரிப்பாளர் ஆர்.தீபக் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு இலக்கியன் இசையமைக்க, தமிழக தலைமைச் செயலாளரும், எழுத்தாளருமான வெ.இறையன்பு மற்றும் தமிழ்முருகன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். 
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா  சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், தயாரிப்பாளரும் விநியோகஸ்தர்கள் சங்கத்தலைவருமான கே.ராஜன், இயக்குநர் அரவிந்தராஜ் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக்க் கலந்துக்கொண்டார்கள்.நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குநர் கோ.ஆனந்த் சிவா,“நான் பாக்யராஜ் சாரின் நேரடி சிஷ்யன் கிடையாது. பாக்யா பத்திரிகையில் ஓவியராகத்தான் பணியாற்றினேன். ஆனால், அவரிடம் உதவி இயக்குநர்கள் விவாதித்த விஷயங்கள், அவர் இல்லாமல் ஒரு குழுவாக சேர்ந்து விவாதிப்பார்கள், அந்த விவாதங்களில் நான் இருப்பேன். பெண்களை மையப்படுத்திய படங்கள் என்றுமே வெற்றி பெறும். 
எங்கள் இயக்குநரின் படங்களும் அந்த வகையைச் சார்ந்த படங்கள் தான். அதனால் தான் அவருடைய படங்கள் இன்றும் பேசப்பட்டு வருகிறது.முற்றிலும் வித்தியாசமான, எதிர்மறை எண்ணம் கொண்ட ஒருவருடன் நான் பழக நேர்ந்த பொழுது, அவரின் செயல்பாடுகள் என்னைப் பெரிதும் பாதித்தன. அவரிடம் நான் பார்த்த பல அதிர்ச்சிகரமான சம்பவங்களை அடிப்படையாக வைத்து நான் எழுதி, இயக்கியிருக்கும் படம் இந்த ‘பியூட்டி’. இந்தப்படம் முழுமையான கமர்ஷியல் படமாக மட்டும் இன்றி சமூகத்திற்கு தேவையான ஒரு படமாகவும் இருக்கும்.” என்றார்.இயக்குநர் கே.பாக்யராஜ் பேசுகையில்,“இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போது பாக்யா குடும்ப நிகழ்ச்சி போல தான் இருக்கிறது. பாக்யாவில் பணியாற்றிய பலர் இங்கு வந்திருக்கிறார்கள், மகிழ்ச்சியாக இருக்கிறது. 
இயக்குநர் ஆனந்த் சிவா நன்றி மறவாமல் அனைவரையும் அழைத்திருக்கிறார். அவர் அதிகமான புத்தகங்கள் படிப்பதாகச் சொன்னார்கள். படிப்பது என்றுமே நல்லது, அது நம்மைக்கைவிடாது. இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த போது பியூட்டி என்றதுமே ஏதோ காதல் படம் என்று தான் நினைத்தேன். 
காரணம், காதல் கதை தான் என்றுமே வெற்றி பெறும். அதனால் ஆனந்த் சிவா காதலை கையில் எடுத்திருக்கிறார் என்று நினைத்தேன். ஆனால், டிரைலரை பார்க்கும் போது காதலைத் தாண்டிய ஒரு கதை இருப்பது தெரிகிறது.ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி படத்தை எடுக்க ஒரு ஹாலிவுட் காதல் படத்தின் வசனம் தான் எனக்கு தூண்டுதலாக இருந்தது. நான் வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற போது பல நாடுகளில் அந்தப்படத்தின் போஸ்டரை பார்த்தேன், அதனால் அந்தப்படத்தின் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டு, அங்கிருக்கும் திரையரங்கில் பார்த்தேன்.
 அந்தப்படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம் தான், என்னை ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி படத்தின் கதை எழுததூண்டியது. அதனால், காதல் படங்களுக்கு என்றுமே ரசிகர்களிடம் ஒரு ஈர்ப்பு இருக்கும். இந்தப்படத்திலும் காதலும் முக்கிய பங்கு வகிப்பதால் நிச்சயம் ரசிகரகளிடம் வரவேற்பு பெறும் என்று நம்புகிறேன் என்றார்