அனிமேஷன் என்பது ஜப்பானில் மிக உயரிய கலை. ராமாயணம், அனிமேஷனாக எடுக்கப்பட்டால் உலக மக்கள் அனைவருக்கும் ராமரின் கதை போய்ச் சேரும்” என விஷ்வ ஹிந்து பரிஷத்தினரைச் சமாதானம் செய்கிறார் யூகோ சாகோ.
இந்திய அரசாங்கம், முதலில் ஒத்துக் கொண்டு, பின்னர் கூட்டுத் தயாரிப்பாகப் படத்தை எடுக்கும் யோசனைக்கு மறுப்புத் தெரிவித்தது. ‘நிப்பான் ராமாயண ஃபில்மி கார்ப்ரேஷன்’ எனும் நிறுவனத்தைத் தொடங்கி, முழுவதும் ஜப்பானியர்களால் தயாரிக்கப்பட்டது இப்படம்.
இப்படம், முதல்முறையாக கோவாவில் நடந்த 24 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் காட்சியிடப்பட்டது. பாபர் மசூதி இடிப்பின் காரணமாகவும்,
இப்படத்தின் அகில இந்திய வெளியீட்டு உரிமையை, ராஜன் லால், ஷ்ரிங்கார் ஃப்லிம்ஸ் ஆகியோருடன் இணைந்து கமல்ஹாசனும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும், ஏப்ரல் 1997-ல்தான் மிகக் குறைந்த திரையரங்குகளில் இப்படம் வெளியானது.
இந்தியர்கள் நால்வருடனும், ஜப்பானியர்கள் இருவருடனும் இணைந்து, யூகோ சாகோ ராமாயணா படத்திற்கான திரைக்கதையை எழுதியுள்ளார். ராமாயணத்தின் மிக எளிமையான வடிவமாகத் திரைக்கதையை அமைத்துள்ளனர்.
தாடகையை வதம் புரிய விஸ்வாமித்திரர் ராமரை அழைத்துச் செல்வதில் இருந்து படம் தொடங்குகிறது.
தாடகையை வதம் செய்யும் இளவரசர் ராமன், மிதிலை நகரில் சிவ தனுஸை உடைத்து சீதாவின் கரம் பிடிக்கிறார். தசரதர், அயோத்தியின் சக்ரவர்த்தியாக ராமனுக்கு முடிசூட்ட நினைக்கையில், கூனி எனும் பணிப்பெண்ணான மந்தரை, கைகேயியின் மனதில் விஷத்தைக் கலக்குகிறாள்.
அதன் விளைவாக, தசரதனிடம் இரண்டு வரங்களைக் கேட்கிறாள் கைகேயி. ஒன்று, தன் மகன் பரதனுக்கு முடிசூட்டப்பட வேண்டும், இரண்டு, ராமனை 14 ஆண்டுகள் வனவாசம் புக வைக்க வேண்டும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி ஆகவேண்டிய நிர்பந்தத்தினால், விருப்பமின்று கைகேயியின் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறார் தசரதன். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என ராமனும், சீதையுடனும், இலக்ஷ்மணனுடனும் வனவாசத்திற்குப் புறப்படுகிறார்.
ராமனின் அழகால் கவரப்படும் சூர்ப்பனகையின் மூக்கை அறுக்கிறார் லக்ஷ்மணன். அவர்களைப் பழிவாங்க, தனது மூத்த சகோதரனான இலங்காதிபதி இராவணனை, சீதையின் பேரழகை வர்ணிக்கிறாள் சூர்ப்பனகை. மாரீசனை மாய மானாக ஏவி,
ரிஷிமுகத்தில் சுக்ரீவனைச் சந்தித்து, சீதையைக் கண்டுபிடிக்க உதவி கோருகிறார் ராமர். சுக்ரீவனும் நாலா திசைகளுக்கும் தனது படைகளை அனுப்புகிறார். தென்திசை நோக்கிச் செல்லும் அனுமனின் குழுவிற்கு, இலங்கையில் சீதை அடைப்பட்டிருப்பது தெரிய வருகிறது. ஜாம்பவான் அனுமனின் சக்தியை நினைவூட்ட, விஸ்வரூபம் எடுத்து இலங்கைக்குப் பறந்து செல்கிறார் அனுமன்.
‘தன்னோடு சேர்ந்து, இங்கு அடிமைப்படுத்தப்பட்டுள்ள அனைவரையும் ராமர் மீட்க வேண்டும்’ எனக் கோரிக்கை வைக்கிறார் சீதை. இராவணனைச் சந்திப்பதற்காக அசோகவனத்தில் அதகளம் செய்கிறார் அனுமன். அனுமனின் வாலுக்கு இராவணனின் வீரர்கள் தீயிட, இலங்கையையே தீக்கோலமாக்கி விடுகிறார் அனுமன்.
சீதையை மீட்க, சுக்ரீவனின் படை கடல் மீது பாலம் அமைக்கின்றனர். ஸ்ரீராம் என பெயர் எழுதி கடலில் போடும் கற்கள் மிதக்கும் என வரமளிக்கிறார் சமுத்திரராஜன். வானரப் படையுடன் இலங்கை செல்கிறார் ராமர். போருக்கு முன் சமாதான பேச்சுவார்த்தைக்காக, வாலியின் மகனான அங்கதனை அனுப்பி வைக்கிறார் ராமர். இராவணன் அதற்கு ஒத்து வராததால் போர் முரசு ஒலிக்கப்படுகிறது.
அறத்தின் பக்கம் இருத்தலே நன்மை பயக்கும் என இராவணனின் சகதோரனான விபீஷ்ணன் ராமரிடம் தஞ்சம் புகுகிறார். இராவணனின் சேனாதிபதி பிரகஸ்தன், கும்பகர்ணனின் மகன்கள் கும்பன், நிகும்பன் ஆகியோர் போரில் கொல்லப்படுகின்றனர். இராவணன், கும்பகர்ணனை எழுப்பிப் போருக்கு அனுப்புகிறான். கும்பகர்ணனை, இராமர் தன் வாளால் வெட்டி வீழ்த்துகிறார். சீதையின் பிம்பத்தைக் கொன்று, இலக்ஷ்மணனையும் தாக்கி, ராமரின் மனவுறுதியைக் குலைக்கிறான் இராவணனின் மகனான இந்திரஜித்.
காயம்பட்ட இலக்ஷ்மணனைக் காப்பாற்ற, இமயமலைக்கு மூலிகைகள் எடுக்கச் செல்கிறார் அனுமன். மூலிகைகள் உள்ள மலையை அப்படியே பெயர்த்து இலங்கைக்குக் கொண்டு வருகிறார் அனுமன். இலக்ஷ்மணன் மூர்ச்சை தெளிந்ததும், நிகும்பலா தேவியின் அருளைப் பெறும் யாகத்தைச் செய்து கொண்டிருக்கும் இந்திரஜித்தைத் தேடிச் செல்கிறார். யாகத்தைத் தடுத்து இந்திரஜித்தையும் கொல்கிறார் இலக்ஷ்மணன்.
இறுதியாக, இராவணனே போர்க்களத்திற்கு வருகிறான். விஸ்வாமித்திரர் அருளிய திவ்ய அஸ்திரமான சக்கரத்தினால் இராவணனின் தலையைக் கொய்கிறார் ராமர். வெட்ட வெட்ட தலை முளைக்க, உடலை இரண்டாக வெட்டுகிறார். இடுப்புக்குக் கீழ் மண்ணில் விழும் இராவணனின் உடல் மீது ஒரு மரம் முளைத்துப் பூக்கிறது.
சிறைப்பட்டவர்கள் அனைவரையும் வானரப் படை விடுதலை செய்கிறது. இலங்கைக்கு மன்னனாக விபீஷ்ணரை அறிவிக்கிறார் ராமர். இராவணனின் புஷ்பக விமானத்தை ராமருக்குப் பரிசாக அளிக்கிறார் விபீஷ்ணன். ராமரும் சீதையும் புஷ்பக விமானத்தில் அயோத்தி செல்கின்றனர்.
ஒரு கடவுளை மனிதரைக் கொண்டு லைவ்-ஆக்க்ஷனாகப் போகக்கூடாது என்பதால் 2-டி அனிமேஷனாகவே படத்தை வடிவமைத்துள்ளார் யூகோ சாகோ. ராமரை ஆக்ரோஷம் நிரம்பிய போர் வீரராகக் காட்டாமல் கருணாமூர்த்தியாகச் சித்தரித்துள்ளனர். கும்பகர்ணனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டே வாளை அவர் மீது பாய்ச்சுகிறார் ராமர். கும்பகர்ணன் இறந்ததும் வருத்தமுறவும் செய்கிறார் ராமர்.
இந்தியத் துணைக் கண்டத்தின் மிகப் பிரபலமான இந்த இதிகாசத்தை, உலகம் முழுவதும் கொண்டு சென்றுள்ளார் ஜப்பானிய இயக்குநரான யூகோ சாகோ.
இதிகாசத்தை எளிமைப்படுத்தி, நேர்த்தியான அனிமேஷனால் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ரசிக்கும்படி சிறப்பான படத்தைத் தந்துள்ளார். திரையரங்கில் கண்டு ரசிக்கும்படி மிகச் சிறப்பாக 4-K ரெசலூஷனில் மாஸ்டரிங் செய்துள்ளனர் கீக் பிக்சர்ஸ்.
ராமரைக் கருணையுள்ள கடவுளாகப் பார்க்கும் திரைப்படம் ஒரு ஜப்பானியரால் இயக்கப்பட்டுள்ளது என்பதே இப்படத்தின் சிறப்பு. ஆனால் ராமர் என்றாலே அரசியல்தானே! அயோத்தியில் பால ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட முதலாம் ஆண்டு நிறைவு விழாவைச் சிறப்பிக்கும் வகையில் தற்போது இந்தியாவெங்கும் வெளியிடப்பட்டுள்ளது.