வாழைக்கு வாழ்த்துபா பாடிய ரஜினிகாந்த்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவரது குழந்தை பருவத்தில் நடந்த சம்பவங்களின் தாக்கத்தில் எழுதப்பட்ட கற்பனை கலந்த திரைக்கதை வாழை. ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியான இந்தப் படத்தை அரசியல், சினிமா , இலக்கியம், சமூகம் சார்ந்த அனைத்து தரப்பினரும் வாழ்த்தினார்கள், விமர்சித்தார்கள். மாநிலத்தின் முதல்வர் வெளிநாட்டு பயணத்தில் வாழை படம் பார்த்து பாராட்டியிருக்கிறார் கடந்த எட்டுமாதங்களில் வெளியான நேரடி தமிழ்படங்களில் முதலீட்டை அடிப்படையாக கொண்டு வாழை படத்தின் தியேட்டர் வசூல் வருவாய், பிறவியாபாரங்களின் அடிப்படையில் தயாரிப்பாளருக்கு 10 மடங்கு லாபத்தை கொடுத்த படமாக வாழை இடம்பிடித்துள்ளது. படம் வெளியாகி பத்து நாட்கள் கழித்து படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ந்த மனதுடன் தனது பாரட்டுக்களை தனது X தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் “மாரி செல்வராஜ் உடைய ‘வாழை’ படம் பார்த்தேன். ஒரு அற்புதமான, தரமான படம் தமிழில் ரொம்ப நாளைக்கு பிறகு வந்திருக்கிறது. மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்துக்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார்.அதில் அந்த பையன் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்டங்கள் அதை நாமே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. கிளைமாக்ஸில் அந்த பையன் பசியை தாங்காமல் அலையும் போது, அந்த தாய் என் பையனை ஒரு கைசோறு சாப்பிடவிடவில்லையே என்று கதறும்போது, நமது நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது.

மாரி செல்வராஜ் தான் ஒரு தலைசிறந்த இயக்குனர் என்பதை இந்த படத்தின் முலம் நிரூபித்திருக்கிறார். மாரி செல்வராஜுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்” இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் வாழ்த்துச் செய்திக்கு நன்றி தெரிவித்து பதிலளித்துள்ள மாரி செல்வராஜ், “அன்று பழைய தகரப்பெட்டிக்குள் உங்கள் புகைப்படங்களை தேடி தேடி சேகரித்து வைத்த அந்த சிறுவனின் கனவுக்குள்ளிருந்து அவனின் பிஞ்சு விரல்களை கொண்டே எழுதி சொல்கிறேன் . உங்கள் வாழ்த்துக்கும் அரவணைப்புக்கும் நன்றிகள் எங்கள் சூப்பர் ஸ்டார் அவர்களே!” என்று தெரிவித்துள்ளார்.