அழுத்தமான அரசியல் பேசும் பைசன்காளமாடன் – விமர்சனம்

பரியேறும் பெருமாள்’ தொடங்கி ‘வாழை’ வரை  கடந்த கால, நிகழ்கால அரசியலை மையமாக கொண்ட திரைக்கதைகளை ஜனரஞ்சக அம்சங்களுடன் திரைப்படமாக இயக்கி வெற்றி பெற்று வரும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் “பைசன் காளமாடன்”

ரத்தமும் சண்டையும் அன்றாட நிகழ்வாகிப்போன ஒரு மண்ணில் இருந்து தன் முன்னால் இருந்த அத்தனை தடைகளையும் உடைத்து
இந்திய அளவில் கபடியில் சாதித்த தூத்துக்குடி மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியுள்ள படம்தான் ‘பைசன் காளமாடன்’.
எந்நேரமும் வெடித்துச் சிதற காத்திருக்கும் சாதி மோதல்கள் நிறைந்த வனத்தி என்ற கிராமத்தைச் சேர்ந்த கிட்டானுக்கு (துருவ் விக்ரம்) சிறுவயதில் இருந்தே கபடியில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் கபடியில் ஆர்வம் காட்டிய பலரும்
வன்முறையில் இறங்கிவிட்டதால்
தன் மகனும் அப்படி ஆகிவிடக்கூடாது என்று அஞ்சுகிறார் கிட்டானின் தந்தை வேலுசாமி (பசுபதி).

கிட்டானின் கனவை நனவாக்க முயற்சி எடுக்கிறார் அவரது பி.டி. வாத்தியார் (அருவி மதன்). இன்னொருபுறம் ஊரில் இருவேறு சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களான பாண்டியராஜன் (அமீர்), கந்தசாமி (லால்) இருவருக்கும் இடையிலான பகை, ஊர் முழுக்க எதிரொலிக்கிறது. இந்தப் பகை கிட்டானின் வாழ்க்கையில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தியது? தன் முன்னால் இருந்த தடைகள் அனைத்தையும் கடந்து கிட்டான் சாதித்தது எப்படி என்பதை உணர்வுபூர்வமாக பேசியிருக்கிறது ‘பைசன் காளமாடன்’.

 தான் எடுத்துக் கொண்ட களத்தை ஒரு தனி நபர் வாழ்க்கை வரலாறு என்ற அளவில் மட்டும் கையாளாமல் 1990 ஆம் ஆண்டுகளில் தென் மாவட்டங்களில் நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி, அதை மிகநுணுக்கமாகவும்நேர்மையாகவும் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்

ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக ஜப்பானில் இருக்கும் துருவ் விக்ரம் நினைவலைகளில் இருந்து படம் திரையில்  விரியத் தொடங்குகிறது. நாயகனின் பள்ளிப் பருவம், பி.டி ஆசிரியரின் உத்வேகத்தால் மெல்ல அவன் கபடியில் ஆர்வம் செலுத்தத் தொடங்குவது, அவனின் குடும்பப் பின்னணி, சாதி அரசியலுக்கு இடையே சிக்கித் தடுமாறும் அவனது லட்சியம் என நேர்த்தியாக எழுதப்பட்ட திரைக்கதை பார்வையாளனை எங்கும் நகர விடாதபடி இழுத்துக் கொள்கிறது.

பேருந்தில் ஒரு ஆடு எதிர் தரப்பினரின் காலில் சிறுநீர் கழித்த விவகாரம் ஒரு நிமிடத்தில் எப்படி மிகப் பெரிய வன்முறையாக மாறுகிறது என்பதை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

வழக்கம் போல இந்தப் படத்தில் இயக்குநர் மாரி செல்வராஜின் கதாபாத்திர தேர்வு வியக்க வைக்கிறது. துருவ் விக்ரமின் தந்தையாக பசுபதி வரும் ஒவ்வொரு காட்சியிலும் தான் ஒரு மிகச் சிறந்த நடிகர் என்பதை உணர்த்துகிறார்.  அமீர், லால், ரஜிஷா விஜயன், அருவி மதன் எனநடிகர்கள் யாரையுமே வீணடிக்காமல் செவ்வனே பயன்படுத்தி இருக்கிறார்.

நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசையும், எழிலரசுவின் ஒளிப்பதிவும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. காளமாடன் கானம், தென்னாடு பாடல்கள் சிறப்பு. கபடி தொடர்பான காட்சிகளில் எடிட்டர் சக்தி திரு தனித்து தெரிகிறார்.

பாடல்களை மான்டேஜ் ஆக பயன்படுத்தி இருந்தாலும் கூட அவை பெரும்பாலும் வேகத் தடைகளாகவே தோன்றுகின்றன. அனுபாமா, துருவ் இடையிலான காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்ட உணர்வை தருகின்றன. க்ளைமாக்ஸுக்கு முன்னால் போலீஸ் திடீரென நல்லவர்களாக மாறுவது, இந்திய அணியில் துருவ் தேர்வானதே அப்போதுதான் முடிவாகி இருக்கும்போது அதை ஒரு போலீஸ்காரர் சொல்வது போன்ற காட்சிகள் நம்பும்படி இல்லை. இவற்றில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

ரத்தமும் சண்டையும் அன்றாடம் ஆகிப் போன ஒரு மண்ணில் இருந்து தன் முன்னால் இருந்த அத்தனை தடைகளையும் உடைத்து ஒருவன் எப்படி முன்னேறிச் சென்றான் என்ற கதையை நேர்த்தியாகவும், அழுத்தமாகவும் சொல்லி மீண்டும் ஒரு புறக்கணிக்க முடியாத வெற்றியை பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்மாரி செல்வராஜ்.