எதிர்பாராத வெற்றி – துல்கர் சல்மான்

துல்கர் சல்மான்  தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் 1  – சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, 10 நாட்களில் 100 கோடி வசூலைக் குவித்து,  வெற்றியைப் பெற்றுள்ளது.
இப்படம் ஒரு புதிய சூப்பர் ஹீரோ உலகை அறிமுகப்படுத்தி, மலையாள சினிமாவை உலகளவில் கொண்டு சென்றுள்ளது.

Wayfarer Films பேனரில் ஏழாவது படைப்பாகஉருவாக்கப்பட்டிருக்கும் இந்த மலையாளப் படம், கேரளாவின் எல்லைகளைத் தாண்டி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினர்  (03.09.2025)சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். நிகழ்வில் ….

ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி பேசும்போது,
 “சென்னை என் இரண்டாம் வீடு. இங்குதான் விசுவல் கம்மியூனிகேசன் படித்தேன். இப்போது மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி. டோமினிக் ஒரு சின்ன ஐடியாவாக, ஒரு இண்டிபெண்டண்ட் படமாகத்தான் சொன்னார். அது வளர்ந்து, வளர்ந்து இப்போது பிரம்மாண்டமாக வந்துள்ளது. அதை எல்லோரும் சேர்ந்து டெவலப் செய்து உங்களிடம் கொண்டு வந்துள்ளோம். உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி. இன்னும் இந்தப் படத்தை அதிகமான பேருக்கு எடுத்துச் செல்லுங்கள் நன்றி…” என்றார்.

Wayfarer Films சார்பில் அனூப் குமார் பேசும்போது,

“இது AGS உடன் எங்களின் இரண்டாம் படம், இப்படத்தை பெரிய அளவில் எடுத்துச் சென்றதற்கு நன்றி. எல்லோரும் படத்தைக் கொண்டாடுவது மகிழ்ச்சி. இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படம் பார்க்காதவர்கள் எல்லோரும் படத்தை திரையரங்கில் பாருங்கள் நன்றி…” என்றார்
இயக்குநர் டோமினிக் அருண் பேசும்போது,
“இந்தப் பயணம் மிக நீண்ட, இனிமையான பயணம். உங்களுடன் எங்கள் படத்தை பகிர்ந்து கொள்வது மிகுந்த பெருமையாக இருக்கிறது. எங்கள் படத்தைப் பார்த்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி. இப்படத்தை கொண்டாடி வரும் அனைவருக்கும் நன்றி…” என்றார்.
 நாயகி கல்யாணி பிரியதர்ஷன் பேசும்போது,
“லோகாவிற்கு இந்தளவு பாராட்டு, வரவேற்பு கிடைக்கும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. நீங்கள் ஆதரவு தந்தததால்தான், இந்த அளவு வெற்றி கிடைத்துள்ளது. இப்படத்திற்காக நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
அப்பாவிடம் ஆக்சன் படம் பண்ண போகிறேன் என்றவுடன் நீயா ஆக்சன் பண்ணப் போறே? கால், கையெல்லாம் ஒழுங்காக பார்த்துக் கொள் என்றார். படம் 100 கோடி வசூலித்துள்ளது அதற்கு, நான் மட்டுமே காரணமில்லை. மொத்த குழுவின் உழைப்புதான் காரணம். நான் மட்டும் கிரடிட் எடுத்துக் கொள்ள முடியாது. இப்படத்திற்கு இவ்வளவு பாராட்டுக்களை தந்த அனைவருக்கும் நன்றி…” என்றார்.
நடிகர் தயாரிப்பாளர் துல்கர் சல்மான் பேசும்போது,
“நான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை, ஒரு டீச்சராக பசங்களை கூட்டி வந்துள்ளேன். நான் எந்த மொழியில் படம் செய்தாலும், இங்கு படம் பிரஸ்க்கு போட்டால், படம் நன்றாக இருந்தால், பிரஸ் உடனே பாராட்டுவார்கள். கொண்டாடுவார்கள் அவர்களுக்கு நன்றி. நாங்கள் இதை கேரளா அளவில் சின்னதாகத்தான் ஆரம்பித்தோம். இப்போது எல்லா இடத்திலும் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. இதில் உழைத்த எல்லோரும் அவர்கள் படம் போல உழைத்தார்கள் இந்த வெற்றி அவர்களுக்கானதுதான். கல்யாணியைத் தவிர  இந்தப் படத்திற்கு வேறு யாருமே செட் ஆகமாட்டார்கள் என்ற அளவிற்கு அவர் பொருத்தமாக இருந்தார். கதை சொன்ன மறுநாளே அவர் டிரெய்னிங் எடுக்க ஆரம்பித்துவிட்டார். நாங்கள் நினைத்ததைவிட சிறப்பாக செய்துள்ளார்.  நேரடித் தமிழ்ப் படம் போல இப்படத்தை டப்பிங் செய்து தந்த பாலா சாருக்கு நன்றி.
இந்த அளவு வரவேற்பை நாங்களே  எதிர்பார்க்கவில்லை. இப்படத்தை ஐந்து பாகமாக எடுக்க திட்டமிட்டுள்ளோம். நான் எத்தனையோ படங்கள் நடித்துள்ளேன். இந்த அளவு கிரேஸ் பார்க்கவில்லை. அதற்கான மரியாதை உடன் அடுத்தடுத்த பாகங்களை எடுப்போம். லோகா மாதிரி இன்னும் அடுத்தடுத்து படங்கள் தருவோம். என் பேனரில் நான் மட்டுமே நடிக்க வேண்டும் என எப்போதும் நினைத்ததில்லை, எனக்கு சினிமா அவ்வளவு பிடிக்கும், என் பேனரில் மற்றவர்கள் நடிக்கும் படங்களும் தயாரித்து வருகிறோம். உங்கள் ஆதரவைத் தாருங்கள். இப்படத்தை வெளியிட்ட ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி.  அனைவருக்கும் நன்றி…” என்றார்.

ஆகஸ்ட் 28-ம் தேதி உலகமெங்கும் வெளியான இப்படம், இப்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.