தீயவர் குலைநடுங்க உண்மை சம்பவத்தின் பதிவா?

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் அர்ஜுன். ஆக்சன் கிங் என அழைக்கப்படும் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், கர்ணா, முதல்வன்’ உள்பட பல்வேறு படங்கள் பெரும் வெற்றிபெற்றன. சமீபகாலமாக அவர் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

தினேஷ் லட்சுமணன் எழுதி , இயக்கியுள்ள ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படத்தில் அர்ஜுன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில்நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, திரைப்படம் தொடர்பாக பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

அர்ஜூன் பேசுகையில்,

“எனக்கு ஒவ்வொரு படமும் முதல் படம் மாதிரி தான். ‘தீயவர் குலை நடுங்க’ படமும் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். நிறைய அறிமுக இயக்குநர்களோடு சேர்ந்து நான் பணியாற்றியிருக்கிறேன். ‘ஜென்டில்மென்’ படமும் அப்படித்தான். அதுல ஒரு சுயநலம் இருக்கிறது என்று சொல்லலாம். முதல் படம் எடுக்கும் இயக்குநர்கள் எனர்ஜியுடன் செயல்படுவார்கள். நான் நிறைய படங்கள் பண்ணியிருக்கிறேன். ஆனா, இது கொஞ்சம் தனித்துவமான திரைப்படம்.” என்றார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், “இது உண்மை சம்பவத்தை மையப்படுத்திய படம். எனக்கு

இந்தக் கதையை இயக்குநர் சொல்லும்போதே நடுங்கிடுச்சு. ஏன்னா, அப்படியான ஒரு சம்பவம் அது. உண்மையான கதைகள் எப்போதுமே மக்களுக்கு கனெக்ட் ஆகும். நயன்தாரா நடித்திருந்த ‘அறம்’, நான் நடித்திருந்த ‘க/பெ ரணசிங்கம்’ போன்ற படங்கள் உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. அப்படியான படங்கள் பெரிதளவில் தாக்கத்தைக் கொடுக்கும். இந்தப் படத்துல அர்ஜுன் சாரோடு சேர்ந்து நடிச்சிருக்கேன். ‘ஜென்டில்மேன்’ தொடங்கி பல படங்கள்ல சாரை ரசிச்சுப் பார்த்திருக்கேன். உண்மையாகவே, அர்ஜூன் சார் ஜென்டில்மேன்தான்” எனக் கூறினார்.