சமீப காலங்களில் வெளியாகும் திரைப்படங்களில் கொலையும், அதைச் சார்ந்த குற்றப்புலன் விசாரணையும் தான் ஒருவரி கதையாக உள்ளது.
சீசாபடத்தில் வெறும் விசாரணை என்றில்லாமல் மருத்துவ ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சில விஷயங்களைச் சொல்லி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள்.
ஒரு கோடீஸ்வரர் வீட்டில் காவலாளி இறந்து கிடக்க அந்த வீட்டில் வசித்து வந்த இளம் கணவனும், மனைவியும் காணாமல் போகிறார்கள். அதைத் துப்பறிய ஆரம்பிக்கும் போது பல திடுக்கிடும் திருப்பங்கள் போலீஸ் அதிகாரி நட்டிக்கு தெரிய வருகிறது.
காணாமல் போனதாகத் தேடப்படும் இன்னொரு நாயகன் நிஷாந்த் ரூசோவுக்கு பைபோலார் டிஸ்ஆர்டர் என்கிற மனப் பிறழ்வு கொண்ட வேடம். இந்த வேடத்தில் நடிப்பது கடினம் என்கிற அளவில் பல்வேறு முகம் காட்டி உணர்ச்சிகளையும் காட்டி நடித்திருக்கிறார்.
அவரது மனைவியாக வரும் பாடினி குமார், பார்வைக்கு அழகுடனும், நடிக்கத் தெரிந்தும் இருக்கிறார். ஒரு பக்கம் காதல், இன்னொரு பக்கம் பாசம் என்று அவருக்கு எல்லாமே சிக்கலாக அமைந்திருக்கிறது.
இறந்து போன வீட்டு வேலைக்காரர் மாஸ்டர் ராஜநாயகன், பாடினியின் தந்தை இயக்குநர் அரவிந்தராஜ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தேவையை நிறைவு செய்து இருக்கிறார்கள்.
பாடல்களிலும், பின்னணி இசையிலும் அடையாளம் தெரிகிறார் இசையமைப்பாளர் சரண்குமார்.
ஒளிப்பதிவாளர்கள் பெருமாள் மற்றும் மணிவண்ணன் திருப்தியாகப் பணியாற்றி இருக்கிறார்கள்.
இவர்களுடன் இந்தப் படத்தை தயாரித்து இருக்கும் டாக்டர் கே. செந்தில்குமாரும் ஒரு மருத்துவராகவே வருகிறார்.
இதுபோன்ற கிரைம் திரில்லர் படங்களில் பெரும்பாலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது போதைக்கு அடிமையானவர்கள்தான் குற்றத்தின் இலக்காக்கப்படுவார்கள். ஆனால் இதில் கண்ணுக்குத் தெரியாமல் இளைஞர்கள் சீரழிந்து கொண்டிருக்கும் ஒரு முக்கிய விஷயத்தைத் தொட்டு அதை பொது சமூகத்துக்கு செய்தியாகவும் சொல்லி இருப்பது சிறப்பு.
பின் பாதியில் விறுவிறுப்பு எடுக்கும் திரைக்கதை முன்பாதியிலும் அதே அளவு கவனத்துடன் அமைக்கப்பட்டிருந்தால் முழுமையான படமாக ரசிக்கப்பட்டிருக்கும்.