சாம் சி.எஸ் இசையில் டிமான்டி காலனி’ ரத்தத்த தா’ பாடல் வெளியானது

இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வரும் “டிமான்டி காலனி 3” திரைப்படத்தின் முதல் பாடலான “ரத்தத்த தா” வெளியாகி இசை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
மோகன் ராஜன் எழுதிய பாடல் வரிகளுக்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடலை, அவரே தனது  குரலில் பாடியுள்ளார். பாடலின் ஒவ்வொரு வரியிலும் கதையின் இருண்ட மனநிலையை உணர்த்தும் வகையில் அவரது குரலும், இசையும் ஒன்றோடொன்று கலந்துள்ளன.
படத்தின் மையமாக இருக்கும் வில்லனின் நரக உலகை காட்சிப்படுத்தும் இந்தப் பாடல், ரத்த சிவப்பு நிற பின்னணியில் நரகத்தின் பல்வேறு அங்கங்களை கண்முன் நிறுத்துகிறது. காட்சியமைப்பும், அதற்கு ஏற்ற கலை வடிவமைப்பும் பாடலுக்கு வலுவூட்டும் நிலையில், சாம் சி எஸ் அமைத்துள்ள இசை அந்த இருளின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஹாரர் மற்றும் டார்க் தீம் கலந்த இசை அனுபவத்தை ரசிகர்களுக்கு இந்தப் பாடல் வழங்குகிறது.
ஏற்கனவே “டிமான்டி காலனி 2” திரைப்படத்திற்கு தனது பின்னணி இசையால் ரசிகர்களை மிரள வைத்திருந்த சாம் சி எஸ், தற்போது “டிமான்டி காலனி 3” படத்திற்கும் இசையமைத்து மீண்டும் தனது இசை மாயாஜாலத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள சவுண்ட் டிசைன் மற்றும் இசைக் கோர்வை, படத்தின் உலகத்திற்குள் ரசிகர்களை அழைத்துச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பல்வேறு ஜானர்களில் தனது தனித்துவமான இசை அடையாளத்தை தொடர்ந்து பதித்து வரும் சாம் சி எஸ், “ரத்தத்த தா” பாடல் மூலமாக மீண்டும் ஒருமுறை ரசிகர்களை தனது இசையால் மிரள வைத்துள்ளார். வெளியான குறுகிய நேரத்திலேயே இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து, இசை ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

 

Comments (0)
Add Comment