ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க
ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் “கெணத்த காணோம்.”
நடிகர் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பில்
இயக்குநர் சுசீந்திரன் பேசும் போது,
“ஒரு கிடாயின் கருணை மனு” திரைப்படத்தின் மூலம் அற்புதமான வாழ்வியலை சொன்ன இயக்குநர், இந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. எனினும், இயக்குநர் இந்தப் படத்திலும் அழகான வாழ்வியல் சார்ந்த கதையை கையாண்டிருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகி இருக்கும் ரமேஷ் பாபு சாருக்கு வாழ்த்துக்கள். சிறிய பட்ஜெட் என்றாலும், நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் யோகி பாபு, சினிமா மீதுள்ள ஆர்வத்தால் மட்டுமே நடிப்பில் கவனம் செலுத்தி வரும் லவ்லின் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா, எந்த பட்ஜெட் படமென்றாலும் தனது உழைப்பை பலமடங்கு கொடுக்கக்கூடியவர். அவரது ரீ-ரெக்கார்டிங்கிற்கு நான் மிகப்பெரிய ரசிகன், இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை,” என்றார்.
இயக்குநர் வசந்த பாலன் பேசும் போது,
“கெணத்த காணோம்- வெறும் காமெடி வசனமாக உருவாகி தற்போது அரசியல் பேசும் வாக்கியமாக மாறி இருக்கிறது. கெணத்த காணோம் வரிசையில் ஆற்றை காணோம், ஏரியை காணோம் என இதை சுற்றிய அரசியல் ஆழமாகி இருக்கிறது. இந்தப் படத்தில் தண்ணீர் பஞ்சம் உள்ள கிராமத்தை தேடி படக்குழு தமிழ்நாடு முழுக்க பயணம் செய்துள்ளனர், எனினும் அதை கண்டுபிடிக்க இயலவில்லை. ஒருக்கட்டத்தில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் போது அந்த கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை, இதுதான் தமிழ் நாடு.
நான் இந்தியா முழுக்க பயணம் செய்திருக்கிறேன், ஆனால் இத்தகைய நிலை மற்ற மாநிலங்களில் இல்லை. நடிகர் யோகி பாபுவுக்கு மண்டேலா எப்படி அரசியல் சார்ந்த அழுத்தமான படமாக அமைந்ததோ, அதேபோல் இந்தப் படமும் அவருக்கு இருக்கும் என்பது படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது தெரிகிறது. படம் இயக்கும் போது ஒரு இயக்குநர் மரணிப்பது பற்றி நிறைய பேசியிருக்கிறோம், ஆனால் அதன் வலி இந்த மேடையில் உணர முடிகிறது. இயக்குநர் சுரேஷ் சங்கையா “கெணத்த காணோம்” என்ற ஆழமான படைப்பை முன்னிறுத்தி இங்கிருப்பதாகவே பார்க்கிறேன். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்,” என்றார்.
இயக்குநர், நடிகர் கரு பழனியப்பன் பேசும் போது,
இங்கு முதலில் பேசிய சில இயக்குநர்கள் படத்திற்கு தொடர்புடையவர்களுடன் நன்கு அறிமுகமானவர்கள். தயாரிப்பாளர் ரமேஷ் பாபுவுடன் நீண்ட நாள் பழகியவர்கள். ஆனால், எனக்கு அவரை நேற்று தான் தெரியும். ஆனால், நீண்ட காலமாக அவரைப்பற்றிய நிறைய பேர் பேசி கேட்டிருக்கிறேன். தன் படங்கள் தவிர்த்து மற்ற படங்களில் பணியாற்றும் உதவி இயக்குநர்களைும் நன்றாக பார்த்துக் கொள்ளக்கூடியவர் ரமேஷ் பாபு. ஒரு இயக்குநர் இல்லாத போது, அவர் படத்தை பாராட்டி, அவரை கொண்டாடும் தயாரிப்பாளர் கிடைப்பது அரிதிலும் அரிது.
அதனை சிறப்பாக செய்யும் ரமேஷ் பாபுவுக்காக இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும். இயக்குநர் வசந்த பாலன் பேசும் போது, நடிகர் வடிவேலுவின் வசனம் அரசியல் கூற்றாகி இருப்பதாக தெரிவித்தார். வடிவேலு இல்லாமல் இன்று தமிழ் சினிமா இல்லை. அவரின் வசனங்கள் தான் இன்று அரசியல் கூற்றாக மாறி வருகிறது. சினிமாவில் யாருக்கும் அட்வைஸ் பண்ணக்கூடாது. அட்வைஸ் சொன்னாலும் கேட்க மாட்டார்கள், ஏன் அவர்கள் கேட்க மாட்டார்கள் என்றால் ஏற்கனவே வீட்டில் சொல்வதை கேட்காமல் தான் இங்கு வந்திருக்கிறோம்,” என்றார்.
இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா பேசும் போது,
இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இயக்குநர் சுரேஷ் சங்கையா சார் மற்றும் தயாரிப்பாளர் ரமேஷ் பாபு சாரை படத்தின் பூஜையின் போது சந்தித்தேன். படத்தின் கதையை கேட்காமல் தான் இந்தப் படத்திற்குள் வந்தேன். படத்தின் ரீ-ரெக்கார்டிங்கின் போது தான் எனக்கும் சுரேஷ் சங்கையா சாருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அவர் தற்போது இல்லை என்றாலும், அவர் இங்கு நம்முடன் தான் இருக்கிறார். அவர் மரணிக்க சரியாக ஒரு வாரத்திற்கு முன் என்னை தொடர்பு கொண்டு, என்னை கோவில் ஒன்றுக்கு வரவேண்டும் என கட்டாயப்படுத்தினார். அப்போது நான் அவருடன் சென்று, நேரம் செலவழித்தேன். அதற்கு முன்பு கிட்டத்தட்ட 20 நாட்கள் வரை சரியான உறக்கம் இல்லாமல் இருந்தேன். அன்றிரவு கோவில் ஒன்றின் அருகே நான் மூன்று மணி நேரம் உறங்கினேன், அவர் என்னை எழுப்பாமல் என்னுடனேயே இருந்தார். அதன்பிறகு நான் அவரை வீட்டில் விட்டுவிட்டு சென்றேன். அன்றைய நாள் அவருடன் கழித்த பிறகு எனக்கு நிறைய விஷயங்கள் நடந்தது. அவரின் நேர்மைக்காகவே இந்தப் படம் பெறும் வெற்றி பெறும் என்றார்.
நடிகர் யோகி பாபு பேசும் போது,
சுரேஷ் சங்கையாவை எனக்கு காக்கா முட்டை படத்தில் இருந்தே தெரியும். கிடாயின் கருணை மனு படத்தில் என்னை நடிக்க வைக்க இயக்குநர் சுரேஷ் சங்கையா திட்டமிட்டிருந்தார். ஆனால், அப்போது எனக்கு தயக்கமாக இருந்தது. முதன்மை பாத்திரம் இல்லை என்றாலும், வேறொரு கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார். தேதிகள் சார்ந்த சிக்கல், மற்ற படங்களில் இருந்ததால் அதுவும் நடக்கவில்லை. இதைத் தொடர்ந்து தான் சுரேஷ் சங்கையா என்னை ஹீரோவாக வைத்து படமெடுக்க வேண்டும் என்று இந்தப் படத்தை கொடுத்தது எனக்கு கிடைத்த பாக்கியமாக பார்க்கிறேன். இயக்குநர் இந்தப் படத்திற்காக நிறைய விஷயங்களை லைவாக செய்து இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். படப்பிடிப்பில் ஷாட்டிற்கு இடையில் பத்து நிமிடங்களில் கதை சொல்லக்கூடியவர். அடுத்து இந்தப் படம் செய்வோம் என்று கூறுவார். நல்ல இயக்குநரை நாம் இழந்துவிட்டோம். ஆனால், அவர் எப்போதும் நம்முடனேயே தான் இருக்கிறார். குழந்தை பிறந்த பிறகு தான் அவர் உயிரிழந்தார். ஏற்கனவே நான் கூறியதை போல், அந்த குழந்தையின் படிப்புக்கு நான் உதவுகிறேன். மேடை ஏறி சாமி இல்லை என்று கூறுவதை விட மலையேறி சாமி கும்பிடுகிறேன். நான் வணங்கும் முருகனை நம்பி இந்தப் படம் வெற்றி பெற வேண்டுகிறேன், என்றார்.