ஆண்பாவம் பொல்லாதது முன்வெளியீட்டு விழா

Drumsticks Productions தயாரிப்பில், இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ஜோ’ படத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற ரியோ ராஜ் – மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் `ஆண் பாவம் பொல்லாதது’.

இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா, சென்னையில்படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் கலந்துகொள்ள நடைபெற்றது.

இதில் இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது..,
ஆண்பாவம் என்ற வார்த்தை பாண்டியராஜன் சார் படமெடுத்த போது தான் எங்களுக்குத் தெரிந்தது. அந்த வார்த்தையே ஆச்சரியமாக இருந்தது. இத்தனை வருடங்கள் கழித்து இந்தக்குழு பொல்லாததைச் சேர்த்து, ஆண் பாவம் பொல்லாதது எனப் படமெடுத்துள்ளார்கள். இந்தப்படத்தின் தயாரிப்பாளர் எனது நண்பர் விஜயன், இந்தப்படம் உங்களைச் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கும் ஆனால் கடைசியில் அழ வைத்துவிடும் எனச் சொன்னார். ஒரு தயாரிப்பாளர் இந்த அளவு, ஒரு இயக்குநரை நம்புவது ஆச்சரியம். படக்குழுவினர் அதற்கான உழைப்பைத் தந்துள்ளனர். டைட்டில் டிசைனே மிக அழகாக உள்ளது, அதற்காக உழைத்துள்ளார்கள். படம் கண்டிப்பாக நன்றாக இருக்குமெனத் தெரிகிறது. டிரெய்லர் பார்த்தேன் மாளவிகாவை பார்க்கப் பக்கத்து வீட்டுப் பெண் போல அவ்வளவு பந்தமாக இருக்கிறார். வாழ்த்துக்கள். ரியோ ராஜ் இனி ரியோ என வைத்துக்கொள்ளலாம் அழகாக உள்ளது. லியோ மாதிரி ரியோ அழகாக உள்ளது. ரியோவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. இந்தப்படக்குழு வெற்றி பெற என் வாழ்த்துக்கள். நன்றி.

நடிகை மாளவிகா மனோஜ் பேசியதாவது..,
முதல் நன்றி கலையரசன் அண்ணாவிற்கு தான். அவர் இல்லை என்றால் இந்தப்படத்தில் நான் இருந்திருக்க மாட்டேன். நிறைய டயலாக் பொறுமையாகச் சொல்லித் தந்து, நடிக்க வைத்தார். ரியோ என்னோட நல்ல ஃபிரண்ட். முதல் படத்திலிருந்து என்னை மொழி தெரியாத போதும், நன்றாக நல்ல ஃபிரண்டாக பார்த்துக்கொண்டார். சித்து என் கேரியரில் மிகச்சிறந்த பாடல் தந்துள்ளார். எங்கே போனாலும் உருகி உருகி ஹீரோயின் என்று தான் சொல்கிறார்கள். அவருக்கு நன்றி. மாதேஷ் அண்ணா என்னை மிக அழகாக காட்டியுள்ளார். ஆண் மட்டும் பாவம் இல்லை, பொண்ணுங்களும் பாவம் தான். அதுவும் படத்தில் இருக்கிறது என்றார்.

நடிகர் ரியோ ராஜ் பேசியதாவது..,

இங்கு வந்து வாழ்த்திய வசந்த் சார், பொன்ராம் சார், மிஷ்கின் சாருக்கு நன்றி. ஆண் பாவம் பொல்லாதது நன்றாக வர Drumsticks Productions க்கு நன்றி. ஒரு புரடியூசர் இருந்தாலே பிரச்சனை என்பார்கள் ஆனால் இந்த நிறுவனத்தில் நாலு பேர். ஆனால் எல்லோருமே நண்பர்கள் போலத் தான் இருந்தார்கள். எங்களுடன் ஜாலியாக இருந்தார்கள். அவர்களால் தான் இந்தப்படம் இவ்வளவு நன்றாக வந்துள்ளது. சக்திவேல் சாரை படம் முடித்துத் தான் பார்த்தேன். விவேக் சார் தான் முழுதாக படத்தைப் பார்த்துக்கொண்டார். சிவா தான் இந்த படத்தை ஆரம்பித்தார். ஆனால் பிள்ளையார் சுழி போட்டது ஆர்ஜே விக்னேஷ் காந்த். சிவா எழுதியதை, கலையரசன் தங்கவேல் மிக அட்டகாசமான படமாக எடுத்துள்ளார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்திலிருந்து மூன்றாவது அஸிஸ்டெண்ட் டைரக்டர் படம் செய்துள்ளார். அதைப் பெருமையாகச் சொல்வேன். சித்து குமார் எங்களின் பலம். உருகி உருகி பாடல் இப்போது எங்களின் அடையாளமாகவே ஆகிவிட்டது. சித்து குமார் இன்னும் பெரிய உயரம் செல்ல வேண்டும். அது இந்தப்படத்திலிருந்து நடக்கும். மாதேஷ் அண்ணன் தான் எங்கள் பாய்ஸ் மங்களம் சார். இந்த படத்தின் அழகான விஷுவல்ஸ்க்கு அவர் தான் காரணம் நன்றி. கேஜி வருண் இந்தப்பட எடிட்டர். அவர் ஒரு ஹீரோ, இயக்குநர் கூட எனக்கு மிகவும் பிடித்தவர். நன்றாக எடிட் செய்துள்ளார். இந்தப்படத்தை ரிலீஸ் செய்யும் AGS சினிமாஸுக்கு நன்றி.  மாளவிகா மனோஜ் இதில் டயலாக் அதிகம் என்பதால் ஆடிசன் செய்தோம். சூப்பராக செய்துள்ளார். ஆண் பாவம் ஒரு குடும்ப வாழ்க்கைக்குள் சந்தோசமாக இருக்க என்ன பண்ணனும் என்பதை, ஒரு அழகான ஃபேமிலி என்டர்டெயினராக சொல்லியுள்ளோம். அனைவருக்கும் பிடிக்கும் என்றார்..

இயக்குநர் கலையரசன் தங்கவேல் பேசியதாவது..,

 இந்தப்படத்தைக் கதையாக ஒரு மாதத்தில் எழுதியவர் சிவா, அவர் இப்போது வேறொரு அற்புதமான படமெடுத்து ரிலீஸுக்காக காத்திருக்கிறார். அவரே இந்தப்படத்தையும் எடுத்திருக்கலாம். ஆனால் கலை இதைச் செய்யட்டும் என விட்டுக்கொடுத்த சிவக்குமார் முருகேசன் சாருக்கு நன்றி. எங்களுக்கு இருக்கும் ஒரே ஆட்டோ, ரியோ அண்ணன் தான். அவரை நாங்கள் விடமாட்டோம், அவர் ஹீரோ மட்டும் அல்ல, அவர் ஒரு துணை இயக்குநர் போல தான் இருப்பார். அவரால் தான் எங்கள் டீமில் நாலு பேர் இயக்குநராக இருக்கிறோம். நன்றி. சக்தி கேரக்டர் ஹீரோவுக்கு சமமான ரோல், நிறைய டயலாக் இருக்கிறது. மாளவிகா நடிப்பாரா ? என ஆடிசன் செய்தோம். ஆனால் அப்போதே அவர் தான் என முடிவு செய்து விட்டோம். மிகச்சிறப்பாக நடித்துள்ளார். 34 நாள்ல ஷூட் முடியக் காரணம் மாதேஷ் அண்ணன் தான் அவருக்கு நன்றி. சித்துக்குமார் மிகச்சிறந்த இசையைத் தந்துள்ளார். இவ்வளவு கூலான புரடியூசர் பார்த்ததே இல்லை. படத்திற்கு பெரும் ஆதரவாக இருந்தார். பெரும் உழைப்பைத் தந்த என் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படம் ஒரு அழகான ஃபேமிலி என்டர்டெயினர் அனைவருக்கும் பிடிக்கும், அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
Drumsticks Productions சார்பில் வெடிக்காரன்பட்டி S சக்திவேல் இப்படத்தை  தயாரித்துள்ளார். முன்னணி தயாரிப்பு நிறுவனமான AGS CINEMAS இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

Comments (0)
Add Comment