அபிநயா தனது கணவர் மற்றும் தனது மகள்களான இரட்டை சகோதரிகளுடன் மலைப் பிரதேசத்தில் இருக்கும் தன்னுடைய வீட்டுக்கு வருகிறார். காரில் வரும்பொழுது தற்செயலாக மலை மீது இருக்கும் ஒரு வீட்டில் இருந்து உருண்டு வரும் கேஸ் சிலிண்டர் கார் மீது மோதி விபத்து ஏற்படுகிறது.
இந்த விபத்தில் அபிநயாவின் கணவர் இறந்து விடுகிறார். குழந்தைகள் தப்பித்துக் கொள்கிறார்கள் என்றாலும் அபிநயாவின் முகம் சிதைந்து போகிறது. இதனால் அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டிய கட்டாயமும் வருகிறது.
அபிநயாவின் குடும்ப நண்பரான சுப்பிரமணியம் சிவா அந்த குடும்பத்தின் சொத்துக்கள் மற்றும் பண விஷயங்கள் அனைத்தையும் பராமரித்து வருகிறார். இப்பொழுது மருத்துவமனையில் சொல்லி அபிநயாவுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வைக்கிறார்.குழந்தைகள் இருவரும் அம்மாவை எதிர்பார்த்து காத்திருக்க தன்னுடைய முகத்தில் சர்ஜரி செய்த நிலையில் முகத்தை மூடி மறைத்துக் கொண்டு வீடு வந்து சேர்கிறார் அபிநயா.
இதற்கு பின்பு வீட்டில் இயல்பாக இல்லாமல் கடுமையாக நடந்து கொள்கிறார் அபிநயா. இதனால் வந்திருப்பது நம்முடைய அம்மாதானா என்கிற ஒரு சந்தேகம் அவரது குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.
இதன் உண்மை நிலையை அறிய அந்த வீட்டிலிருந்து தப்பி செல்ல குழந்தைகள் முயல்கிறார்கள். இன்னொரு பக்கம் அபிநயாவை வைத்து சொத்துக்களை கைப்பற்றும் வேலையும் நடக்கிறது.
இறுதியில் அந்த வீட்டில் என்ன நடந்தது? உண்மையில் அபிநயாதான் வந்திருந்தாரா? குழந்தைகளின் நிலைமை என்ன ஆனது? என்பதெல்லாம் இந்த ‘இரட்டையர்’ என்ற படத்தின் கதை சுருக்கம்.
முதல் ஐந்து நிமிடங்கள் மட்டுமே அபிநயா முகம் தெரிகிறது. அதற்கு பின்பு முழுக்க முழுக்க பிளாஸ்டிக் போடப்பட்ட நிலையில் அவருடைய கண்கள் மட்டுமே தெரிய.. அதிலேயே தன்னுடைய நடிப்பை காண்பித்து இருக்கிறார்.
குழந்தைகள் மீதான கண்டிப்பு, தப்பிக்க வழி இல்லாமல் இருப்பது… சுப்பிரமணிய சிவாவிடம் மாட்டிக் கொண்டு முழிப்பது என்று அவருடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை காண்பித்து இருக்கிறார்.
அனுமிதா, அனுஷிதா என்ற இரட்டை சகோதரிகள் படம் முழுவதும் திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார்கள். திரும்பி வந்த அம்மாவின் நடவடிக்கையால் குழம்பிப் போய் இது நம்ம அம்மா இல்லை; வேறு யாரோ என்ற உண்மையை அவர்கள் வெளிப்படுத்துவதும், வீட்டிலிருந்து தப்பிப்பதற்காக அவர் செய்கின்ற சில நடவடிக்கைகள் ஒரு சஸ்பென்ஸ், திரில்லரை அழகாக கொண்டு வந்திருக்கிறது.
நல்லவரா கெட்டவரா என்பதே தெரியாமல் எப்போதும் சந்தேகத்துடனே பார்ப்பது போன்று ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சுப்பிரமணிய சிவா. அவருடைய இயல்பான நடிப்பு அவர் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு இருக்கிறது. அந்த வகையில் இந்தப் படத்தில் சுப்ரமணிய சிவாவின் கேரக்டர் சிறப்பு.
இசையமைப்பாளர் ஜி.கே.வி. பாடல்களில் கோட்டை விட்டாலும் பின்னணி இசையில் பயமுறுத்தலோடு கூடிய பார்வையை நம்மிடம் இருந்து பெற்று இருக்கிறார்.
வெறும் ஒன்றரை மணி நேர படமாக இந்தப் படத்தை மிகவும் க்ரிப்பாக கொடுத்திருக்கிறார் படத் தொகுப்பாளர்.