‎ சாவி – திரைப்பட விமர்சனம்

உதய தீப், தனது தந்தையை தன் இரண்டு மாமன்கள் தான் கொலை செய்துவிட்டதாக நினைத்து அவர்கள் மீது ஆத்திரமாக இருக்கிறார். அதேவேளை அதில் ஒரு மாமனின் மகளை காதலிக்கிறார். அந்த மாமனும் விபத்தில் இறந்து போகிறார். துக்க வீட்டில் அசதியில் அனைவரும் தூங்கி விட, அந்த பிணம் காணாமல் போகிறது. காணாமல் போன பிணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்குகிறது.

போலீசார் விசாரணை நடத்தி வரும் வேளையில் அந்த வீட்டில் இன்னொரு மரணம் நிகழ்கிறது. இந்த தொடர் மரணங்களின் பின்னணி என்ன? காணாமல் போன பிணம் என்ன ஆனது? என்பதே மீதி கதை.

நாயகனாக நடித்திருக்கும் உதய தீப் அலட்டல் இல்லாத நடிப்பால் அலங்கரிக்கிறார். எதையும் எளிதாக கடந்துபோகும் அவரது கதாபாத்திரம் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது. போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஆதேஷ் பாலா, விசாரணை என்ற பெயரில் அடிக்கும் லூட்டிகள் சிரிப்புக்கு உத்தரவாதம்.

யாசர், மாஸ்டர் விஜய், கவிதா சுரேஷ், பிரேம் கே.சேஷாத்ரி என அனைவருமே கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். பூபதி வெங்கடாசலத்தின் ஒளிப்பதிவும், சரண் ராகவன் – வி.ஜே.ரகுராமின் இசையும் படத்துடன் ஒன்ற வைக்க முயற்சிக்கிறது.காட்சிகளை யூகிக்க முடிவது பலவீனம். சாதாரண ஒரு விஷயத்தை வைத்து, முடிந்தளவு சஸ்பென்ஸ் – திரில்லர் கதையாக, நகைச்சுவையுடன் சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் ஆண்டனி அஜித்.

Comments (0)
Add Comment