நயன்தாரா வேண்டுகோளை நிராகரித்த அறிமுக இயக்குநர்

கொரானா பொது முடக்க காலத்தில் திரையரங்குகள் செயல்படாமல் இருந்தன.அந்நேரத்தில் நேரடியாக (Over The Top) இணையதளத்தில் புதிய திரைப்படங்களை வெளியிடும் வழக்கம் உருவானது.

மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் டெஸ்ட்படத்தை அறிமுக இயக்குநர் சசிகாந்த் இயக்கியுள்ள இந்த படம் ஏப்ரல் 4 ஆம் தேதி நேரடியாக இணையத்தில் வெளியிடப்பட உள்ளது.

2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப்படம் மூலம் தயாரிப்பு நிறுவனமாக தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகமான நிறுவனம் ஒய்நாட்ஸ்டுடியோஸ்.

அதன்பின், இறுதிச்சுற்று, விக்ரம்வேதா, தேசியவிருது பெற்ற மண்டேலா உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளது அந்நிறுவனம்.

அந்நிறுவனத்தைத் தொடங்கி நடத்திக் கொண்டிருப்பவர்தான் சசிகாந்த்.முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவாஜியின் மகனான அவர், ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக தன் அடையாளத்தை அழுத்தமாகப் பதித்துள்ளார்.

இப்போது அவர் இயக்குநராக அறிமுகமாகும்.படம்தான் டெஸ்ட்.

படம் தயாராகி வெளியீட்டுக்கும் வந்துவிட்டது.

இந்நிலையில் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நயன்தாரா, இந்தப்படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிடாமல் முதலில் திரையரங்குகளில் வெளியிடுங்கள் என்று கோரிக்கை வைத்தாராம்.

திரையரங்குகள்தாம் நடிகர் நடிகையரின் சந்தை மதிப்பைத் தீர்மானிப்பவை.அண்மைக்காலமாக நயன்தாரா நடிப்பில் வெளியான படங்கள் தோல்வி அடைந்து வரும் சூழலில் இந்தப்படம் நன்றாக ஓடும் என்கிற நம்பிக்கை இருந்திருக்கிறது.அது அவருடைய சந்தை மதிப்புக்கு நல்லது என்பதால் இந்தக் கோரிக்கையை வைத்திருக்கிறார்.

ஆனால் அதை முற்றாக நிராகரித்துவிட்டு நேரடியாக இணையத்தில் வெளியிடுகிறார் இப்படத்தின் தயாரிப்பாளராகவும் இருக்கும் சசிகாந்த்.

ஏன் அப்படி? முதன்முறை இயக்குநராகியிருக்கும் அவர் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றால் அவருக்கும் நல்ல வசூலோடு நல்ல இயக்குநர் என்ற நற்பெயரும் கிடைக்குமே? அப்படியிருக்கும்போது ஏன் இப்படிச் செய்கிறார்? என விசாரித்த போது….

இந்தப்படத்தை எடுத்து முடித்ததுமே நேரடியாக இணையத்தில் வெளியிட்டால் அதிகத் தொகை கிடைக்கும் என்று நெட்ஃப்ளிக்ஸ் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

அவர்கள் தருவதாகச் சொன்ன தொகை சுமார் 39 கோடி என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் தலைமையகத்துக்கே நேரடியாகச் சென்று பேசியிருக்கிறார் சசிகாந்த்.அதன் விளைவு இந்தப்படத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்ய சுமார் 55 கோடி தருவதாக அந்நிறுவனம் ஒப்புக்கொண்டிருக்கிறது.

இதனால் சுமார் பத்திலிருந்து பதினைந்து கோடி வரை அவருக்கு இலாபம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.திரையரங்குகளில் வெளியிட்டால் அதற்கான விளம்பரச் செலவு மற்றும் ஒளிபரப்புக் கட்டணம் எல்லாம் செய்து அதன்பின் கிடைக்குமென எதிர்பார்க்கும் லாபத்தை எந்தச் செலவும் அலைச்சலும் இல்லாமல் கொடுப்பதாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டதால் அதை அப்படியே ஏற்றுக்கொண்டுவிட்டார்

சசிகாந்த் என்று சொல்கிறார்கள்.

இதனால்தான் நயன்தாரா எவ்வளவோ கேட்டும் அவர் மறுத்துவிட்டார் என்கிறார்கள்.

Comments (0)
Add Comment