பராசக்தி வெளியிட தடையில்லை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு அதிர்ச்சி தெரிவித்து அறிக்கை வெளியிட் ராஜேந்திரன்

சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா,ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பராசக்தி.ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் 2026 ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், தனது செம்மொழி என்ற கதையைத் திருடி தயாரிக்கப்பட்டுள்ள இந்தப்படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என இணை இயக்குநர் கே.வி.ராஜேந்திரன், சென்னை

உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வுமுன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாக வைத்து, செம்மொழி என்ற பெயரில் கதையாக எழுதி, 2010 ஆம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டது. அந்தக் கதையைப் பயன்படுத்தி பராசக்தி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் கதாசிரியர் என பட இயக்குநர் சுதா கொங்கரா பெயரைப் பயன்படுத்தத் தடை விதிக்கவேண்டும். படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் புருஷோத்தமன் வாதிட்டார்.

இயக்குநர் சுதா கொங்கரா மற்றும் படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், அரவிந்த் பாண்டியன் மற்றும் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர், பராசக்தி படத்தில் கதையை 2020 ஆம் ஆண்டு இயக்குநர் பதிவு செய்திருக்கிறார். மனுதாரரின் செம்மொழி படக் கதைக்கும், பராசக்தி படக் கதைக்கும் திரைக்கதைக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை.

படத்தின் கதையைத் திருடி இருப்பதாகக் கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள படத்துக்குத் தடை விதித்தால் பெருத்த பொருளாதார இழப்பு ஏற்படும் என வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பராசக்தி படம் தயாரிப்பு குறித்து 2024 ஆம் ஆண்டு தகவல் தெரிந்தும் 2025 டிசம்பர் மாதம் தான் மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார் எனக் கூறி படத்தை வெளியிடத் தடை விதிக்கமுடியாது எனக் கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

பராசக்தி படத்தின் கதையையும் செம்மொழி கதையையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்தும், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் அறிக்கையை இதுவரை தாக்கல் செய்யவில்லை என்பதால் அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நீதிபதி உத்தரவிட்டு, பிரதான வழக்கின் விசாரணையை ஜனவரி 28-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

இந்த உத்தரவுக்குப் பிறகு படக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

பராசக்தி திரைப்படத்தின் வெளியீட்டைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மாண்புமிகு நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.அனைத்துத் தரப்பினரின் விரிவான வாதங்களைக் கேட்ட பிறகு, மாண்புமிகு நீதிமன்றம் பராசக்தி திரைப்படத்தின் வெளியீட்டைத் தடுக்க மறுத்துவிட்டது. படம் 10.01.2026 அன்று வெளியாகும். இயக்குநர் சுதா கொங்கரா சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன்,  சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தயாரிப்பாளர் டான் பிக்சர்ஸ் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியனும் ஆஜராகினர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுதாரர் கே.வி.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

பராசக்தி திரைப்படம் தொடர்பான நிலுவையிலுள்ள காப்புரிமை விவகாரத்தில் மனுதாரராக, இன்று இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

இது ஒரு தனிப்பட்ட வழக்கு மட்டுமல்ல. சொற்களுக்கு மரியாதை உண்டு என்று நம்பும் ஒரு எழுத்தாளரின் குரல் இது.

எழுத்தாளர்களைக் காக்க உருவான அமைப்புகள், சோதனை நேரத்தில் அந்த மரியாதையைக் கைவிடக்கூடாது.மாண்புமிகு நீதிபதி
திரு.S.K.ராமமூர்த்தி தலைமையிலான மாண்புமிகு நீதிமன்றம்,முன்பே வழங்கிய உத்தரவுகளின் தொடர்ச்சியாக,தென் இந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (SWAN) தனது விசாரணை அறிக்கை / கருத்துக் கடிதத்தை மூடப்பட்ட உறையில் (sealed cover) 28.01.2026 அன்று அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

SWAN விசாரணை அறிக்கை / கருத்துக் கடிதத்தை சமர்ப்பிக்கவில்லை.இதைவிட மேலும் அதிர்ச்சியளிப்பது என்னவென்றால், விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அனுப்பப்பட்ட நீதிமன்ற நோட்டீஸைப் பெறுவதற்கே SWAN மறுத்தது. எழுத்தாளர்களைக் காக்க வேண்டிய ஒரு அமைப்பு நீதிமன்ற நோட்டீஸையே பெற மறுக்கும்போது, அது சாதாரண தாமதமாக இல்லை.அது பொறுப்பு மற்றும் கணக்குப்படுத்தலின் கடுமையான சிதைவாக மாறுகிறது.

இதுவும் போதாதென்று,பிரதிவாதிகள் இன்று தங்களின் முழு திரைக்கதையை சமர்ப்பிக்கவில்லை.அதனால் இப்போது நாம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு “இல்லாமைகளின் அரங்கில்” நிற்கிறோம்.

எழுத்தாளர்கள் சங்கத்திடமிருந்து விசாரணை அறிக்கை இல்லை. பிரதிவாதிகளிடமிருந்து முழு திரைக்கதை இல்லை. மேலும், நீதிமன்ற நோட்டீஸையே பெற மறுத்துள்ளனர்.அப்படியிருக்க, ஒரு கேள்வி நியாயமாக எழுகிறது.

ஒப்பீட்டிற்குத் தேவையான ஆவணங்களே சமர்ப்பிக்கப்படாமல், நீதிமன்ற நோட்டீஸையே பெற மறுக்கும் சூழலில், மாண்புமிகு நீதிமன்றம் எந்த அடிப்படையில் அர்த்தமுள்ள இடைக்கால பாதுகாப்பு உத்தரவை—அல்லது தடை உத்தரவை—பரிசீலிக்க முடியும்?

நீதிமன்றம் சுலோகங்களின் மீது இயங்காது.அது பதிவுகளின் மீது இயங்கும்.அது ஒப்பீட்டின் மீது இயங்கும்.அது சரிபார்ப்பின் மீது இயங்கும்.அறிக்கையும் திரைக்கதையும் இல்லாமல், இந்த விவகாரம் உண்மைச் சோதனையிலிருந்து விலகி “மறுப்புகளின் மூடுபனிக்குள்” தள்ளப்படுகிறது—எழுத்தாளரின் குறை நேரத்தால் காயப்படும்படி.எழுத்தாளருக்குச் “நேரம்” நடுநிலையல்ல.

ஒரு வெளியீடு திரும்பப் பெறக்கூடியது அல்ல.ஒருமுறை திரைப்படம் வெளியுலகில் வெளிவந்துவிட்டால், நகலெடுக்கப்பட்டதாக கூறப்படும் வெளிப்பாடு நிரந்தரமாகப் பரவிவிடும். ஒருமுறை ஒலித்த மணியை மீண்டும் ஒலிக்காமல் செய்யமுடியாது. சேதம் பொதுச் சத்தியமாகிறது; தீர்வு தனிப்பட்ட சமாதானமாகச் சுருங்குகிறது.SWAN ஒரு சாதாரண பார்வையாளர் அல்ல.அது ஒரு எழுத்தாளர்கள் நிறுவனம். நீதிமன்ற உத்தரவின்படி விசாரணை முடிவை சமர்ப்பிக்காமல், மேலும் நீதிமன்ற நோட்டீஸையே பெற மறுப்பது, எழுத்தாளர்களின் நம்பிக்கையையே சிதைக்கிறது—உருவாக்கத்திற்கும் சுரண்டலிற்கும் இடையில் ஏதோ ஒரு பாதுகாப்புக் கோட்டை உள்ளது என்று நம்பும் ஒவ்வொரு எழுத்தாளரின் நம்பிக்கையையும்.இந்த உண்மைகளை எழுத்தாளர் சமூகத்திற்கும் பொதுமக்களுக்கும் பதிவாக வைக்கிறேன்:
– SWAN நீதிமன்றம் உத்தரவிட்ட விசாரணை அறிக்கை / கருத்துக் கடிதத்தை சமர்ப்பிக்கவில்லை.

– அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அனுப்பப்பட்ட நீதிமன்ற நோட்டீஸைப் பெற SWAN மறுத்தது.
– பிரதிவாதிகள் முழு திரைக்கதை / கதையை சமர்ப்பிக்கவில்லை.
– இவை இல்லாமல், அர்த்தமுள்ள நீதிமன்ற ஒப்பீடு—அதனால் எந்தச் செயல்படும் இடைக்கால பாதுகாப்பும்—தடைபடுகிறது.

நான் சட்டப்படி முழுமையாக நீதிமன்ற வழிமுறைகள் மூலமாகவே என் உரிமைகளைத் தொடர்வேன். இந்த ஆவண சமர்ப்பிக்காமை மற்றும் உத்தரவு பின்பற்றாமை குறித்து, நீதி மற்றும் நியாய நடைமுறை கருதி மாண்புமிகு நீதிமன்றம் தக்க பார்வை எடுக்கும் என நம்புகிறேன்.ஏனெனில் ஒரு எழுத்தாளரின் படைப்பு, மௌனத்தின் வாசலில் அனாதையாக விட்டுவிடப்படக் கூடாது.உண்மையை ஒத்திவைக்கும் போது சட்டம் உதவியற்ற பார்வையாளராக இருக்கவும் கூடாது.

இவ்வாறு வருண் ராஜேந்திரன் கூறியிருக்கிறார்.

சினிமா வலை – தமிழ்த் திரைப்படம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள்…

Cienamavalai
Site Terms
Privacy
Cookies Policy
Contact Us

Comments (0)
Add Comment