“படப்பிடிப்புத் தளத்தில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால், விஜய் அதற்கான நேரமே தரமால் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தி முடித்தார். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளத்தில் 1500 பேர் நிச்சயம் இருப்பார்கள்” என நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்-1’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் அருண் விஜய், “பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்னுடைய முதல் படம் ‘மிஷன் சாப்டர்-1’ என்பது எனக்கு மிகவும் சந்தோஷம். நாம் என்னதான் உழைப்பைக் கொடுத்திருந்தாலும் படம் சரியான தேதியில் வெளியாவது என்பது முக்கியமான விஷயம்.நான் இதுவரை நடித்தப் படங்களிலேயே ‘மிஷன் சாப்டர்1’ தான் அதிக பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்ட படம். ஆக்ஷன், எமோஷன் என எல்லாமே இதில் சரியாக வந்திருக்கிறது. சிறந்த திரையரங்க அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும். ஏமி ஜாக்சன், நிமிஷா எனப் பலரும் இதில் நடித்துள்ளனர்.ஜீவி பிரகாஷின் இசை இந்தப் படத்திற்குப் பெரிய பலம். லண்டன், சென்னை ஆகிய இடங்களில் இதை படமாக்கினோம். நாலரை ஏக்கரில் மிகப்பெரிய ஜெயில் செட்டை இங்கு உருவாக்கினோம். சில காரணங்களால் அது சேதமானது. அப்போது கூட செலவைப் பற்றி பொருட்படுத்தாது லைகா நிறுவனம் எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்தார்கள் எனக் கூறினார்.