தமிழகத்தை உலுக்கிய உண்மையான கொலைச் சம்பவம் ‘விழி திற தேடு’ என்கிற பெயரில் படமாகிறது.
இப்படத்தை வி. என் .ராஜா சுப்பிரமணியன் தயாரித்து இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குநர் வி.என்.ராஜா சுப்பிரமணியன் பேசும்போது, “நாட்டில் ஒவ்வொரு குற்றச் செயல் நடக்கும்போதும் மக்கள் அதை ஒரு புதிரோடுதான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், பல சம்பவங்களில் குற்றவாளிகள் பிடிபடுவதில்லை. அப்படி பிடிபட்டாலும் தப்பித்து விடுகிறார்கள். சில நேரம் தப்பிக்க விட்டு விடுகிறார்கள்.
இதில் எங்கே பிரச்சினை உள்ளது? காவல்துறை விசாரிக்கும் விதத்திலா..? துப்பறியும் கோணத்தில் உள்ள கோளாறா..? ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதில் மோசடிகளா..? அல்லது சட்டத்தில் உள்ள ஓட்டைகளா..? என்று மக்களிடம் பல்வேறு கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன.
எவ்வளவு கிடுக்கிப்பிடி சட்டங்கள் வந்தாலும், அதில் உள்ள இடைவெளி வழியே குற்றவாளிகள் தப்பித்துக் கொள்கிறார்கள். தொழில் நுட்பங்களைக் காவல் துறையில் பயன்படுத்தப்படும் விதத்தைவிட குற்றவாளிகள் மிகவும் லாவகமாகப் பயன்படுத்திக் குற்றங்களைச் செய்கிறார்கள். இதை மிகவும் நுணுக்கத்தோடு இப்படம் பேசுகிறது.
குற்றவாளிகள் தங்களை காப்பாற்றிக் கொள்ள, எப்படி அரசியல் பின்புலத்தில் ஒளிந்து கொள்கிறார்கள்..? அப்போது காவல்துறை என்ன செய்கிறது..? போன்ற பலவற்றை இதில் பேசியிருக்கிறோம்.
இப்படி தமிழகத்தை உலுக்கிய ஒரு கொலைச் சம்பவத்தின் பின்னணியில் பல்வேறு கேள்விகளுடன் இப்படம் உருவாகியுள்ளது. இது குற்றங்கள், காவல்துறை, சட்டம், வழக்கு போன்றவற்றைப் பற்றிய வேறொரு புரிதலுக்கு வழிவகுக்கும் படமாக இருக்கும் என்று நம்புகிறேன்..” என்கிறார் .
இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இப்போது வெளியாகியுள்ளன.