கேம் சேஞ்ஜர் – மந்தமான முன்பதிவு

ஷங்கர் இயக்கத்தில்,ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குப் படம் ‘கேம் சேஞ்ஜர்’. இப்படம் பல மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 2025ஜனவரி 10ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்திற்கான முன்பதிவு இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டிருக்கிறது. தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இன்னும் ஆரம்பமாகவில்லை. ‘புஷ்பா 2’ படத்தின் பிரிமியர் காட்சியில் ஏற்பட்ட நெரிசலில் பெண் ஒருவர் மரணமடைந்தார். அதையடுத்து தெலங்கானாவில் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதியில்லை, டிக்கெட் கட்டண உயர்வு இல்லை என அம்மாநில அரசு அறிவித்தது.

இதனால், ‘கேம் சேஞ்ஜர்’ படத்திற்கு தெலுங்கானா மாநிலத்தில் இன்னும் சிறப்புக் காட்சி, கட்டண உயர்வுக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆனால், ஆந்திர மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தெலுங்கானா அரசிடம் எப்படியாவது அனுமதி பெற வேண்டும் என படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு முயற்சித்து வருகிறார் என கூறப்படுகிறது. அதனால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் முன்பதிவு ஆரம்பிப்பதை தள்ளி வைக்கச் சொல்லியிருக்கிறாராம்.

மற்ற மாநிலங்களில் ‘கேம் சேஞ்ஜர்’ படத்திற்கான முன்பதிவு எதிர்பார்த்த வகையில்  இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா,ஹைதராபாத், ராஜமுந்திரி, மும்பை ஆகிய இடங்களில் மட்டுமே இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் எந்த வித நிகழ்ச்சியும் நடக்கவில்லை. அதனால், அகில இந்தியா வெளிச்சம் இப்படத்திற்குக் குறைவாகவே இருக்கிறது.